அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்
- பிரதமரின் இந்த பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடாகி வருகிறது.
- கடந்த 2014-ம் ஆண்டு மடிசன் சதுக்கத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றி இருந்தார்.
நியூயார்க்:
ஐ.நா. பொதுச்சபை கூட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 24-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நியூயார்க்கில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி 26-ந்தேதி பிற்பகல் உரை நிகழ்த்துகிறார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்கிறார். பிரதமரின் இந்த பயணத்தில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடாகி வருகிறது.
இதில் முக்கியமாக நியூயார்க் லாங் தீவில் உள்ள நசாவு கொலிசிய மைதானத்தில் செப்டம்பர் 22-ந்தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
கடந்த 2014-ம் ஆண்டு மடிசன் சதுக்கத்தில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றி இருந்தார். அதன்பின்னர் சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின் இந்த பிரமாண்ட கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் நவம்பர் 5-ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பிரதமர் மோடியின் இந்த பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.