பிரதமர் மோடியுடன் ஷேக் ஹசீனா சந்திப்பு: விரைவில் புதிய இந்திய தூதரகம் திறப்பு
- வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.
- தலைநகர் டெல்லி வந்த ஷேக் ஹசீனா இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.
புதுடெல்லி:
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா இரண்டு நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லி வந்த ஷேக் ஹசீனா இன்று ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு அவரை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
அதன்பின், இருநாட்டு உறவு, வர்த்தகம், நீர்வளம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் இரு நாடுகளைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இரு நாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:
இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற வரும் வங்காளதேசத்தினர் எளிதில் விசா பெற இ-மருத்துவ விசா நடைமுறை அமல்படுத்தப்படும்.
வங்காளதேசத்தில் இருந்து இந்திய வழியாக நேபாளத்திற்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இவை இரு நாடுகள் இடையே வளர்ந்து வரும் உறவை எடுத்துக்காட்டுகிறது.
வங்காளதேசத்தின் வடக்கு-மேற்கு பகுதி மக்கள் பலன் பெறும் வகையில் அந்நாட்டின் ரங்பூர் பகுதியில் புதிய இந்திய தூதரகம் திறக்கப்படும்.
இந்தியாவின் பெரிய வளர்ச்சி கூட்டாளியாக வங்கதேசம் உள்ளது. அந்நாட்டுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் இந்தியா-வங்காளதேசம் இடையிலான ஆட்டத்தில் இரு தரப்பிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, இரு நாட்டு உறவை வலுப்படுத்துவதற்காக பிரதமர் மோடி வங்காள தேசத்திற்கு வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்தார்.