சிறப்புக் கட்டுரைகள்

பெண் வடிவில் வந்த பெருமாள்!

Published On 2024-06-27 09:27 GMT   |   Update On 2024-06-27 09:27 GMT
  • முருகனை அருணகிரிநாதரும் பாடியுள்ளார்.
  • மேரு மலையின் சிகரம் மூன்றாகப் பிளந்து விழுந்தது.

தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள், காவிரித் தென் கரையில் அமைந்துள்ள தலம், பெருவேளூர். திருப்பெருவேளூர் என்னும் தொன்மைப் பெயர் கொண்ட இவ்வூர், இன்று அய்யம்பேட்டை என்று வழங்கப்படுகிறது.

இதே மாவட்டத்தில் வேறொரு அய்யம் பேட்டை இருப்பதால் இவ்வூரை மணக்கால் அப்பம்பேட்டை என்றழைக்கின்றனர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் இருவராலும் பாடப்பெற்ற பழம் பதி.

சூரனை சம்ஹாரம் செய்தபின், அந்த தோஷம் நீங்குவதற்காக முருகப்பெருமான் சிவபெருமானை வழிபட சில தலங்களுக்குச் சென்றார். திருச்செந்தூரில் இருந்து கீழ்வேளூர், திருமுருகன்பூண்டி, வைத்தீஸ்வரன் கோவில் மற்றும் இத்தலமாகிய திருப்பெருவேளூர் ஆகியன அத்தகைய தலங்கள்!

இவ்வாலயத்து இறைவன் சுயம்புவானவர். இத்தலத்து முருகனை அருணகிரிநாதரும் பாடியுள்ளார். ஆலயத்தின் பின்புறம் உள்ள தீர்த்தம் சரவணப்பொய்கை என்றே அழைக்கப்படுகிறது.

வாயு பகவானுக்கும் ஆதிசேஷனுக்கும் இடையே 'யார் பெரியவர்? என்ற போட்டி நடந்ததாம். அப்போது மேரு மலையின் சிகரம் மூன்றாகப் பிளந்து விழுந்தது. அதில் ஒன்று இந்த தலத்தில் விழுந்து அதுவே காலப்போக்கில் சுயம்பு லிங்கமாக வெளிப்பட்டதாம். இந்த ஐதீகத்தின் காரணமாக, இத்தல இறைவனை வழிபட்டால், கயிலை மலையை வணங்கிய புண்ணியம் கிடைக்கும் என்கிறார்கள்.

மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம், ஐந்து கலசங்களுடன் கிழக்கு நோக்கி கனகம்பீரமாக நிற்கிறது. கோபுர வாயிலைத் தாண்டி உள்ளே நுழைந்தால், தரை தளத்தில் பலிபீடம், வானளாவி நிற்கும் கொடிமரம், அடுத்து நந்தியம் பெருமான் அமர்ந்திருக்கும் நந்தி மண்டபம்.

இது மாடக்கோவில் வகையைச் சேர்ந்தது. கோச்செங்கட் சோழன் கட்டியதாக வரலாறு. இறைவன், அபிமுக்தீஸ்வரர். இவருக்கு பிரியா ஈஸ்வரர் என்றும் பெயருண்டு.

ஆலயத்து நந்தியம்பெருமானை வணங்கி விட்டு நிமிர்ந்தால், எதிரே இடதுபுறம் உள்ள வாசல் வழியே 18 படிகள், கட்டுமலை மேலே செல்கின்றன. படியேறி கோவிலுக்குள் நுழைகிறோம். எதிரே சோமாஸ்கந்த மூர்த்தம் அவரை வணங்கி, வலதுபுறம் உள்ள வாசல் வழியே நுழைந்தால், மகா மண்டபத்தில் தெற்குப் பார்த்து நடராஜர், சிவகாமி அம்மையுடன் அருள் தோற்றம் அளிக்கிறார்.

கருவறையில் கிழக்கு நோக்கிய நிலையில் சுயம்பு லிங்கமாக அபிமுக்தீஸ்வரர். சுயம்புலிங்க ரூபங்களுக்கே அலாதியான ஒரு வசீகர சக்தி இருப்பதை உணர முடியும். இந்த ஈசனும் அதை நம் உள்மனதுக்கு உணர்த்துகிறார்.

அவரை நெஞ்சார தரிசித்து, பரவசத்தோடு மீண்டும் படியிறங்கி கீழே தரை தளத்துக்கு வந்து பிரகாரத்தை வலம் வரத் தொடங்கினால், முதலில் கன்னி மூலையில் எதிர்ப்படுபவர் பிரதான விநாயகர். இவர் தனிச்சந்நதியில் வீற்றுள்ளார். அதுபோல் தெற்கு நோக்கிய தனிச்சந்நதியில் தட்சிணாமூர்த்தி பிரதான விநாயகருக்கு பக்கத்து சந்நதியில் வைகுந்த நாராயணப் பெருமாள்.

தாருகா வனத்தில் இருந்த முனிவர்களின் ஆணவத்தை அடக்கும் பொருட்டு சென்றார் சிவபிரான். அப்போது விஷ்ணு மோகினி வடிவம் எடுத்துச் சென்றார். தன்னுடைய பெண் வடிவத்தில் இருந்து, ஆண் உருவம் பெற இத்தலத்து இறைவனை திருமால் வந்து வழிபட்டார். அதன் நினைவாக இங்கு திருமால் தனிச்சந்நதி கொண்டு எழுந்தருளி உள்ளார் என்கிறது, தலபுராணம்.

கருவறை விமானத்தின் பின்புறம் சுப்பிரமணியர் வள்ளி - தெய்வானை சமேதராக விளங்குகிறார். இவர்தான் அருணகிரியாரால் பாடப்பெற்றவர்.

இவ்வாலயத்தின் மற்றொரு விசேஷம், இங்கே பிரகாரத்தில் இரண்டு சண்டிகேஸ்வரர்கள். இருவருக்கும் தனித்தனிச் சந்நதியும்கூட. பிரத்யேக சண்டிகேஸ்வரர் கல்லில் வடிக்கப்பட்டு, யோக நிலையில் காணப்படுகிறார். இவருக்கு யோக சண்டிகேஸ்வரர் என்றே பெயர்.

கோமுகியின் அருகே ஆகம விதிப்படி மற்றோர் சண்டி கேஸ்வரர் கோஷ்டத்தில் துர்க்கைக்கும் பெரிய அளவில் தனிச்சந்நதி உள்ளது.

தரைதளத்தில் இறைவன் கருவறைக்கு நேர் இடது திசையில் அம்பாள் சந்நதி, அம்மையின் பெயர் - அபினாம்பிகை. இவருக்கு ஏலவார் குழலி என்றும் பெயருண்டு. ஆலய பிராகாரத்தில் மேற்கு நோக்கிய நிலையில் மகாலிங்கம், சரஸ்வதீஸ்வரர், ஜம்புகேஸ்வரர், ஐராவதீஸ்வரர், பிரம்மபுரீஸ்வரர் என ஐந்து சிவலிங்கங்கள். இவற்றுள் சரஸ்வதி பூஜித்த லிங்கம், 'சரஸ்வதீஸ்வரர்' என்னும் பெயரில் அமைந்துள்ளது.

இவர் தனி அலங்காரத்துடன் விளங்குகிறார். தனிச்சிறப்பு மிக்கவர். முன்னொரு காலத்தில் வாழ்ந்த ஒரு சிவபக்தர், தன் புதல்வனின் பேச இயலாத குறைபாட்டை நீக்கும்படி தினமும் இந்த ஈசனை அபிஷேகம் செய்து ஆராதித்து வந்தார். அவரது குழந்தைக்குப் பேசும் திறனை அளித்து, அருள்புரிந்தார் ஈசன்.

குழந்தைக்கு பேச்சுத்திறன் குறைபாடு இருந்தாலோ அல்லது பெரியவர்களாகியும் சிலருக்கு சரிவர பேச வராமல் கஷ்டப்பட்டாலோ, இந்த சரஸ்வதீஸ்வரரை வழிபட்டு பிரார்த்தித்துக் கொண்டால், விரைவில் பேச்சுக் குறைபாடு நீங்கி விடுகிறது.

கிழக்கு பிராகாரத்தில் பைரவர், கால பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள்.

இத்தலம் சுக்ர நீச நிவர்த்தித் தலம். ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைவாக இருந்தால் ஏற்படக்கூடிய முன்னேற்றத் தடையை இத்தலத்து ஈசனை வழிபட்டால், குறை நிவர்த்தியாகிறது.

அசுர குருவான சுக்ராச்சாரியார் ஒருமுறை தனது ஆற்றல்கள் அனைத்தையும் இழந்தார். பின்னர், இந்தத் தலத்திற்கு வந்து, சரவண தீர்த்தத்தில் நீராடி, அம்பிகையை நோக்கித் தவமிருந்தார்.

அன்னையின் அருட் கடாட்சம் கிட்டியதால், சுக்ராச்சாரியாருக்கு மீண்டும் அனைத்து ஆற்றல்களும் பூரணமாகக் கிடைத்தது.

சுக்ராச்சாரியார் போலவே மிருகண்டு மகரிஷி, பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோரும் இத்தலத்து இறைவனை வழிபட்டு நற்பேறு அடைந்துள்ளனர். இதன் அடையாளமாக இங்குள்ள கோஷ்டத்தில் மிருகண்டு முனிவருக்கும் சிலா ரூபம் வைக்கப்பட்டுள்ளது.

மூன்று வயதிலேயே அதீத பேச்சுத்திறன், விவாதத்திறன், கவிபாடும் திறன் பெற்றிருந்த திருஞானசம்பந்தரே இத்தலத்து ஈசனை பிணியில்லார் தமக்கென்றும் கேடில்லார்' என மொழிகிறார். திங்கட்கிழமைகளில் இத்தலத்து சரஸ்வதீஸ்வரருக்கு தீபம் ஏற்றி வழிபட, பேச்சுக் குறைபாடுகள் நீங்குவது அனுபவ உண்மை.

ஊரின் நான்கு திசைகளிலும் காவல் தெய்வமான அய்யனார் கோவில்கள் உள்ளன. இதுவும் ஒரு சிறப்பு.

கந்த சஷ்டி சூரசம்ஹார விழா, வள்ளி தெய்வானை திருமணம், கார்த்திகை சோமவாரம், ஆருத்ரா தரிசனம், நவராத்திரி, சிவராத்திரி, குரு, ராகு-கேது மற்றும் சனிப்பெயர்ச்சி தினங்கள், வைகாசி விசாகம் ஆகியன இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

சுக்ரதோஷம் உள்ளவர்கள் வெள்ளிக் கிழமையிலும், பவுர்ணமி திதியிலும் அம்பிகையை பிரார்த்தித்து வழிபடவேண்டும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் தேய்பிறை பஞ்சமியில் ஈசனை வந்து வழிபட்டு நலம் பெறலாம்.

கும்பகோணத்தி இருந்து திருவாரூர் போகும் வழியில் குடவாசலை அடுத்துள்ளது, மணக்கால் அய்யம்பேட்டை. திருவாரூரில் இருந்து 15 கி.மீ. நன்னிலத்தில் இருந்து 10 கி.மீ.தொலைவு. பஸ் வசதி உண்டு.

Tags:    

Similar News