பாலஸ்தீன அதிபரை சந்தித்த பிரதமர்: காசா தாக்குதல் குறித்து கூறியது என்ன?
- இந்தியா-பாலஸ்தீன இரு தரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.
- பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என உறுதி அளித்தார்.
குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றினார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.
அப்போது இந்தியா-பாலஸ்தீன இரு தரப்பு உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தினர்.
மேலும் இந்த சந்திப்பின்போது காசாவின் மனிதாபிமான நிலைமை குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்த பிரதமர், பாலஸ்தீன மக்களுக்கு இந்தியா தொடர்ந்து தமது ஆதரவை நல்கும் என உறுதி அளித்தார். காசா-இஸ்ரேல் இடையேயான போரில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பாலஸ்தீனத்தில் ஹமாஸ் அமைப்பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது கடந்த 11 மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.