சிறப்புக் கட்டுரைகள்

நினைவாற்றல் அதிகரிக்க நினைவில் கொள்ள வேண்டியவை

Published On 2024-06-20 09:23 GMT   |   Update On 2024-06-20 09:23 GMT
  • ஆற்றல்தான் மனிதரின் பெரும்பாலான வெற்றி, தோல்விகளை உறுதிசெய்கிறது.
  • நினைவாற்றல் குறையும்போது வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்க நேர்கிறது.

ஒரு நிகழ்வையோ அல்லது செய்தியையோ நம் நினைவில் வைத்து, அதை தேவையான நேரத்தில் பயன்படுத்துவதுதான் நினைவாற்றல். இந்த ஆற்றல்தான் மனிதரின் பெரும்பாலான வெற்றி, தோல்விகளை உறுதிசெய்கிறது. நினைவாற்றல் குறையும்போது அவர் தனது வாழ்க்கையில் பல இன்னல்களைச் சந்திக்க நேர்கிறது. எனவே நினைவாற்றலின் வகை, அதை எப்படி அதிகரித்துக் கொள்வது? என்பது பற்றி இப்பகுதியில் பார்ப்போம்.

நினைவாற்றலை குறுகிய கால நினைவாற்றல், நீண்டகால நினைவாற்றல் என்று 2 வகையாகப் பிரிக்கலாம்

குறுகிய கால நினைவாற்றல்:

உடனடியாகக் கூறும் நினைவாற்றல்: அதாவது இப்போது ஒருவர் கூறிய செய்திகளை, அடுத்த வினாடியே அப்படியே கூறு வதாகும், எடுத்துக்காட்டுக்குத் தொலைபேசி எண்களை ஒருவர் சொல்லி முடித்ததும், அடுத்தவினாடியே திரும்பி அதையே சொல்வது. இந்த நினைவாற்றல் மூளையின் பிரண்டல் (Frontal) பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.

குறுகிய கால நினைவாற்றல்: இது 5 நிமிடங்கள் முதல் 1 மணிநேரத்திற்கு அல்லது ஒரு சில நாட்களுக்கு முன்னால் நடந்தவற்றை நினைவு கூர்வது. எடுத்துக்காட்டுக்குக் காலையில் என்ன உணவு எடுத்துக் கொண்டோம் என்பதை நண்பகல் வேளையில் நினைவு கூர்வது. இந்த நினைவாற்றல் மூளையில் ஹிப்போகாம்பஸ் (Hippocampus) என்னும் பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.

நீண்டகால நினைவாற்றல்:

சிறுவயதில் நடந்தவைகள் மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்னால் நடந்தவைகளை நினைவுகூர்வது. எடுத்துக்காட்டுக்குத் தற்போது உங்கள் வயது 40 என்று வைத்துக்கொண்டால், நீங்கள் படித்த பள்ளியின் பெயர், அப்போதைய நண்பர்கள், ஆகியவற்றை நினைவுகூர்வது. இந்த நினைவாற்றல் பெருமூளையில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது. இவை தவிர இன்னும் சில நினைவாற்றல் வகைகள் உள்ளன.

செயல் நடைமுறை நினைவாற்றல் :

சில வேலைகளை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பழகி அதன்படி அதைத் திறம்படச் செய்து முடிப்பது. எடுத்துக்காட்டுக்கு: ஊர்தி ஓட்டுவது, நீச்சல் அடிப்பது, உடை அணிவது, சமையல் செய்வது ஆகியவையாகும். இந்த நினைவாற்றலைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது மட்டுமே கடினமாக இருக்கும். அதில் தேர்ச்சி பெற்று விட்டால் அந்தச் செயலைச் செய்வதற்கு, நாம் அதிகத் துயர்கொள்ளத் தேவையில்லை.

நினைவுமறதி நோயின் முற்றிய நிலையில் கூட இந்த நினைவாற்றல் அவர்களுக்கு நிலைத்து நிற்கும். அதனால்தான் அவர்களால் ஊர்திகளை இயக்க முடியும், ஆனால் எங்குச் சென்று, எப்படித் திரும்பி வருவது என்பதை மறந்து விடுவார்கள். இந்த நினைவாற்றல் மூளையின் பேசல் கேங்கிலியா (Basal Ganglia) என்ற பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்ப டுகிறது.

உணர்வுகளுக்கான நினைவாற்றல் :

நம் வாழ்க்கையில், ஒரு சில நேரங்களில் நடக்கும் நிகழ்வுகளால் எதிர்மறை அல்லது நேர்மறை உணர்வுகள் பாதிக்கப்பட்டு, உணர்ச்சிகளின் உச்சத்திற்கு உந்தப்பட்டிருப்போம். இவை நம் நினைவில் எப்போதும் நீங்காமல் நிலைத்தி ருக்கும். அதே எதிர்மறையான நிகழ்வு மீண்டும் நடக்கும் போது, நம் மூளை, நம்மை எச்சரிக்கும் அல்லது நேர்மறையான (மகிழ்ச்சி) நிகழ்வாக இருந்தால் அதை அப்படியே செய்யத் தூண்டும். இந்த நினை வாற்றல் மூளையில் உள்ள லிம்பிக் வளையம் (Limbic Circute) என்ற தனிப்பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது.

காட்சிகளுக்கான நினைவாற்றல் :

ஓர் இடத்தில் இருந்து, வேறு ஓர் இடத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும், எப்படித் திரும்பி நம் வீட்டுக்கு வரவேண்டும் என்று நினைவில் கொள்வது. எடுத்துக்காட்டுக்கு, திருச்சியிலிருந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று, மீண்டும் திருச்சியிலுள்ள நம் வீட்டிற்குத் திரும்ப வேண்டும் என்றால், எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துச் சென்றோமோ, அதே வழியில் மீண்டும் திரும்பி வீட்டிற்கு வருவது இந்த நினைவாற்றல் கையில்தான் உள்ளது.

ஒரு சில பாதைகளைத் தவற விடும்போது, இந்த நினைவாற்றல்தான் நம்மை எச்சரிக்கை செய்து மீண்டும், சரியான வழியைத் தேர்ந்தெடுக்கச் செய்கிறது. இந்த நினைவாற்றல் நம் மூளையில் பரைட்டல் (Patietal Lobe) பகுதியில் இருந்து வெளிப்படுத்தப்படுகிறது. நினைவாற்றலின் வகைகள் பற்றிப் பார்த்தோம். அதைத் தொடர்ந்து நினைவாற்றலை எவ்வாறு அதிகரிப்பது என்று பார்க்கலாம்.

நினைவாற்றலை அதிகரிக்க:

நாம் படிப்பதற்கும் தேர்வுகளில் நிறைய மதிப்பெண்கள் எடுப்பதற்கும் ஒரு வேலையை விரைவாகச் செய்வதற்கும் என அனைத்திற்கும் இந்த நினைவாற்றல் மிகவும் தேவை. இதை அதிகரிக்கக் கண்டிப்பாக முயல வேண்டும். அதற்கான சில வழிமுறைகள் இதோ...

1.இரவு நேர ஆழ்ந்த உறக்கத்தின் போது நினைவாற்றல் வலுவடைகிறது.

2.வைட்டமின் "சி" உள்ள பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வது.

3.காய்கறி, கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது.

4.வாதுமைக் கொட்டைகள் நினைவுத்திறனை அதிகரிக்கக் கூடியவை. எனவே தினமும் இரண்டு வீதம் காலையில் எடுத்துக்கொள்வது.

5.விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிப்பது.

6.குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்கெடுப்பது.

7.காலையில் இருந்து இரவுவரை என்ன செய்தோம் என்பதை நினைவு கூர்வது.

8.புதிய கலைகளைக் கற்றுக்கொள்வது, குறிப்பாக இசை மற்றும் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது.

9.நாளும் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்வது.

10.ஏதாவது ஒரு விளையாட்டில் அல்லது செய்யும் வேலைகளில் மனத்தை நிலைநிறுத்தி விளையாடுவது / செய்வது.

11.மூச்சைக் கவனிப்பது.

12.ஒவ்வொரு நாளும் 20- நிமிடமாவது தியானம் செய்வது.

13.பல சிந்தனைகளை மனத்தில் கொண்டு, செய்யும் வேலையில் கவனம் இல்லாமல் இருப்பது மூளை நலனுக்கு நல்லதல்ல. ஒருநேரத்தில் ஒரு வேலையில் மட்டுமே கவனம் முழுவதையும் ஒருங்கிணைத்துச் செய்வதைத்தான் Mindful Living என்று கூறுகிறோம்.

14.மூச்சைக் கவனித்துக்கொண்டே தோப்புக்கரணம் போடுவது. தோப்புகரணத்தைச் சூப்பர் பிரைன் யோகா (Super Brain Yoga) என்று கூறுகிறோம்.

இதில் வலக் கையைக் கொண்டு இடக் காதையும், இடக் கையைக் கொண்டு வலக் காதையும் மாற்றிப் பிடிப்பதால், மூளையின் இரண்டு அரைக்கோளங்களும் தூண்டப்படுகின்றன. மேலும் ஞாபகத்திறன், ஒருங்கிணைப்புத் திறன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதைப் படிக்கும் குழந்தைகள் அன்றாடம் செய்வது நல்லது.

இந்த உண்மையை உணர்ந்த நம் முன்னோர்கள், குழந்தைகள் தவறு செய்தால் அல்லது மதிப்பெண் குறைந்தால் தோப்புக்கரணம் போடவைத்தனர், கோவில் சென்றால் சிறியவர் முதல் பெரியவர் வரை பிள்ளையாரைப் பார்த்துத் தோப்புக்கரணம் போடுவது என்று நம் வாழ்க்கையோடு தோப்புக்கரணத்தை இணைத்திருக்கிறார்கள்.

அவர்களின் கூர்த்தமதி போற்றத்தக்கது. மேற்கூறிய 14-வழி முறைகளைப் பின்பற்றுவதால், நம் மூளையில் உள்ள நினைவுத் திறனுக்கான பகுதிகள் தூண்டப்பட்டு, அனைத்து வகையான நினைவாற்றலையும் அதிகரித்து, வாழ்வை வண்ணமயமாக்கிக் கொள்ளலாம்.

எனைத்தானும் நல்லவை கேட்க!

மறதியை மறப்போம்!

நினைவாற்றலை வளர்ப்போம்!

Tags:    

Similar News