இந்தியா (National)

அமலாக்கத்துறை மீண்டும் புகார்: 16-ந்தேதி ஆஜராகும்படி கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் சம்மன்

Published On 2024-03-07 05:18 GMT   |   Update On 2024-03-07 05:18 GMT
  • ஏற்கனவே நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
  • கெஜ்ரிவால் 8-வது முறையாக ஆஜராகாத நிலையில், தற்போது 2-வது முறையாக நீதிமன்றத்தை நாடியுள்ளது.

டெல்லி மாநில அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில், அம்மாநில முதல்வரான அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்தது.

இதனால் அவருக்கு சம்மன் அனுப்பியது. தனக்கு அனுப்பிய சம்மன் சட்ட விரோதமானது எனக்கூறி அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார்.

தொடர்ந்து ஏழு முறை இவ்வாறு மறுப்பு தெரிவித்தார். இதனால் அமலாக்கத்துறை நீதிமன்றத்தை நாடியது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கையோடு 8-வது முறையாக சம்மன் அனுப்பியது. அப்போது, நேரில் ஆஜராகமாட்டேன். காணொலி வாயிலான ஆஜராக சம்மதம் தெரிவித்தார். ஆனால் அமலாக்கத்துறை அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்தது. இந்த மனுவில் நாங்கள் பலமுறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகவில்லை. இதனால் ஆஜராக உத்தரவிடும்படி மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணையில், வருகிற 16-ந்தேதியில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.

விசாரணை என்ற பெயரில் அழைத்து கைது செய்ய அமலாக்கத்துறை முயற்சி செய்கிறது. இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க நினைக்கிறது என பா.ஜனதா மீது ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News