இந்தியா

கூட்ட நெரிசலுக்கு சில சமூக விரோதிகள்தான் காரணம்- சாமியார் போலே பாபா

Published On 2024-07-03 14:57 GMT   |   Update On 2024-07-03 15:01 GMT
  • கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்தனர்.
  • போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் கூட்ட நெரிசல்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தை தொடர்ந்து போலே பாபா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், " சில சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள மூத்த வழக்கறிஞர் டாக்டர் ஏ.பி சிங்கிடம் தெரிவித்துள்ளேன்.

மேலும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பர்மாத்மாவிடம் பிரார்த்திக்கிறேன்" என்றார்.

இதற்கிடையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை தொடங்கப்படும் என்றும், ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

Tags:    

Similar News