செய்திகள்

காலா படத்துக்காக கர்நாடகத்திடம் காவிரியை ரஜினி அடகு வைக்கிறார்- பி.ஆர்.பாண்டியன்

Published On 2018-06-07 04:53 GMT   |   Update On 2018-06-07 04:53 GMT
காலா பட பிரச்சனை காரணமாக காவிரியை ரஜினி கர்நாடகத்திடம் அடகு வைக்கிறார் என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார். #Kaala #Rajinikanth
திருவாரூர்:

திருவாரூரில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தை தொடர்ந்து பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு பிறகும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

வருகிற ஜூன் 15-ந் தேதி பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி சந்திக்க உள்ளார். ஆனால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க அமைச்சர்கள் கொண்ட குழுவை டெல்லி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

காவிரி விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழக மக்களின் கருத்துக்கு எதிராக கமல் பேசுவதும் அதற்கு ரஜினி ஆதரவு தெரிவிப்பதும் கண்டனத்திற்குரியது.

ரஜினி, கமல் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறார்களோ? என்ற சந்தேகம் வருகிறது.

‘‘காலா’’ பட பிரச்சனை காரணமாக காவிரியை ரஜினி கர்நாடகத்திடம் அடகு வைக்கிறார். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க கூடாது என கர்நாடகம் கூறுவது போன்று ரஜினி கூறினால் தமிழகத்தை விட்டு கர்நாடகத்திற்கு சென்று விடலாம்.

காவிரி விவகாரத்தில் ரஜினியும் கமலும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இது தமிழக மக்களுக்கும் விவசாயிகளுக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் காவிரி விவகாரம் தொடர்பாக தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கமல்- ரஜினி இருவரும் செயல்பட்டால் அவர்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார். #Kaala #Rajinikanth #PRPandian
Tags:    

Similar News