search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 97424"

    • ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவில் ஏழுநிலை கொண்ட கம்பீரமான ராஜகோபுரமாகும்.
    • பூவராக சுவாமி மூலவராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    மூலவர் : ஸ்ரீ பூவராகன்

    உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன்

    தாயார் : அம்புஜவல்லி

    தல விருட்சம் : அரசமரம்

    தீர்த்தம் : நித்யபுஷ்கரணி

    ஒரு பிரளய காலம் முடிந்தபின் வெள்ளத்தினுள் அமிழ்ந்திருந்த பூமியை மஹாவிஷ்ணு வெண்நிற வராக (பன்றி) அவதாரம் எடுத்து பூமியைத் தமது கொம்பில் பற்றி மேலே தூக்கி வந்து நிலை நிறுத்தி ஆதி வராகர் என பெயர் பெற்றார்

    ஸ்தல வரலாறு :

    ஒருசமயம், இரண்யாட்சன் என்ற அசுரன் பூலோகத்தை கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனால் தேவர்கள் மிகவும் அச்சமுற்று பிரம்மாவை நாடினர். பூலோகத்தை மீட்பதற்காக தியானம் செய்தார். அப்போது அவருடைய வலது நாசியில் இருந்து பன்றி ரூபம் வெளிப்பட்டது. அந்த திவ்யமான பன்றி ரூபம் தன் உருவத்தை அதிகரித்துக் கொண்டே சென்றது. பகவான் விஷ்ணு பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என்று அனைவரும் உணர்ந்தனர்.

    கடலுக்குள் சென்ற வராகபகவான் ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எந்த சிறு இடரும் ஏற்படாவண்ணம் சாதுர்யமாக தூக்கியபடி நீரிலிருந்து வெளிப்பட்டார். இதைக்கண்ட இரண்யாட்சன் கோபம் கொண்டு வராகமூர்த்தியைத் தாக்க, இருவருக்கும் கடுமையான யுத்தம் நடந்தது. இறுதியில் அசுரனை வீழ்த்தி பூமியைக் காத்தருளினார். பிரம்மாவும் தேவர்களும் வராக மூர்த்தியை வாழ்த்தித் துதித்தனர்.

    மீண்டும் வைகுண்டம் திரும்பிச் செல்ல வராகர் எண்ணியபோது பூதேவி தன்னுடன் தங்கியிருக்கும்படி பகவானை வேண்டிக் கொண்டதாக நாரதர் புராணம் கூறுகிறது. பூமிதேவியின் வேண்டுகோளை ஏற்று ஸ்ரீ முஷ்ணம் திருத்தலத்திலேயே பகவான் கோவில் கொண்டதாக ஐதீகம்.

    ஸ்ரீமுஷ்ணம் திருக்கோவில் ஏழுநிலை கொண்ட கம்பீரமான ராஜகோபுரமாகும். திருக்கோவிலின் கருவறையில் வீற்றிருக்கும் மூலவரைத் தரிசிக்கும் முன்பாக, தனி சந்நிதியில் அமைந்தருளும் ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். கோவிலின் தென் கிழக்குத் திசையில் நித்ய புஷ்கரணி அமைந்துள்ளது. இதில் ஸ்நானம் செய்து அருகிலேயே சந்நிதி கொண்டுள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணரின் தரிசனம் பெறுவது சிறப்பு.

    இவ்வாலயத்தில் பூவராக சுவாமி மூலவராக நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். தம் இடுப்பில் இருக்கும் சங்கு, சக்கரத்தைத் தன் இரு திருக்கரங்களால் மறைத்தவண்ணம் திருமேனி மேற்கு திசையை நோக்கியும் திருமுகம் தெற்கு திசையை நோக்கியும் அமையப்பெற்று அருள்காட்சி அருள்கிறார். உற்சவ மூர்த்தி யக்ஞ வராகர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீ தேவி பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயாருக்கு அம்புஜவல்லி என்பது திருநாமம்! தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லி தாயார்.

    பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஓர் ஊரை ஆண்டு வந்தார். ஒரு சமயம் அவர் தீராத வியாதி கண்டு மிகவும் துன்புற்றதாகவும், அவரைக் கவனித்து வந்த வைத்தியர்கள் கைவிட்ட சமயத்தில், அவ்வூர் வழியாகச் சென்றார், மத்வ மதத்தைச் சார்ந்த யாத்ரிகர் ஒருவர். அவர், முஷ்ணத்திற்கு சென்று பூவராக ஸ்வாமியின் தீர்த்தம், துளசி பிரசாதத்துடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் அவருக்கு நவாப்பற்றி தெரியவரவே, சுவாமி தீர்த்தத்தையும், துளசி பிரசாதத்தையும் கொடுக்க, நவாப் பூரண குண மடைந்தாராம்.

    அது முதல் நவாப், பூவராகப் பெருமானிடம் பக்தி கொண்டு, அவருக்குத் தொண்டு புரிய விரும்பி கிழக்கு சமுத்திரம் எனும் இடத்திற்கு சுவாமி எழுந்தருளும் போது வழியில் எழுந்தருளியிருப்பதற்கு கிள்ளை தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை நிர்மானம் செய்து, அங்கு உற்சவம் சிறப்பாக நடைபெற ஏராளமான நிலபுலன்களை எழுதி வைத்தார். இதனைத் தொடர்ந்து பரிபாலிக்க தர்ம ஸ்தாபனம் ஒன்றையும் ஏற்படுத்தினார்.

    இன்றும் முஷ்ணம் தலத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்ம உற்சவத்தில் பூவராக சுவாமி தீர்த்தவாரிக்கு கிழக்கு சமுத்திரத்திற்கு எழுந்தருளும்பொழுது, முகமதியர்கள் வசிக்கும் தைக்கால் கிராமத்தின் உள்ளே நுழைந்து வீதியில் ஊர்வலமாக வருவது வழக்கம். அப்பொழுது கிராமவாசிகள் சீர்வரிசைகளுடன் எதிர்கொண்டு அழைத்து நவாப் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதியின் மேல்புறம் வாசல் எதிரில் சுவாமியை நிறுத்தி மாலை அணிவித்து சர்க்கரை, பழம் நைவேத்தியம் கொடுத்து கற்பூர தீபாரதனை செய்விக்கின்றனர். பின்னர் சுவாமி கோவில் சிப்பந்திகள் கற்பூர ஆரத்தியை மசூதிக்குள் எடுத்துச் சென்று வலம் வருகிறார்கள்.

    கோவில் சிறப்புகள் :

    திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார். திருப்பதி – திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.

    பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் யக்ஞவராகர் என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திருமகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர்.

     வட இந்தியாவில், சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் திருவரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் மும்மூர்த்தியும் தானே என்ற நிலையில் சுயம்பு மூர்த்தியாக திகழ்ந்து பெருமை சேர்க்கிறார்.

    தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது. அங்கே பிரகன் நாயகி சமேத நித்தீஸ்வரர் வீற்றிருக்கும், பழங்கால சிவாலயம் ஒன்றும் இருக்கிறது.

    பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

    பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன.

    ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீ பூவராகசுவாமி கோவில் சிறப்பு முஸ்தா சூரணம் என்கிற கோரைக்கிழங்கு பிரசாதம். ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் பன்றி அவதாரம் எடுத்துள்ளார். இதன் காரணமாக அவரது அவதாரத்திற்கு கோரைக்கிழங்கு மிகவும் பிடித்தமான உணவு என்பதால் கோரைக்கிழங்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.

    ஸ்ரீரங்கம், திருப்பதி, வானமாமலை, சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிகாஷ்ரமம் ஆகிய க்ஷேத்திரங்களுடன் இணைந்து, ஸ்ரீமுஷ்ணம் எட்டு முக்கிய சுயம்பு க்ஷேத்திரங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

     அருணகிரிநாதர் தரிசித்த தலம் ஸ்ரீமுஷ்ணம். இது புகழ்பெற்ற ஆதிவராகப்பெருமாள் கோவில் கொண்டுள்ள அருமையான தலம். வைஷ்ணவர்கள் இதை "ஸ்வயம்வ்யக்த ஸ்தலம்" – தானாகவே தோன்றி விளங்கும் தலம் என்று கொண்டாடுகிறார்கள். இவ்வாறு எட்டுத் தலங்கள் உள்ளன. இங்கெல்லாம் லக்ஷ்மியே பெருமாளைப் பூஜித்ததாக வரலாறு. இங்குள்ள பெருமாள் மூர்த்தம் இயற்கையாகவே எழுந்த சாளக்ராமத்தால் அமைந்

    இங்கு வந்த அருணகிரிநாதர், இங்கு நித்தீஸ்வரர் கோவிலில் உள்ள முருகனைப் பாடியதாகச் சொல்கிறார்கள். இரண்டு திருப்புகழ்ப் பாடல்கள் கிடைத்துள்ளன. பெருமாளைப் போற்றும் நம் ஸ்வாமிகள், ஆதிவராகப் பெருமாளையும் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

    அமைவிடம் :

    இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை – மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.

    முகவரி:

    அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோவில்,

    ஸ்ரீமுஷ்ணம்- 608 703

    கடலூர் மாவட்டம்.

    • இந்த கோவில், மூன்று நிலை ராஜ கோபுரத்தை கொண்டது.
    • இந்த கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது தனி சிறப்பாகும்.
    • இந்த கோவில் சனியின் அம்சமாக விளங்குகிறது.

    நவதிருப்பதி எனப்படும் ஒன்பது தலங்களும், நவக்கிரக நாயகர்களின் பெயரில் வரிசைப்படுத்தப்படுகிறது. அவற்றின் வரிசையில் ஏழாவதாகவும், நவதிருப்பதி வரிசைகளுள் ஆறாவதாகவும் விளங்கும் கோவில் "திருக்குளந்தை". இது சனியின் அம்சமாக விளங்குகிறது.

    திருக்குளந்தை என்னும் வரலாற்று பெயரை கொண்ட இத்தலம் தற்போது "பெருங்குளம்" என்றே அழைக்கப்பட்டு வருகிறது.

    கோவில் வரலாறு:

    முற்காலத்தில் தடாகவனம் என்று அழைக்கப்பட்ட இப்பகுதியில் வேதசாரன் என்னும் அந்தணன் தன் மனைவி குமுதவல்லியோடு வாழ்ந்து வந்தான். இவர்களின் இல்லறம் நல்லறமாகவே சென்றாலும் இவர்களுக்கு மக்கள் பேறு இல்லாதது பெரிய குறையாகவே இருந்தது. இதனால் தம்பதியர் மிகவும் வருத்தத்துடன் இருந்து வந்தனர். தங்கள் குறைகள் நீங்க இவர்கள் பல்வேறு கோவில்களுக்கும் சென்று வேண்டிக்கொண்டனர்.

    இவர்களின் பக்திக்கு இறங்கிய பெருமாள், தன்னு டன் இருந்த மகாலட்சுமியை அழைத்து அவர்களின் குறையை போக்க குழந்தையாக அவதரிக்கும்படி கூறுகிறார். மகாலட்சுமியும் இதற்கு சம்மதிக்க இவர்களின் கருணையினால் குமுதவல்லி கர்ப்பம் தரிக்கிறாள். சரியாக பத்தாவது மாதம் குமுதவல்லிக்கு குழந்தை பிறக்கிறது. மகாலட்சுமியே குழந்தையாக வந்து அவதரித்தாள். அந்த குழந்தைக்கு கமலாவதி என்று பெயர் சூட்டி பாலூட்டி, சீராட்டி, பாசமழை பொழிந்து வளர்த்து வருகின்றனர் அந்த தம்பதியினர்.

    பருவம் எய்திய கமலாவதி பேரழகியாகவும், கல்வியில் சிறந்த மங்கையாகவும் வளர்ந்து வந்தாள். இவளின் அழகில் மயங்கி பக்கத்து ஊர்களிலிருந்து நிறைய பேர்கள் பெண் கேட்டு வந்தனர். ஆனால் கமலாவதியோ சதா சர்வ காலமும் ஆண்டாளை போல பரந்தாமனை நினைத்தபடியே வாழ்ந்து வந்தாள். இந்நிலையில் கமலாவதிக்கு திருமண ஏற்பாடுகளை பெற்றோர் செய்ய, கமலாவதி பரந்தாமனை நினைத்தபடியே தன்னை வந்து ஆட்கொள்ளுமாறு வேண்டி கொண்டிருந்தாள்.

    கமலாவதியை ஆட்கொள்ள செவிசாய்த்த பெருமாளும் ஒருநாள் மாய கண்ணன் தோற்றத்தில் திருக்குளந்தை ஊருக்கு வருகிறார். அவரை கண்ட கமலாவதி அவர் திருமுகத்தில் இருந்த தெய்வீக ஒளியை கண்டு அவரை கண்ணபிரானாக உணர்கிறாள். இப்படியிருக்க ஒருநாள் கமலாவதி தன் தோழியர்களுடன் குளத்திற்கு சென்று குடத்தில் நீர் நிரப்பி திரும்பி வருகையில் பெருமாள், கமலாவதி முன் தோன்றி அவளை ஆட்கொண்டார்.

    அவருடைய திருமுகத்தை கண்ட நொடியில் கமலாவதியும் அவருடன் சென்று தற்போது கோவில் சன்னதி அமையப்பெற்ற இடத்துக்கு சென்று மறைந்துவிட்டனர். இதனை கண்ட தோழியர்கள் பதறியபடியே ஊருக்குள் சென்று நடந்ததை கூற, வேதசாரன் தன் மனைவியை அழைத்து கொண்டு ஊர் மக்கள் புடை சூழ அந்த இடத்திற்கு வந்து தன் மகள் கமலாவதியை தேடுகிறான்.

    அங்கு பெருமாளும், கமலாவதியும் அர்ச்சாவதார திருமேனியாய் காட்சியளிக்க, அப்போது வானத்தில் இருந்து பெருமாள் அசரீரியாக., வேதசாரனே உன் பக்திக்கு இறங்கி மகாலட்சுமியையே உமக்கு குழந்தையாக பிறக்க செய்தோம், தற்போது அவள் என்னை சேரும் நேரம் வந்ததால் யாமே அவளை ஆட்கொண்டோம் எனக் கூறியருளினார். இதனைக் கேட்ட ஊர் மக்களும், வேதசாரன் மற்றும் அவன் மனைவி குமுதவல்லியும் அளவில்லா மகிழ்ச்சி கொண்டு பெருமாளை துதித்தார்கள்.

    அசுமசாரன் மீது கூத்தாடிய வரலாறு:

    முற்காலத்தில் அசுமசாரன் என்னும் அரக்கன் ஒரே சமயத்தில் ஆயிரம் பெண்களை மணம் முடிக்க ஆவல் கொண்டு ஒவ்வொரு பெண்களாக கடத்திச் சென்று இமயமலையில் சிறை வைக்கிறான். ஒருவழியாக 998 பெண்களை சிறைபிடித்த பின்னர், மீதமுள்ள இரண்டு பெண்களை தேடி வான் வழியே சஞ்சரிக்கும் போது, வேதசாரனின் மனைவி குமுதவல்லியை காண்கிறான். அவளின் அழகில் மயங்கிய அசுமசாரன் அவளையும் கடத்திச் சென்று இமயமலையில் சிறை வைத்தான்.

    இங்கு வேதசாரன் தன் மனைவியை காணாமல் பெருமாளிடம் முறையிட, பெருமாள் வேதசாரனின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து நேராக இமயமலைக்கு சென்று குமுதவல்லியையும் மற்ற 998 பெண்களையும் மீட்டு அனுப்பி வைத்துவிட்டு, திருக்குளந்தை சேர்கிறார். அப்போது இந்த விஷயத்தை அறிந்து கொண்ட அரக்கன் அசுமசாரன் திருக்குளந்தைக்கு வந்து பெருமாளுடன் போரிடுகிறான். அப்போது பெருமாள் விசுவரூபம் எடுத்து அசுமசாரனின் பாதங்களை பிடித்து தலைகீழாக அவனைத் தூக்கி தரையில் அடித்து அவனை கீழே கிடத்தி அவன் தலை மீது ஏறி கூத்தாடினாராம். இதனால் தான் இத்தல பெருமாளுக்கு மாயகூத்தன் என்ற பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள்.

    வியாழ பகவான் சாப நிவர்த்தி பெற்ற வரலாறு:

    முற்காலத்தில் தேவர்களின் குருவாக விளங்கிய பிரகஸ்பதி என்னும் வியாழ பகவான், பெண்ணாசையால் ஏற்பட்ட மோகத்தால் சாபம் பெற்றுவிட, அந்த சாபம் தீர இங்கு பெருமாளை வழிபட்டு சாப நிவர்த்தியும் பெற்றுள்ளார். அப்படி அவர் முன் பெருமாள் காட்சியளிக்கும் போது முன்னர் அசுமசாரன் அரக்கனை அழித்து அவன் மீது மாயக்கூத்தாடிய அந்த நடன கோலத்தை தனக்கு காட்டியருள வேண்டும் என கேட்க, அவருக்கு மாயக்கூத்தாடிய கோலத்தில் பெருமாள் காட்சி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

    கருடனின் ஆணவத்தை நீக்கிய வரலாறு:

    முன்பு குமுதவல்லியை அசுமசாரன் கடத்தி சென்ற போது, அவளை மீட்க செல்ல பெருமாள் ஆயத்தமாக கருடனை தன் ஓர கண்ணால் பார்க்க, கருடனோ தன்னை விட்டால் பெருமாளை சுமக்க யாரும் இல்லை என்ற நினைப்பில் ஆணவத்தோடு மெதுவாக புறப்பட தயாராக, அதனை அறிந்த பெருமாள் உடனே தன் முதுகில் கருடனை சுமந்தபடி இமயமலைக்கு பயணித்தாராம். இதனால் மனம் வருந்தி தனது ஆணவம் நீங்கி பெருமாளின் பாதங்களில் சரணடைந்தாராம் கருடாழ்வார். எனவே கருடனின் ஆணவம் தீர்ந்ததாக ஒரு வரலாறும் இங்கு கூறப்படுகிறது.

    மூலவர் வேங்கடவாணன்:

    கருவறையில் மூலவராக நின்ற கிருக்கோலத்தில் காட்சியளிக்கிறார் வேங்கடவாண பெருமாள். இவர் நான்கு கரங்களுடன், மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், கீழ் இரு கரங்களில் வலது கரம் அபயம் காட்டியும், இடது கரத்தை தொடையில் வைத்தபடி திருப்பதியில் உறையும் பெருமாளை போன்றே காட்சியளிக்கிறார். எனவே இவருக்கு சீனிவாசப் பெருமாள் என்ற பெயரும் வழங்கி வருகிறது.

    தாயார்கள் குளந்தைவல்லி, அலர்மேலு மங்கை:

    இங்கு தாயார்களுக்கு என தனி சன்னதி இல்லை. கருவறையில் பெருமாளுக்கு முன் அலர்மேலுமங்கை தாயாரும், இங்கு பிறந்து வளர்ந்து பெருமாளை மணாளனாக பெற்ற கமலாவதி என்னும் குளந்தைவல்லி தாயார் பெருமாளின் மார்போடு ஐக்கியமான கோலத்திலும் வேங்கடவாண பெருமாளோடு சேர்த்தியாக காட்சி அளிக்கிறார்கள்.

    மாயக்கூத்தன் கோவில் உற்சவர் சிறப்பு என்ன?

    இங்கு உற்சவர் நின்ற கோலத்தில், நான்கு திருக்கரங்கள் கொண்டு மாயக்கூத்தர் என்னும் திருநாமம் தாங்கி ஸ்ரீ தேவி, பூ தேவி உடன் அருள்பாலிக்கிறார். இவருடன் இங்கு கருடாழ்வரும் இரு கரங்கள் கூப்பியபடி உற்சவராக காட்சி தருவது சிறப்பம்சம். மாய கண்ணனாக வந்து கமலாவதியை ஆட்கொண்டதாலும், அசுமாசூரனை வதைத்து அவன் மீது ஏறி கூத்தாடியதாலும் இவர் மாயக்கூத்தர் என்று போற்றப்படுகிறார்.

    நவக்கிரக சன்னதி:

    பொதுவாகவே வைணவ கோவில்களில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி என்பது இருக்காது. ஆனால் இங்கு திருக்குளந்தை மாயக்கூத்தர் கோவிலில் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது தனி சிறப்பாகும். இங்குள்ள பிற நவ திருப்பதி கோவில்களிலும் கூட நவக்கிரக சன்னதி கிடையாது.

    கோவில் அமைப்பு:

    தாமிரபரணி ஆற்றின் வடகரையில் கிழக்கு நோக்கி அமையப்பெற்றுள்ள இந்த கோவில், மூன்று நிலை ராஜ கோபுரத்தை கொண்டது.

    இந்த ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே சென்றால் உள்ளே கொடிமரமும், பலிபீடமும் அமையப்பெற்றுள்ளது. அதனை தாண்டி உள்ளே சென்றால் கருவறைக்கு நேர் எதிரே கருடன் சன்னதி உள்ளது.

    அவரை வணங்கி, அடுத்த வாயில் வழியே உள்ளே சென்றால் அர்த்த மண்டபத்தில் உற்சவர் மாயக்கூத்தர், ஸ்ரீ தேவி, பூ தேவி சகிதமாகவும், இருகரம் கூப்பிய கருடாழ்வாருடனும் காட்சிதருகிறார். அவருக்கு பின்புறம் கருவறையில் மூலவர் சீனிவாச பெருமாள் நெடிது உயர்ந்த நின்ற கோலத்தில் காட்சித் தருகிறார்.

    கோவில் பிரகாரத்தில் வைணவ திருக்கோவிலின் பரிவார மூர்த்திகள் சன்னதிகளும் உள்ளன. இதுதவிர முன் மண்டபத்தில் நவக்கிரக சன்னதியும் அமையப்பெற்றுள்ளது.

    வடக்கு திருச்சுற்றில் பரமபத வாசலும், அதற்குரிய மண்டபமும் அமையப்பெற்றுள்ளன.

    கோவில் சிறப்புக்கள்:

    இங்கு கருவறையில் உள்ள பெருமாள் திருப்பதி வெங்கடாசலபதியை போன்றே திருக்கோலம் காட்டியருளுகிறார். இக்கோவில் விமானமும் திருப்பதியே போன்றே ஆனந்த நிலைய விமானம் என்றே அழைக்கப்படுகிறது.

    திருவில்லிப்புத்தூரில் ஆண்டாள் நாச்சியார் பூ உலகில் பிறந்து, வளர்ந்து, ரங்கநாதனை மணமுடித்ததை போலவே இந்த திருக்குளந்தை தலத்திலும் கமலாவதி நாச்சியார் பூ உலகில் பிறந்து, வளர்ந்து, பரந்தாமனை மணமுடித்தாள், மேலும் இங்கு திருவில்லிப்புத்தூரைப் போலவே பெருமாளுடன் கருடாழ்வாரும் உற்சவராக இருப்பதும் இரண்டு தலத்திற்கும் உள்ள ஒற்றுமை ஆகும்.

    நம்மாழ்வார் இத்தலத்தில் ஒரு திருவாய்மொழி பாசுரம் (3361) பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

    நவதிருப்பதி கோவில்களுள் இந்த திருக்குளந்தை தவிர்த்து வேறெந்த கோவில்களிலும் நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி இல்லை.

    இந்த தலத்தில் நம்மாழ்வார் தன்னைக் காதலியாகவும், மாயக்கூத்தனை காதலனாகவும் பாவித்து பாசுரங்கள் படைத்துள்ளார். அந்த அளவுக்கு இந்த பெருமாள் மாயகூத்தர் அழகுற காட்சியளிக்கிறார்.

    இக்கோவில் மடப்பள்ளியில் இருந்து கழனி தண்ணீர் வெளியேறும் இடத்தில் கழனி தொட்டியான் என்னும் திருநாமம் கொண்டு ஒரு காவல் தெய்வமானவர் காட்சித் தருகிறார். இந்த திருக்குளந்தை தலத்தை பூர்வீகமாக கொண்ட பல குடும்பங்களுக்கு இவர் குல தெய்வமாக விளங்கி வருகிறார். இவருக்கு தை மாதம் கடை வெள்ளி அன்று திருவிழா நடைபெறுகிறது.

    மாயக்கூத்தன் திருக்குளந்தை கோவிலின் முக்கிய திருவிழாக்கள் என்ன?

    பங்குனி மாதம் இங்கு கொடியேற்றமாகி பதினொரு நாட்கள் பெருந் திருவிழா விமரிசையாக நடைபெறும். விழாவின் இறுதியில் நடைபெறும் தெப்ப திருவிழா இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.

    வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தை ஒட்டி ஆழ்வார்திருநகரியில் நடைபெறும் நம்மாழ்வார் அவதார உற்சவத்தின் ஐந்தாம் நாள் இத்தல பெருமாள் மாயக்கூத்தர் அங்கு எழுந்தருளி கருடசேவை காட்சியளிக்கிறார்.

    இது தவிர ஆடி பூரம், ஆடி சுவாதி, ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி சனிக்கிழமைகள், மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி ஆகிய திருவிழாக்களும் இங்கு விமரிசையாக நடைபெறும்.

    அமைவிடம்: திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 28கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருவைகுண்டம். திருவைகுண்டத்திலிருந்து கிழக்கே 12கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது திருக்குளந்தை.

    திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்தில் திருவைகுண்டம் சென்று, அங்கிருந்து நகரப் பேருந்துகளில் இந்த கோவிலை சென்றடையலாம்.

    • இத்தல இறைவன் சதுர வடிவ ஆவுடையார் மீது வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
    • தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள்.

    தஞ்சாவூரின் தென்பகுதியில் கோனூர்நாடு கோட்டை தெருவில் அமைந்துள்ளது, கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில். அகத்திய மாமுனி வழிபட்ட திருத்தலங்களில் இதுவும் ஒன்று. 'அகம்' என்பதற்கு 'மனம்' என்றும் பொருள் உண்டு. மனதை நல்வழிபடுத்தும் இறைவன் என்பதால், இவருக்கு 'அகத்தீஸ்வரர்' என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள். இன்றைய நவீன உலகில், மனக்கவலை இல்லாதவர்கள் எவரும் இல்லை. கோடீஸ்வரர்களுக்கும் கூட மன நிம்மதி இல்லாத நிலை இருக்கத்தான் செய்கிறது. அவர்களின் துன்பம் நீக்கி, தூய மன ஓட்டத்தை ஏற்படுத்தி, மனக்கவலையை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவராக கோனூர்நாடு அகத்தீஸ்வரர் விளங்குகிறார்.

    இத்தல இறைவனான அகத்தீஸ்வரர், சதுர வடிவ ஆவுடையார் மீது வீற்றிருப்பது கூடுதல் சிறப்பு. சித்தர்கள் வழிபட்ட கோவில்களில்தான், சிவபெருமான் இத்தகைய அமைப்பில் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது. இத்தல இறைவன் கிழக்கு நோக்கி வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெரிய நாயகி என்று அழைக்கப்படும் இத்தல அம்பாள், தெற்கு நோக்கி காட்சி தருகிறாா். இறைவனைப் போலவே, இத்தல அம்பாளும், பெண்களின் மன உறுதியை மேம்படச் செய்யும் சக்தி படைத்தவராக திகழ்கிறார்.

    அகத்தீஸ்வரர் கோவிலின் வலதுபுறம் வளவன்ட அய்யனார் கோவிலும், இடதுபுறம் மகா மாரியம்மன் கோவிலும் இருக்க, நடுநாயகமாக அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டின் போது நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுவது வழக்கம். திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தொடர்ச்சியாக 21 பிரதோஷ நாட்களில், நந்தியம் பெருமான், ஈசன், அம்பாள் ஆகியோருக்கு நடைபெறும் அபிஷேக, ஆராதனைகளைக் கண்டு களித்து வழிபாடு செய்தால் விரைவில் திருமண யோகம் வாய்க்கும். குழந்தைச் செல்வமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதோடு இத்தல இறைவன், இறைவி, நந்தியம்பெருமான் ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் நின்று வழிபடும் வகையில் சன்னிதிகள் அமையப்பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.

    தீராத கடன் தொல்லை தீரவும் இத்தல இறைவனை வழிபாடு செய்கிறார்கள். தொடர்ச்சியாக 21 திங்கட்கிழமைகள் இத்தல இறைவனை அபிஷேகம் செய்து வழிபட்டால், கடன் தொல்லை நீங்குவதோடு, யோகம் மிகுந்த வாழ்க்கை அமையும் என்கிறார்கள். தொடர்ந்து 48 நாட்கள், கோவிலில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, 21 தீபம் ஏற்றி, அடி பிரதட்சணம் செய்து இறைவனை வழிபட்டால் அனைத்து விதமான தீராத நோய்களும் தீரும்.

    இந்த ஆலயத்தில் வியாழக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் ஏலக்காய், பச்சை கற்பூரம், கிராம்பு, ஜாதிபத்திரி, ஜாதிக்காய் ஆகியவற்றை இறைவனுக்கு சமர்ப்பித்து, அர்ச்சனை செய்ய வேண்டும். பின்பு அவற்றை எடுத்துக்கொண்டு வீட்டில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபட்டால், கல்வியிலும் தொழிலிலும் மேன்மை வந்து சேரும்.

    தேய்பிறை அஷ்டமி அன்று இத்தலத்தில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவற்றால் தனித்தனியாக 3 தீபம் ஏற்றி, மிளகு மாலை சாற்றி வழிபட்டால், எப்பேர்பட்ட கண் திருஷ்டியாக இருந்தாலும் அகலும். மேலும் தீராத பகை நீங்குவதோடு, குடும்ப பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

    இந்தக் கோவிலில் வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவரின் பின்புறத்தில் லிங்கோத்பவர் தனிச்சன்னிதியில் வீற்றிருக்கிறார். தவிர தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், கோடி விநாயகர், பிரகார மூர்த்திகள், பிரம்மா, துர்க்கை, சூரியன், பைரவர், நவக்கிரகங்களும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    இவ்வாலயத்தில் கார்த்திகை மாத சோமவார பூஜைகள், பிரதோஷம், மகா அன்னாபிஷேகம், மகா சங்காபிஷேகம், திருக்கார்த்திகை தீபம், தேய்பிறை அஷ்டமி, குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சி, ருத்ராட்ச மாலை பந்தல் தரிசனம் போன்ற சிறப்பு நிகழ்வுகள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி வழிபாட்டின் போது நான்கு கால பூஜைகள், சிறப்பு அபிஷேகம், ருத்ரயாகம், சங்காபிஷேகம், அன்னதானம் நடைபெறும். அன்றைய தினத்தில் இத்தல இறைவன், தன்னுடைய பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தருவார்.

    ருத்ராட்ச பந்தல்

    சிவபெருமானின் கண்ணீரே, ருத்ராட்சமாக உருவானதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ருத்ராட்சங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பந்தலை, இந்த ஆலய இறைவன் அகத்தீஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் சன்னிதிகளில் பொருத்தியுள்ளனர். சிவ ஆலயங்களில் ருத்ராட்ச பந்தல் அமைந்திருப்பது அரிதான ஒன்று. ருத்ராட்ச பந்தலில் காட்சி தரும் சிவனை வழிபட்டால் பிறவி பலனை அடையலாம் என்பது ஐதீகம். அத்தகைய சிறப்பை கொண்டுள்ள கோனூர்நாடு அகத்தீஸ்வரரை வணங்கினால் பாவங்களும், தீராத ஜென்ம தோஷங்கள் தீரும் என்கிறாா்கள்.

    அமைவிடம்

    தஞ்சாவூரில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும், ஒரத்தநாட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும் கோனூர்நாடு அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் ரெயில்நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து பழைய பஸ் நிலையம் சென்று, கோனூர்நாடு செல்வதற்கான பஸ்களில் ஏறி கோவிலை அடையலாம்.

    -சண்முகம், தஞ்சாவூர்.

    • கடல் வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள், நகரத்தார்.
    • நகரத்தாரின் 9 ஆலயங்கள் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

    'திரைகடல் ஓடியும் திரவியம் தேடு' என்ற சொல்லுக்கு ஏற்ப, கடல் வழி வாணிபத்தில் சிறந்து விளங்கியவர்கள், நகரத்தார். காவிரிப்பூம்பட்டினத்தை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்த இவர்கள், ஆழிப்பேரலை மற்றும் வேறு சில மாறுதல்களின் காரணமாக, பாண்டிய நாட்டிற்கு வந்தனர். அவர்கள் வசிப்பதற்கு பாண்டிய மன்னர், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைக் கொடுத்தார். நெடுங்காலம் காரைக்குடியில் வசித்த நகரத்தார், நாளடைவில் ஒன்பது ஊர்களுக்கு பிரிந்தனர். அவை காரைக்குடியைச் சுற்றியுள்ள, இளையாத்தன்குடி, மாத்தூர், வைரவன் கோயில், நேமங்கோயில், இலுப்பைக்குடி, சூரக்குடி, வேலங்குடி, பிள்ளையார்பட்டி, இரணியூர் ஆகும். இங்கிருக்கும் ஒன்பது ஆலயங்கள், நகரத்தார் ஆலயங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே சிறிய குறிப்பாக பார்க்கலாம்.

    இளையாத்தன்குடி

    இங்கு மிகவும் பழமையான கயிலாயநாதர் கோவில் உள்ளது. இந்த ஆலயம் பாண்டிய மன்னரால் கி.பி. 707-ல் கட்டப்பட்டிருக்கிறது. தேவர்கள் அனைவரும் அசுரர்களுக்கு பயந்து பல இடங்களில் மறைந்து வாழ்ந்தனர். அப்போது தேவர்களுக்கு மனநிம்மதியை வழங்கிய இடம் இது. எனவே அங்கு மணலில் ஒரு சிவலிங்கம் செய்து வழிபட்டனர். சிவனருளால், பைரவர் தோன்றி அரக்கர்களை அழித்து, தேவர்களை காத்தார். தேவர்களை இளைப்பாறச் செய்த காரணத்தால், இந்த ஊர் 'இளையாற்றங்குடி' என்று பெயர் பெற்றது. அதுவே 'இளையாத்தன்குடி' ஆனது. இவ்வாலய இறைவனின் திருநாமம், கயிலாயநாதர். அம்பாளின் திருநாமம், நித்யகல்யாணி. வெளிப் பிராகாரத்தில் சிறிய சன்னிதியில் தனியாக அரசமங்களேஸ்வரர் மற்றும் மங்களாதேவி பிரதிஷ்டையாகி இருக்கிறார்கள். இந்த ஆலயம் காரைக்குடியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது.

    இரணியூர்

    காரைக்குடியிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது, இரணிக் கோயில். இங்கு ஆட்கொண்டநாதராக இறைவனும், சிவபுரந்தேவியாக அம்பாளும் அருள்பாலித்து வருகின்றனர். ஐந்து நிலை கொண்ட கோபுரம் உள்ளது. இவ்வாலயத்தின் சிற்ப வேலைப்பாடுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவ்வளவு அழகு. கோவில் மேல் உத்திரத்தில் மூலிகைச்சாறு கொண்டு தீட்டப்பட்ட ஓவியங்கள், அம்மன் சன்னிதி முன் நவதுர்க்கைகளும் தூண்களில் அணிவகுத்து நிற்கும் கோலம் போன்றவை கண்கொள்ளாக் காட்சிகளாகும். பைரவருக்கு தனிச் சன்னிதி உள்ளது.

    பிள்ளையார்பட்டி

    இங்கு மூலவராக விநாயகர் அருள்பாலிக்கிறார். கற்பக விநாயகர் என்ற திருநாமம் தாங்கியிருக்கிறார். கருவறையில் இரண்டு கரங்களில் ஒன்றில் லிங்கத்தையும், மற்ெறாரு கரத்தால் இடுப்பு கச்சையையும் பிடித்தபடி இருக்கிறார். துதிக்கை, வலது பக்கம் சுழன்று உள்ளது. இது ஒரு குடவரைக்கோவில். விநாயகர் சிலை, அந்த குகை பாறையோடே செதுக்கப்பட்டுள்ளது. விநாயகரை அடுத்துள்ள சிவபெருமான், திருவீசர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். ஆவணி மாதம் நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழா, இங்கு வெகு விமரிசையாக நடைபெறும்.

    நேமங்கோயில்

    காரைக்குடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, நேமநாதர் ஆலயம். இது கி.பி. 714-ம் ஆண்டு கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுவாமியின் பெயர் நேமநாதர், ஜெயங்கொண்ட சோழீசர் என்பதாகும். அம்பாள் திருநாமம் சவுந்திரநாயகி. இக்கோவில் ஐந்துநிலை கொண்ட கோபுரத்துடன் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் விநாயகர் பல்வேறு கோலங்களில் காட்சி தருகிறார். நின்ற திருக்கோலம், நடன கணபதி, வல்லப கணபதி, தசபுஜ கணபதி என்று விநாயகரின் வித்தியாசமான சிற்பங்களை இங்கே தரிசிக்கலாம். அதேபோல் ஆறுமுகப்பெருமானும் பன்னிரு தோள்களுடன் பல ஆயுதங்களைத் தாங்கி அருள்பாலிக்கிறார்.

    வேலங்குடி

    காரைக்குடியிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது, இந்த ஊர். வேல மரங்கள் அதிகமாக உள்ளதால் இப்பெயர் வந்தது. சுவாமியின் திருநாமம் கண்டீசர். அம்பாளின் பெயர், காமாட்சி. இந்த ஆலயம், மூன்று நிலைகள் கொண்ட சிறிய கோபுரத்துடன் உள்ளது. இங்கே மாணிக்கவாசகரும், அவருக்கு அருகில் யோக தண்டமும் உள்ளது. இந்த தண்டம், நகரத்தார்களுக்கு உபதேசம் கொடுக்கும் குருவிற்கு உரியதாம். இதற்கு இன்றும் பூஜை செய்யப்படுகிறது. பைரவருக்குத் தனிச் சன்னிதி இருக்கிறது.

    மாத்தூர்

    காரைக்குடியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது, மாத்தூரில் உள்ள அதோதீஸ்வரர் கோவில். இது 1200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. ஐந்து நிலைகள் கொண்ட நெடுங்கோபுரம் நம்மை வியந்து பார்க்க வைக்கிறது. ஆலய கொடி மரத்தருகே நந்தியம் பெருமான் சிம்ம பீடத்தில் அமர்ந்திருப்பது எங்குமே காணமுடியாத ஒன்று. இத்தல இறைவனின் திருநாமம் அதோதீஸ்வரர். அம்பாள் - பெரிய நாயகி. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி தலையில் கிரீடத்துடன் காட்சி தருவது அரிதானது. இங்குள்ள நந்தியம்பெருமானுக்கு மாப்பிள்ளை அலங்காரம் செய்வதாக நேர்ந்து கொண்டால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    சூரக்குடி

    காரைக்குடியிலிருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது இந்த இடம். மிகவும் பழமையான கோவில்களில் இதுவும் ஒன்று. சூரை மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இத்தலத்திற்கு சூரக்குடி என்ற பெயர் வந்தது. சுவாமியின் திருநாமம், தேசிகநாதர். அம்பாளின் திருநாமம், ஆவுடைநாயகி. மாமரம் ஆலய தல விருட்சமாக உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி இரண்டு சிங்கங்களுடன் காட்சி தருகிறார். அவர் அமர்ந்திருக்கும் கல்லால மரம், அதன் கிளைகள், அதிலுள்ள இலைகள், மலர்கள் என எல்லாப் பகுதிகளுமே ஒரே கல்லில் செதுக்கப்பட்டவை. பைரவருக்கு தென் பகுதியில் தனிச் சன்னிதி உள்ளது.

    வைரவன்பட்டி

    காரைக்குடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இந்த ஆலயத்தின் இறைவன் பெயர், வளிஒளிநாதர். அம்பாளின் திருநாமம் வடிவுடைநாயகியம்மை. அசுரர்களுக்கு அஞ்சி பூலோகம் வந்த தேவர்கள், ஒரு வனத்திற்குள் புகுந்தனர். அங்கு அவர்களுக்கு ஆனந்தம் கிடைத்தது. அங்கு ஈசனும், அம்பாளும் கோவில் கொண்டிருப்பதை கண்டு மகிழ்ந்தனர். திருவண்ணாமலையில் தீப்பிழம்பாய் காட்சி தந்த ஈசனே, இங்கு வளர்ஒளிநாதராக இருப்பதை தேவர்கள் உணர்ந்தனர். வளர்ஒளிநாதர் என்பதே வளிஒளிநாதர் என்றானது. இங்கு பைரவருக்கு தனிச்சன்னிதி உள்ளது. தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் அருளும் அவர், நான்கு கரங்களில் சூலம், கபாலம், டமருகம், நாகபாசம் ஆகியவற்றை தாங்கியிருக்கிறார். காசிக்கு சமமானதாக இந்த தலம் போற்றப்படுகிறது. காசியில் இறந்தால் முக்தி. அதே போல் இங்கு இறப்பவர்களை, கயிலாயத்திற்கு அனுப்பிவைப்பாராம், இங்கு அருளும் பைரவர்.

    இலுப்பைக் குடி

    இதுவும் காரைக்குடியில் இருந்து 5 கிலோமீட்டரில்தான் இருக்கிறது. ஒரு காலத்தில் இந்த இடம் இலுப்பைக் காடாக இருந்ததால், இந்தப் பெயர் வந்ததாகக் கூறுகிறார்கள். இத்தல இறைவனின் பெயர் சுவயம்பிரகாசர், தான்தோன்றீஸ்வரர் என்பதாகும். அம்பாளின் திருநாமம் சவுந்திரநாயகி. இங்கு பைரவருக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. இந்த இடம் பிரம்மதேவன் பூஜை செய்த இடம் என்றும், நான்கு வேதங்களும் பூஜித்த தலம் என்றும் சொல்கிறது தல வரலாறு. இரண்டு திசைகளிலும் முகத்தை திரும்பிய வண்ணம் இரண்டு நாய்களுடன் பைரவர் காட்சி தருகிறார்.

    • ஸ்ரீராமர் கோவில் என்பதால் இங்கு தேவியாருக்கு தனி கோவில் இல்லை.
    • புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவமும் நடைபெறுகிறது.

    குழந்தை இல்லா தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அருளும் வைணவ கோவில்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் காவிரி டெல்டா மாவட்டத்தில் நீங்கா புகழுடன் விளங்குவது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சந்தானராமர் கோவில்.

    மழலை செல்வம் இன்றி தவிப்பர்கள் கட்டாயம் வந்து செல்ல வேண்டிய முக்கிய தலமாக கருதப்படும் நீடாமங்கலம் சந்தானராமரை மனமுருகி வேண்டினால் நிச்சயம் மழலை செல்வம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    புத்திர பாக்கியம்

    தஞ்சையை ஆட்சி புரிந்த மராட்டிய மன்னர் பிரதாபசிம்மர் கி.பி.1761-ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் சந்தானராமர் கோவில் காசிவிஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களையும், சத்திரம் ஒன்றையும் கட்டினார். நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலுக்கு மாலை அணிவித்தது போல் வெண்ணாறு, கோரையாறு ஆகிய ஆறுகள் கோவில் அருகே உள்ளன.

    நீடாமங்கலம் நகரில் மையப்பகுதியில் உள்ள இந்த கோவில் இறைவன், மன்னர் தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் அருளினார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதரால் பாடல் பெற்ற இக்கோவிலின் எதிரில் தெப்பக்குளம் ஒன்றும் உள்ளது.

    கொடிமரம்

    கோவிலுக்கு உள்ளே சென்றால் அழகாக கட்டப்பட்ட முன் மண்டபம், அதற்கடுத்து மூன்று கண்களை உடைய கோபுர வாயில், உள்பிரகாரத்தின் கிழக்கில் கொடி மரம், தென்கிழக்கில் மடப்பள்ளி, வடகிழக்கில் யாகசாலை, மேற்கில் அகலமான சன்னதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர்(ராமானுஜர்) ஸ்ரீமந்நிகமாந்த தேசிகன் ஆகியோர்(விக்கிரகங்களும்) எழுந்தருளியிருக்கிறார்கள்.

    அதற்கு அருகில் வாகன மண்டபம், கச்சேரி மண்டபம் உள்ளது. கோவிலின் உள்ளே பெருமாள் சன்னதிக்கு முன்பு நடுவில் மகாமண்டபம் உள்ளது. அதற்கு தெற்கிலும், கிழக்கிலும் வாசல்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன

    அனுமன் சன்னதி

    இந்த மண்டபத்தில் கருடன், பெருமாளுக்கு நேர் எதிரிலும், அனுமார், சேனை ஆகியோர் சன்னதிகள் வடக்கிலும், தெற்கிலும் உள்ளன.

    தெற்கு நோக்கிய அனுமார் நினைத்ததை கொடுக்கக் கூடியவர் என்பது சிறப்பாகும். மூலஸ்தானத்தில் சந்தானராமசுவாமி, சீதை, லெட்சுமணர், அனுமார், சயன சந்தான கோபாலன் ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். விமானத்துக்கு வெளியில் தெற்கில் தும்பிக்கையாழ்வார், வடக்கில் விஷ்ணு துர்க்கையும் உள்ளனர். கோவிலுக்குள் 2 பிரகாரங்களும், வெளியில் தேரோடும் வீதியும் உள்ளது.

    கோவிலில் அனுமனுக்கு தனி சன்னதி உள்ளது. இதற்கு காரணம் சந்தானராமசுவாமி குழந்தை பாக்கியம் அருளுவதாலும், ராம பக்தர்களுக்கு அனுமானே குரு என்பதாலும் இங்கு அனுமன் பரமபாகவத அனுமான், தாச அனுமான், சத்குரு அனுமான் என்ற பாவத்தில் தனி சன்னதியில் உள்ளாா். ஸ்ரீராமர் சன்னதிக்கு செல்லும் முன்பு சத்குரு அனுமான் வணக்கத்துடன் செல்வது எந்த ராமர் கோவிலிலும் இல்லாத சிறப்பாகும்.

    தசரத மன்னன்

    நீடாமங்கலம் சந்தானராமர் கோவில் மூலவர், தசரத மன்னனுக்கு புதல்வராக தோன்றியதாலும், தஞ்சையை ஆட்சி புரிந்த பிரதாபசிம்மராஜாவுக்கு புத்திர பாக்கியம் கொடுத்த காரணத்தாலும் சந்தானராமசுவாமி என்ற பெயருடன் விளங்குகிறார். கோலவல்லி ராமன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. மகாராஜாவின் மனைவி யமுனாபாய் அம்மாள், வழிபட்டு பிரதிஷ்டை செய்தது ஸ்ரீராமர் கோவில் என்பதால் இங்கு தேவியாருக்கு தனி கோவில் இல்லை.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுக்கும் சிறப்பு வாய்ந்த திவ்யமூர்த்தி எழுந்தருளிய இந்த கோவில் பெருமையை மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை-பூவினுள் பதுமம் போலும், புருடருள் திருமால் போலும், காவினுள் கற்பம் போலும், கலைகளுள் ஞானம் போலும், ஆவினுள் சுரரான் போலும், அறத்துள் இல்லறம் போலும், நாவினுள் மெய்நா போலும், நாட்டினுள் சோழநாடு போலும் என்ற பெருமையுடைய வெண்ணாறு, கோரையாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடையில் யமுனாம்பாள்புரம் என்கிற நீடாமங்கலத்தில் இக்கோவில் அமைந்துள்ளது என பாடியுள்ளாா்.

    நீராடுமங்கலம்

    இந்த பகுதியில் பறவை கூடுகள் அதிகம் இருந்ததாலும், நீராடுவதால் மங்களம் உண்டாகுவதாலும் நீராடுமங்கலம் என்ற பெயர் நீடாமங்கலமாயிற்று. மகாராணி யமுனாம்பாள் இவ்வூர் தோட்டத்தில் மா மரத்தில் கோவில் கொண்டிருப்பதாக ஐதீகம். இன்று வரை அந்த இடம் புனிதமாக பாதுகாக்கப்பட்டு அம்மையாருக்கு தனி கோவில் அமைத்து பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

    தை மாத கடைசி வெள்ளியன்று யமுனாம்பாள் கோவிலில் திருவிழா நடைபெறுகிறது. இந்திய தலைமை தேர்தல் முன்னாள் ஆணையர் கோபாலசுவாமி உதவியுடன் சந்தானராமர் கோவிலுக்கு திருப்பணிகள் நடந்து குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.

    சந்தானகோபால ஹோமம்

    மாதந்தோறும் ஆழ்வார் திருநட்சத்திரத்தில் சேவாகாலம் சாற்றுமுறை, தி்ருமஞ்சனம், புனர் பூச நட்சத்திரத்தில் திருமஞ்சனம், மூல நட்சத்திர வழிபாடு, சுவாதி நட்சத்திர வழிபாடு, சங்கடஹர சதுர்த்தி, பவுர்ணமி, அமாவாசை, ஆயில்யம் வழிபாடுகள், ரோகிணியில் அந்தந்த சன்னதிகளில் திருமஞ்சனம், ரோகிணி நட்சத்திரத்தில் புத்ர சந்தானகோபால ஹோமம் நடைபெறுகிறது. வியாழக்கிழமைகளில் சந்தானகோபால ஜெபம் செய்து சந்தானராமரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் அடையலாம் என்பது ஐதீகம்.

    கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்கள்

    இந்த கோவிலில் நாள்தோறும் காலை 6.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். ஆண்டுதோறும் ராமநவமி பிரம்மோற்சவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரை மாதம் அட்சய திருதியையன்று கருடசேவையும், வைகாசி விசாகத்தில் நம்மாழ்வார் திருமஞ்சனமும், ஆடி மாதத்தில் ஆடிப்பூர தெப்ப உற்சவமும், ஆவணிமாதம் பவித்ர உற்சவமும், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி உற்சவமும் நடைபெறுகிறது.

    ஐப்பசி மாதத்தில் தீபாவளி உற்சவமும், கார்த்திகை மாதம் குடமுழுக்கு தினத்தில் 108 கலச திருமஞ்சனமும், திருக்கார்த்திகை உற்சவமும், மார்கழியில் தனுர் மாத பூஜைகளும், அனுமன் ஜெயந்தி, வைகுண்டஏகாதசி திருஅத்யயன உற்சவம் 20 நாட்கள் நடைபெறுகிறது. தைமாதம் சங்கராந்தி பொங்கல் விழா நடைபெறுகிறது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள இந்த கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து திருவாரூருக்கு வந்து அங்கிருந்து தஞ்சை செல்லும் பஸ்சில் நீடாமங்கலத்துக்கு வந்து சந்தானராமரை தரிசிக்கலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தா்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருவாரூர் செல்லும் பஸ் அல்லது ரெயிலில் பயணித்து நீடாமங்கலத்தில் இறங்கி சந்தானராமரை தாிசிக்கலாம்.

    • காவல் தெய்வமாகவும், எல்லை தெய்வமாகவும் திகழ்கிறாள்.
    • இந்த அம்மனை வணங்கினால் தைரியம் கிட்டும் என்பது ஐதீகம்.

    தஞ்சாவூருக்கு அருகில் வல்லம் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது ஏகெளரியம்மன் திருக்கோவில். சோழர்கள் காலத்துக் கோவில். கரிகாற் சோழன் காலத்துக் கோவில். சக்தியும் சாந்நித்தியமும் நிறைந்த ஆலயம் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள். சோழரின் கட்டிடக் கலைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் கோவிலின் கருவறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. 

    பெண் என்றால் இளப்பமாகப் பார்ப்பது' இந்தக் காலத்தில்தான் என்றில்லை… அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது. தஞ்சாசுரன் எனும் கொடிய அரக்கனும் அப்படித்தான் நினைத்தான். தஞ்சாசுரனின் இந்த நினைப்பு, சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்ய வைத்தது. தவத்தின் பலனாக வரம் கிடைக்கவேண்டும் என விரும்பினான். சிவபெருமானும் வரம் தர முன்வந்தார். அவனும் வரம் கேட்டான். 'சிவபெருமானாகிய நீங்கள், மகாவிஷ்ணு, பிரம்மா என மூவராலும் எனக்கு மரணம் வரக்கூடாது. மேலும் எந்த ஆணாலும் எனக்கு உயிர் போகக்கூடாது. பெண்ணைத் தவிர யாராலும் எதுவாலும் நான் மாண்டு போகக்கூடாது. இந்த ஊர் என் பெயரால் அழைக்கப்பட வேண்டும்' என்று வரம் கேட்டான். அப்படியே தந்தார் சிவனார்.

    அவ்வளவுதான். பேயாட்டம் ஆடினான் தஞ்சாசுரன். தேவர்கள் கலங்கினார்கள். முனிவர்கள் நடுங்கினார்கள். மக்கள் எல்லோரும் கண்ணீர் விட்டு கதறினார்கள். தேவர்களும் முனிவர்களும் பிரம்மாவை சந்தித்து முறையிட்டார்கள். மகாவிஷ்ணுவை சந்தித்து வேண்டுகோள் விடுத்தார்கள். பிரம்மாவும் மகாவிஷ்ணுவும் சிவபெருமானை சந்தித்து வணங்கினார்கள். 'எந்த ஆணாலும் உயிர் போகக் கூடாது என்றும் நம் மூவராலும் உயிர் போகக் கூடாது என்றும் அவன் வரம் கேட்டான். நீங்களும் கொடுத்துவிட்டீர்களே… இது நியாயமா? என்ன செய்வது?' என்று வேண்டினார்கள். சிவபெருமான், உமையவளைப் பார்த்தார். அழைத்தார். பார்வதிதேவி புரிந்துகொண்டார்.

    தன் வாகனமான சிங்கம் கர்ஜித்து வந்தது. அதில் அமர்ந்துகொண்டாள். கௌரி காளியானாள். எண்கரங்களிலும் ஆயுதங்கள் ஏந்தி, ரத்தச் சிவப்பேறிய கண்களுக்குள் கோபம் கொப்பளிக்க, தஞ்சன் முன்பு தோன்றினாள். தஞ்சன் வெறிபிடித்து அலறினான். யுத்தத்துக்குத் தயாரானான். வில் வளைத்து மழையாகப் பாணங்களை தொடுத்தான். தேவி தன் சிறு அசைவால் அந்த பாணங்களைப் புறந்தள்ளினாள். சிம்மத்தின் மீதேறி அமர்ந்து கர்ஜித்தாள். தஞ்சனின் மார்பு மீது கதையால் அடித்து உதைத்துத் தள்ளினாள். மாய உருவங்கள் எடுத்து அம்பிகையை தாக்கினான் தஞ்சன். இறுதியில் தன் மூதாதையர் போல எருமை உருகொண்டு ஆக்ரோஷமாக தேவி மீது பாய்ந்தான். சிறிதும் தயங்காமல் ஏகௌரியானவள் தஞ்சாசுரனின் தலையை சீவி எறிந்தாள். தேவர்கள் ஆனந்தக் கண்ணீர் பெருக்கினார்கள்.

    தஞ்சனை வதைத்த பின்னும் சீற்றம் குறையாத தேவி, வனமெங்கும் அலைந்தாள். அவளுடைய வெப்பத்தால் நீர் நிலைகள் வறண்டன. தேவர்களும், மனிதர்களும் சிவனிடம் முறையிட்டனர். ஈசனும் 'ஏ, கௌரி, சாந்தம் கொள்' என்று கேட்டுக் கொண்டார். அமைதியடைந்த தேவி நெல்லிப் பள்ளம் என்று அழைக்கப்பட்ட வல்லத்தில் அமர்ந்தாள். சீற்றம் குறைந்து கருணை கொண்டாள். அண்டி வந்தவர்களுக்கு வேண்டியதை அள்ளிக் கொடுத்தாள். அசுரன் கேட்டுக் கொண்டபடி அவன் பெயராலேயே அவ்வூருக்கு தஞ்சாவூர் என பெயரிட்டார்கள். அம்மன், ஏகெளரியம்மன் என்றே அழைக்கப்படுகிறாள்.

    தீராத கடன் பிரச்சினை, தீராத நோய், தீராத பகை என்று கலங்கித் தவித்து மருகியவர்கள், ஏகெளரியம்மனிடம் மனதார வேண்டிக் கொண்டால், விரைவில் கடன் பிரச்சினை தீரும், தீராத நோயும் குணமாகும், பகை அனைத்தும் விலகும் என்பது ஐதீகம். வேண்டுதல் நிறைவேறியவர்கள், அம்மனுக்கு எருமைக்கன்று வழங்கி, தங்கள் பிரார்த்தனையை, நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள்.

    தஞ்சாவூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில், தஞ்சாவூருக்கு அடுத்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது வல்லம். இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், ஒரு கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஏகெளரியம்மன் கோவில். இங்கே சந்நிதியில், உக்கிரமாகவும் அதேசமயம் சாந்தசொரூபினியாகவும் வீற்றிருக்கிறாள் ஏகெளரியம்மன்.. இந்த அம்மன் எட்டு திருக்கரங்களுடன் பத்ம பீடத்தில் காட்சியளிக்கிறாள். காவல் தெய்வமாகவும்,எல்லை தெய்வமாகவும் திகழும் இந்த அம்மனை வணங்கினால் தைரியம் கிட்டும் என்பது ஐதீகம். அந்தக் காலத்தில், போருக்குப் புறப்படுவதற்கு முன்பு ஆயுதங்களை இவளின் திருவடியில் வைத்து பூஜைகள் போடப்பட்டுத்தான் எடுத்துச் செல்வது வழக்கம் என்கிறார்கள்.

    • சமய மாநாடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்கிறது
    • அமைச்சர் சேகர்பாபு பேட்டி

    நாகர்கோவில்:

    தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, இன்று குமரி மாவட்டம் வந்தார். அவர் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், வேளி மலை குமார கோவில் முருகன் ஆலயங்களுக்குச் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அமைச்சர் சேகர்பாபு நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஆக்கிர மிப்பில் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இது வரை ரூ.4 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த மீட்பு வேட்டை தொடரும்.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் விழா நிகழ்ச்சி 5-ந் தேதி தான் நடக்கிறது. அதற்கு இன்னும் 15 நாட்கள் இருக்கிறது. தற்போது அங்கு எழுந்துள்ள பிரச்சினை குறித்து, சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பேசி வருகின்றனர். இந்த விவகாரம் சுமூகமாக முடியும் என்ற நம்பிக்கை துறை அமைச்சர் என்ற முறையில் எனக்கு புலப்படுகிறது. அரசை பொருத்தவரை பிரச்சினையை பெரிதாக்க விரும்பாது. அனைத்து மக்களும் சாதி,சமுதாய வேறுபாடின்றி விழாவில் பங்கேற்க வேண்டும்.

    தக்கலை வேளி மலை குமார கோவில் முருகன் கோவிலில் புணரமைப்பு பணிகள் செய்வதற்காக ரூ.1 கோடியே 8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனை இன்று பார்வை யிட்டு விரைந்து முடிக்க உத்தரவிட்டு உள்ளேன்.

    பணிகள் அனைத்தும் முடிந்ததும் வருகிற ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை திருவிழா நடைபெறும்.

    வேளிமலை குமார கோவிலில் அதிக அளவு திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இங்கு திருமணம் நடத்துவோர் பயன்படுத்தும் சமையல் கூடங்கள், தங்கும் அறை கள் போன்றவை சிதிலமடை ந்துள்ளன.

    அவற்றை புணர மைப்பதா? அல்லது புதிதாக திருமண மண்டபம் கட்டுவதா ? என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் அறிக்கை தந்த வுடன், முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று புதிதாக திருமண மண்டபம் கட்டலாமா? என பரிசீலித்து முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • அமெரிக்காவில் இந்துசமய ஆலயங்கள் பல இருக்கின்றன.
    • குறிப்பிடத்தக்க சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    இந்தியாவில் மட்டுமின்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்து ஆலயங்கள் பல இருக்கின்றன. அனைத்து சமயத்தவர்களுக்கும் வழிபாட்டிற்கான உரிமை அளிக்கும் வகையில் உலக நாடுகள் பலவும், அவரவர் சமய தலங்களைக் கட்டுவதற்காக இடத்தையும் ஒதுக்கிக் கொடுக்கின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் இந்துசமய ஆலயங்கள் பல இருக்கின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க சில ஆலயங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    மகா வல்லப கணபதி

    அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயம், அமெரிக்காவில் கட்டப்பட்ட முதல் இந்துக் கோவில் என்ற சிறப்புக்குரியது. இது 'ஸ்ரீ மகா வல்லப கணபதி தேவஸ்தானம்' என்றும், 'கணேஷ் கோவில்' என்றும் அழைக்கப்படுகிறது. இதன் கட்டுமானம் 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1977-ம் ஆண்டு நிறைவடைந்துள்ளது. இருப்பினும், பாரம்பரிய மற்றும் மத நிகழ்வுகளை நடத்துவதற்காக 1970-ல் திறக்கப்பட்டது. இது அமெரிக்காவின் மிகவும் பிரபலமான இந்துக் கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

    லட்சுமிதேவி ஆலயம்

    அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான கலிபோர்னியாவின் எல்லையில் இருக்கிறது, ஆஷ்லாந்து. இங்கு புகழ்பெற்ற லட்சுமி தேவி ஆலயம் இருக்கிறது. 'ஸ்ரீ லட்சுமி கோவில்' என்று அழைக்கப்படும் இந்த ஆலயம், 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. 1980-ல் தொடங்கப்பட்ட இந்த ஆலயத்தின் கட்டுமானம், இரண்டு ஆண்டுகளில் முடிவுற்று மக்களின் வழிபாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஆலயம் தரையில் இருந்து சுமார் 50 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு கோவில் நிர்வாகம் சார்பில், தினசரி பூஜைகள், திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. மேலும் சுலோக வகுப்புகள், இந்திய கலாசாரம், மொழி குறித்த வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. இந்த ஆலயத்தில் மகாலட்சுமி தவிர, கணபதி, வெங்கடேஸ்வரா, நடராஜர், சுப்பிரமணியர், ஹரிஹரபுத்ரா, கருடன், நவக்கிரக சன்னிதிகள் அமைந்திருக்கின்றன.

    வெங்கடேஸ்வரா கோவில்

    அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் என்ற இடத்தில் அமைந்த பிரமாண்டமாக ஆலயமாக, 'ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில்' கருதப்படுகிறது. இந்த ஆலயம் தென்னிந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலை நினைவுபடுத்தும் வகையிலான கட்டிட வடிவமைப்பைக் கொண்டு திகழ்கிறது. 1975-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம், அமெரிக்காவின் பழமையான இந்து ஆலயங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் விநாயகர், பார்வதி தேவி மற்றும் சிவன் சன்னிதிகள் இருந்தாலும், வெங்கடேஸ்வரர்தான் முக்கிய தெய்வமாக வணங்கப்படுகிறார். இந்த ஆலயம் தங்க ரதத்திற்கு பிரசித்திப்பெற்றது.

    சிவ- விஷ்ணு கோவில் (வாஷிங்டன்)

    அமெரிக்காவின் முக்கிய நகரமான வாஷிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள, சிவ- விஷ்ணு ஆலயம் இது. பல்லவர், விஜயநகர பேரரசு, கேரளா மற்றும் மாயன் கோவில்கள் ஆகிய கட்டிடக்கலையின் கூட்டுக் கலவையாக இந்த ஆலயத்தின் கட்டிட வடிவமைப்பு அமைந்திருக்கிறது. இவ்வாலயத்தில் விநாயகர், ராமர், கிருஷ்ணர், துர்க்கை, மற்றும் மகாவிஷ்ணுவின் அவதாரங்களைக் குறிப்பிடும் தெய்வங்களும் வழிபடப்படுகின்றன. இந்த ஆலயத்தின் முக்கிய தெய்வமாக சிவபெருமான் வணங்கப்படுகிறார்.

    வெங்கடேஸ்வர சுவாமி கோவில்

    திருப்பதி வெங்கடாஜலபதியை நினைவுபடுத்தும் வகையில், அமெரிக்காவின் மத்தியப் பகுதியான இல்லினொய்ஸ் என்ற இடத்தில் அமைந்துள்ளது, ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி ஆலயம். இதனை 'பாலாஜி கோவில்' என்றும் அழைப்பார்கள். மகாவிஷ்ணுவை பிரதான தெய்வமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆலயம் இது. அமெரிக்காவில் உள்ள பழமையான இந்து ஆலயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆலயம் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இந்த இடம் இந்திய- அமெரிக்க குடும்பங்கள் பலவற்றால் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த ஆலயத்தில் வெங்கடாஜலபதி தவிர, விநாயகர், சிவன், பார்வதி ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    சிவ- விஷ்ணு கோவில் (கலிபோர்னியா)

    அமெரிக்காவின் புகழ்பெற்ற நகரமான கலிபோர்னியாவில் அமைந்துள்ள, சிவ- விஷ்ணு கோவில் இது. பெரிய சிவப்பு மற்றும் வெள்ளை நிற கற்களால் அமைக்கப்பட்ட இந்த ஆலயம், பெரிய அளவில் வசீகரிக்கும் அழகைப் பெற்றுள்ளது. இந்து சமயத்தவரால் நன்கு அறியப்பட்ட சிவபெருமான் மற்றும் மகாவிஷ்ணுவுக்காக கட்டப்பட்ட ஆலயம் இது. வெளிநாட்டினரை மயக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆலயத்தின் கட்டிடக்கலை பெருமைக்குரியது. இந்து சமூகம் மற்றும் கலாசார மையம் மூலம், எதிர்கால சந்ததியினருக்கு சமய மற்றும் கலாசார கல்வியை வழங்கும் வகுப்புகள் இங்கு நடத்தப்படுகின்றன.

    சிவ-விஷ்ணு கோவில் (புளோரிடா)

    அமெரிக்காவின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, புளோரிடா. இங்கு சிவன் மற்றும் விஷ்ணு கோவில் அமைந்துள்ளது. இதனை 'சிவ-விஷ்ணு கோவில்' என்று அழைக்கிறார்கள். 1990-ல் கட்டப்பட்ட இந்த ஆலயம், 6 ஆயிரத்து 200 சதுர அடி பரப்பரளவில் பரந்து விரிந்து அமைந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞரான கணபதி ஸ்தபதி வழிகாட்டுதலின்படி, மகாபலிபுரத்தைச் சேர்ந்த 12 கட்டிடக் கலைஞர்கள் உதவியுடன் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக அங்குள்ள கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன.

    அட்லாண்டா ஆலயம்

    1980-களின் முற்பகுதியில் கட்டப்பட்ட அழகு வாய்ந்த ஆலயம் இதுவாகும். இந்திய பாரம்பரிய கட்டிடக்கலையின் உருவகமாக வெள்ளை நிறத்தில் இந்த ஆலயம் கண்களுக்கு விருந்துபடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜியாவின் அட்லாண்டா பகுதியில் அமைந்திருக்கிறது, இந்த ஆலயம். இக்கோவிலில் விநாயகர், அனுமன், துர்க்கை, நாகேந்திரன் மற்றும் பைரவரை பின்பற்றுபவர்கள், வழிபாடு செய்கிறார்கள். இங்கு அமைந்துள்ள சிவன் மற்றும் விஷ்ணுவின் சன்னிதிகள் கோவிலின் சிறப்புகளின் ஒன்றாகும். வெங்கடேஸ்வரர் என்ற பெயரில் மகாவிஷ்ணுவும், ராமலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவபெருமானும் அருள்பாலித்து வருகிறார்கள்.

    • அம்மை நோய் தீர்க்கும் முக்கிய கோவில்களில் ஒன்றாக உள்ளது.
    • கோவிலின் தல விருட்சம் வேப்பமரம்.

    கோடை காலத்தில் பரவும் அம்மை நோயில் இருந்து பக்தர்களை காக்கும் அம்மன் ஆலயங்கள் தமிழகத்தில் பல இருந்தாலும் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில், பக்தர்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள செழுமையான கிராமம் கரம்பயம். இந்த ஊரில் முற்காலத்தில் பால் வியாபாரி ஒருவர் தங்கள் கிராமத்தில் இருந்து பக்கத்தில் உள்ள கிராமங்களுக்கு தினசரி சென்று பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். ஒரு நாள் பால் கொண்டு செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் கால் இடறி பால் கீழே கொட்டி விட அவரும் தவறி கீழே விழுந்து விட்டார்.

    இதனால் மிகவும் வருத்தம் அடைந்த அவர் வீடு திரும்பினாா். மறுநாள் பால் கொண்டு செல்லும்போதும் அதே இடத்தில் கால் தவறி மீண்டும் பால் கொட்டி விட்டது. அன்றும் வருத்தத்துடன் வீடு திரும்பிய அவர் 3-வது நாள் மிகுந்த கவனத்துடன் அந்த குறிப்பிட்ட பகுதி்க்கு சென்றாா். அப்போதும் அவரது கால் இடறி அந்த குறிப்பிட்ட இடத்தில் கீழே விழுந்து பால் கொட்டியது.

    ரத்தம் வெளியேறியது

    இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் மிகுந்த மனவேதனை அடைந்த பால் வியாபாரி தனது வீட்டுக்கு வந்து மண்வெட்டி எடுத்துச் சென்று அந்த இடத்தை தோண்டினாா். அப்போது ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்கு மண்வெட்டி சென்றதும் குழியில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பால் வியாபாரி செய்வதறியாது திகைத்து ஊருக்குள் சென்று நடந்த விவரங்களை கூறினார். இதைத்தொடர்ந்து ஊர் தலைவர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அந்த குறிப்பிட்ட இடத்துக்கு சென்றனர். அப்போது அந்த இடத்தில் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருந்தது.

    அம்மன் சிலை

    அடுத்த கனமே அந்த பால் வியாபாரி உடலில் அம்மை நோய் தாக்கி உடல் முழுவதும் முத்துக்கள் போடப்பட்டிருந்தது. இதனால் வலியால் பால் வியாபாரி துடித்துப்போனார். இதைத்தொடர்ந்து ஊர் தலைவர் உத்தரவின் பேரில் அந்த இடத்தை பத்திரமாக தோண்டி பாா்த்தபோது ஒரு அழகிய அம்மன் சிலை இருந்தது தெரிய வந்தது.

    ஊர் தலைவரும், ஊர் மக்களும் அதிர்ச்சியுடன் அந்த சிலையை மேலே எடுத்து பார்த்தபோது அழகிய அம்மன் சிலை இருந்தது தெரிந்தது. மேலும் அந்த பால் வியாபாரி, மண்வெட்டியால் வெட்டும் போது ஏற்பட்ட தழும்புகள் இன்றும் அம்மனின் உடலில் உள்ளது. இதைத்தொடர்ந்து உடனடியாக ஊர் தலைவர் உத்தரவின் ேபரில் ஊர்மக்கள் அதே இடத்தில் ஒரு சிறிய கொட்டகை அமைத்து அம்பாளின் உருவத்தை அங்கே வைத்து பூஜை செய்ய தொடங்கினா்.

    கனவில் தோன்றிய அம்மன்

    இதன்பின் பால் வியாபாரியும் வீட்டுக்கு சென்று விட்டார். ஊர் தலைவர் இரவு உணவு முடித்து உறங்கியபோது அவரது கனவில் அம்பாள் தோன்றி நான் இப்பகுதிகளுக்கு நன்மை செய்வதற்காக சுயம்பாக தோன்றி உள்ளேன். அந்த பால் வியாபாரி அறியாமல் செய்த தவறால் அவருக்கு செம் முத்துக்களை(அம்மை நோய்) உடலில் ஏற்படுத்தி விட்டேன்.

    இன்னும் 5 நாட்களில் அவர் உடலில் இருந்து அந்த முத்துக்களை நான் எடுத்து விடுவேன். இப்பகுதியில் யாருக்காவது அம்மை நோய் எப்போது வந்தாலும் எனது கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்தால் நான் சரி செய்து விடுவேன் என்றும், தனக்கு ஒரு கோவில் கட்டி விழா ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் கூறினாா்.

    அம்மை நோய் தீர்க்கும் தலம்

    இதன்பின்பு ஊர் தலைவர் விடிந்ததும் பொதுமக்களை கூட்டி அம்பாள் சொன்ன தகவல் அனைத்தையும் சொல்லி அந்த இடத்திலேயே கோவில் கட்டி முத்து மாரியம்மன் என்ற பெயரில் இன்று வரை வழிபாடு செய்கின்றனர்.

    டெல்டா மாவட்டங்களில் அம்மை நோய் தீர்க்கும் முக்கிய கோவில்களில் ஒன்றாக கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.

    நேர்த்திக்கடன்

    கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு கரம்பயம் மட்டுமின்றி கரம்பயத்தை சுற்றியுள்ள சுமார் 35-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், அருகில் உள்ள நகர மக்களில் யாருக்காவது அம்மை நோய் ஏற்பட்டால் அவர்களை அழைத்து வந்து கரம்பயம் முத்துமாரியம்மன் கோவிலில் தங்க வைத்து தீர்த்தம் என்று சொல்லக்கூடிய அபிஷேக பால் வாங்கி கொடுப்பார்கள்.

    நான்கு அல்லது ஐந்து நாட்களில் அவர்கள் நோய் பூரண குணமடைந்து விடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. இதற்கு நேர்த்திக்கடனாக முடி இறக்கி காணிக்கை செலுத்துவது, அலகு குத்துவது, காவடி எடுப்பது, பால்குடம் எடுப்பது, வடம் பிடித்து தேர் இழுப்பது உள்ளிட்ட வேண்டுதல்களை பொதுமக்கள் நிறைவேற்றி வருகின்றனர்.

    திருவிழா

    கரம்பயம் முத்து மாரியம்மன் கோவிலில் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 20-ந் தேதிக்கு பிறகு வரும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தா்கள் காப்பு கட்டுவார்கள்.

    அடுத்த ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் காவடி அபிஷேகம், இரவு அரண்மனை மண்டகப்படி நடைபெறும். திங்கட்கிழமை வெளியூர் காவடியும் அபிஷேகமும் நடைபெறும். செவ்வாய்க்கிழமை பால்குடம், அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும். புதன்கிழமை பெரிய தேர்த்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் தீர்த்தவாரி நடைபெற்று, இரவு முத்து பல்லக்கு வாணவேடிக்கை நடைபெறும். வெள்ளிக்கிழமை அதிகாலை காப்பு களைதல் நிகழ்ச்சியுடன் கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நிறைவு பெறும்.

    வேண்டுதல்கள்

    திருவிழாவின்போது அம்பாள் வீதி உலா வந்து பொதுமக்களை பார்த்து மகிழ்ந்து அவர்களுக்கு தேவையான அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோவில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலின் அனைத்து விழாக்களையும் ஊர் பெரியவர்களும், மண்டகப்படிதாரர்களும், ஊர் முக்கியஸ்தர்களும், பொதுமக்களும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    கோவிலின் தல விருட்சம் வேப்பமரம். தீர்த்தக்குளம் கோவில் அருகே உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பா் மாதம் 8-ந் தேதி குடமுழுக்கு நடந்தது.

    பிரசித்தி பெற்ற தீர்த்தக்குளம்

    கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் கோவில் அருகில் மிகப்பெரிய அளவில் அமைந்து உள்ளது. அம்மை நோயால் பாதிக்கப்படும் பக்தா்கள் நோய் தீர்ந்த உடன் இ்ந்த கோவில் தீா்த்தக்குளத்தில் நீராடி பின்னர் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள். மேலும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தா்களும் தீர்த்தக்குளத்தில் உள்ள புனித நீரை தங்கள் தலையில் தெளித்த பின் கோவிலுக்கு செல்கிறாா்கள்.

    தீர்த்தக்குளத்தில் அம்மை நோய் தீர்க்கும் அற்புத சக்தி இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். எனவே பிரசித்தி பெற்ற கரம்பயம் முத்து மாரியம்மன் கோவில் தீர்த்தக்குளம் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்று உள்ளது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    கரம்பயம் முத்துமாரியம்மன் கோவில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து 7 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பட்டுக்கோட்டைக்கு வந்து அங்கிருந்து கரம்பயம் முத்து மாரியம்மன் கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் வழியில் 7 கி.மீட்டர் தொலைவிற்கு முன்பு உள்ள கோவிலை அடையலாம்.

    • எஸ்.எஸ்.கோட்டை அருகே கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வட்டம் எஸ்.எஸ்.கோட்டை அருகில் உள்ள கோட்டைப்பட்டி கிராமத்தில் சக்தி கணபதி, பொன்னழகி அம்மாள், வெற்றிவேல் முருகன் மற்றும் புதிதாக அமைக்கப்பட்ட பொன்னழகி அம்மன் தோரணவாயில் குதிரை மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.முன்னதாக 3 நாட்கள் நான்கு கால கணபதி, லட்சுமி ஹோமம் தொடங்கப்பட்டு பரிவார தெய்வங்களுக்கு பூர்ணாகுதி, ஆராதனை நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து கார்த்திகேயன் சிவாச்சாரியார் தலைமையில் யாக வேள்வியில் தீபாராதனை நடத்தப்பட்டது. கடம் புறப்பாடுடன் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் அபிஷேக நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஜெயக்கொடி சாமியாடி, பூசாரி கருப்பசாமி, பூசாரி சின்ன காளை, மாயழகு, ஆறுமுகம் மற்றும் கிராம இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் கோவிலில் சிவராத்திரி திருவிழா போலீஸ் பாதுகாப்புடன் வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
    • இரு தரப்பினருக்கிடையே சமரசம் ஏற்படாததால் வருவாய் துறையின் மூலம் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

    உசிலம்பட்டி

    உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி ஓச்சாண்டம்மன் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் பெட்டி தூக்குவது குறித்து 8 மற்றும் 2, 10 தேவர்கள் வகையறாவுக்கும், 5 பூசாரி வகையறாவுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது.

    இைதயடுத்து பூசாரி மற்றும் கோவில் நிர்வாகியிடம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சமரச பேச்சு வார்த்தை நடந்தது. கோட்டாட்சியர் சங்கரலிங்கம், வட்டாட்சியர் சுரேஷ் பிரெடரிக் கிளமெண்ட், போலீஸ் டி.எஸ்.பி. நல்லு ஆகியோர் பங்கேற்றனர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து வருவாய் துறையினர் போலீஸ் பாதுகாப்புடன் கோவிலை திறந்து வைத்து பக்தர்களுக்கு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர்.

    மேலும் பெரிய பூசாரி தேர்வு செய்வதில் பூசாரி தரப்பினருக்கிடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால் பெட்டி தூக்கும் திருவிழாவும் நிறுத்தி வைக்கப்பட்டது.

    பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா கோர்ட்டு உத்தரவுப்படி நடத்த இரு தரப்பினருக்கிடையே சமரசம் ஏற்படாததால் வருவாய் துறையின் மூலம் திருவிழாவை நடத்த ஏற்பாடு செய்யப்படும். அதற்கு காவல் துறையினரின் தகுந்த பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

    • குழந்தைப்பேறு, திருமணத் தடை விலகும் முக்கிய தலமாகும்.
    • இந்த கோவில் தல விருட்சம் நாகலிங்க மரமாகும்.

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தா்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ள கோவிலாக பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் உள்ளது.

    திருமணத்தடை நீக்கி குழந்தை பேறு அளிக்கும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலை பக்தர்கள் நல்வாழ்வு அருளும் நாடியம்மனாக மனதில் வைத்து வழிபட்டு வருகிறாா்கள்.

    காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களின் இஷ்ட தெய்வமாக விளங்கி வரும் பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலுக்கு தினமும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறாா்கள்.

    அம்மன் சிலை

    தற்போது நாடியம்மாள்புரம் என்று அழைக்கப்படும் இத்தலம் முற் காலத்தில் பெரிய வனமாக விளங்கியது. அக்காட்டிலே தஞ்சையை ஆண்ட மன்னர் வேட்டையாடுவதற்காக வந்தார். மன்னரும் மந்திரியும் வேட்டையாடிக்கொண்டிருந்தபோது ஒரு மான் துள்ளிக் குதித்து ஓடி புதருக்குள் சென்று மறைந்தது. அப்போது வேடர்கள் சிலர் முயலை துரத்திச்சென்று புதரை வெட்ட அந்த புதரில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது.

    இதனால் பதற்றமடைந்த வேடர்கள் புதரை விலக்கி பார்த்தபோது அந்த புதருக்குள் அம்பாள் சிலை ஒன்று இருந்தது. இதைக்கண்டு அதிா்ச்சி அடைந்த வேடர்கள் அம்மன் சிலையின் நெற்றியில் காயம் பட்டு அதில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியதை கண்டு மயக்கம் அடைந்தனர். உடனே அங்கு சென்று நடந்த விவரங்களை கேட்டறிந்த மன்னர், அம்பாளுக்கு அதே இடத்தில் கோவில் கட்ட உத்தரவிட்டு மானியமாக நிலங்களையும் வழங்கினார்.

    ஐம்பொன் சிலை

    அக்காலத்தில் வீரமாநகர் என்ற பட்டுக்கோட்டையில் சிறந்த பக்திமானாகவும், செல்வந்தராகவும் விளங்கிய சின்னான் என்பவரிடம் அம்பாளுக்கு கோவில் கட்டும் பொறுப்பை அரசர் ஒப்படைத்தார்.

    நாடியம்பாளுக்கு கோவில் கட்டி நடராஜர் என்பவர் பூஜை நடத்த சின்னான், நாடியம்பாளை குலதெய்வமாகக் கொண்டு வணங்கி வழிபட்டு வந்தார். நாடியம்மனுக்கு அவர் ஐம்பொன் சிலை வார்த்து ஆராதித்தார். மேலும் இந்த கோவிலில் தீர்த்தக்குளம் உருவாக்கப்பட்டது.

    பங்குனி திருவிழா

    பட்டுக்கோட்டை நாடியம்மனுக்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமையில் காப்புக் கட்டி திருவிழா தொடங்கி 12 நாட்கள் அம்பாள் வீதி உலா வருவது கண்கொள்ளா காட்சியாகும். இந்த 12 நாட்களும் பட்டுக்கோட்டை நகரமும் அதன் சுற்றுவட்டார கிராமங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும்.

    இந்த 12 நாள் திருவிழாவில் 6-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் நாடியம்மன் வெள்ளி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி செட்டியார் தெருவில் வரகரிசி மாலை போடும் விழா ெவகுவிமரிசையாக நடைபெறும்.

    நாடியம்மனுக்கு காப்புக் கட்டியதும் பட்டுக்கோட்டை வாழ் மக்கள் பாயில் படுக்க மாட்டார்கள். நகரில் செக்கு ஆட்ட மாட்டார்கள். உலக்கை சத்தம் கேட்காது. அந்த அளவுக்கு மக்கள் பயபக்தியுடன் இருப்பார்கள். பட்டுக்கோட்டையிலும், சுற்றுப்புறப் பகுதியிலும் நாடிமுத்து, நாடியான், நாடியம்மை என்று குழந்தைகளுக்கு பெயர் வைப்பது அதிகம் உண்டு. நாடியம்மன் கோவில் சில காலம் பரம்பரை அறங்காவலர்களின் பொறுப்பில் இருந்து தற்போது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.

    நாயக்க மன்னர்கள்

    முற்காலத்தில் அடர்ந்த வனமாக விளங்கிய பட்டுக்கோட்டை தற்போது நாடியம்மன் அருளால் பல்வேறு துறைகளிலும் வளர்ச்சி அடைந்து இன்று ஒரு பெரிய நகரமாக விளங்குகிறது. பட்டுக்கோட்டை நாடியம்மனை தேடி வரும் பக்தர்கள் கோடி நன்மை பெறுவார்கள் என்பது சான்றோர் வாக்கு. 1676-ம் ஆண்டுக்கு முன்பு பட்டுக்கோட்டையை நாயக்கர் மன்னர்கள் ஆண்டு வந்தனர்.

    பட்டுக்கோட்டையை ஆண்ட நாயக்கர்களில் ஒருவர் பாளையக்காரரான பட்டு மழவராய நாயக்கர். இவர் பெயரால்தான் பட்டு மழவராயன் கோட்டை என்று அழைக்கப்பட்ட இந்த பகுதி பின்னாளில் பட்டுக்கோட்டை என பெயர் பெற்றது.

    இங்கு சோழர் காலத்தில் சிவன் கோவிலும், பெருமாள் கோவிலும் கட்டப்பட்டன. பின்னர் வந்த நாயக்கர் காலத்தில் தான் நாடியம்மன் புகழ் பரவ தொடங்கியது என கூறப்படுகிறது. நாயக்க மன்னர்களில் ஒருவரான ராமப்ப நாயக்கர், இந்த கோவிலின் கருவறை கட்டியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பழைய கோவிலில் முன் மண்டப அமைப்பு முற்றிலும் நாயக்கர் கலைப் பாணியை தழுவி உள்ளது. முற்காலத்தில் வளைவான செங்கற்கள் சுண்ணாம்பு கொண்டு வலிமையாக கோவில் கட்டப்பட்டிருந்தது. இன்று இக்கோவில் முழுமையாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதால் பழைய சின்னங்கள் அழிந்து விட்டன.

    குழந்தை பேறு அருளும் கோவில்

    கி.பி. 1740-ம் ஆண்டு தஞ்சையை ஆண்ட பிரதாப சிம்ம மகாராஜா நாடியம்மன் புகழை கேள்விப்பட்டு கோவிலுக்குத் திருப்பணி செய்தார். மேலும் அம்மன் உற்சவ திருமேனி, தேர் போன்றவை செய்யப்பட்டன. மாலிக்காபூர் படையெடுப்பின்போது பட்டுக்கோட்டை தாக்கப்பட்டு சிவன், பெருமாள் கோவில்களும் சேதம் அடைந்தன.

    நாடியம்மன் உற்சவர் சிலை மறைக்கப்பட்டு மராட்டியர் ஆட்சிக்கு வந்த பிறகு இச்சிலை செட்டித்தெரு கிணற்றில் இருந்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. பட்டுக்கோட்டை நகரின் குலதெய்வமாக விளங்கும் நாடியம்மன், வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அருளும் தெய்வமாகும். குழந்தைப்பேறு, திருமணத் தடை விலகும் முக்கிய தலமாகும். இந்த கோவில் தல விருட்சம் நாகலிங்க மரமாகும்.

    குடமுழுக்கு

    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ந் தேதி குடமுழுக்கு நடந்தது. இதில் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    முற்காலத்தில் பெரிய ஏரியாக இருந்த நாடியம்மன் கோவில் குளம் தற்போது ஆக்கிரமிப்புகளால் சுருங்கி ஓடை போல காட்சி அளிக்கிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வரகரிசி மாலை போடும் விழா

    கானகத்தில் கற்சிலையாக கிடைத்த நாடியம்மனுக்கு பொற்சிலை வடித்துக் கொடுத்தார் சின்னான். நாடியம்மனின் அருளால் மாதம் மும்மாரி பொழிந்து வரகுப்பயிர் வளமுடன் விளைந்தது. இதனால் மனம் மகிழ்ந்த சின்னான், அம்பிகையே உன்னருளால் எனது காணியில் வரகு விளைந்து வீடு கொள்ளாத அளவுக்கு நிறைந்துள்ளது. உன் அருள் நாடி வந்த எனக்கு செல்வத்தை கோடி, கோடியாய் குவிக்கிறாய். ஆனால் நான் உனக்கு எதை கொடுப்பது? எதை விடுப்பது? என்று தவிக்கிறேன் என்று அம்பாளை வேண்டினார்.

    அப்போது அம்பாள், சின்னானின் கனவில் தோன்றி எனக்கு வரகு அரிசியினாலேயே மாலை தொடுத்து போடு என்று ஆணையிட்டாராம். அன்று முதல் சின்னான் வசித்து வந்த செட்டியார் தெருவில் பங்குனி மாதம் இரண்டாம் செவ்வாய்க்கிழமை காப்புக் கட்டி, மூன்றாம் செவ்வாய் இரவு அம்பாள் மகா மண்டபத்துக்கு எழுந்தருளி தினமும் வீதி உலாவும், ஆறாம் நாள் ஞாயிறு காலை சரஸ்வதி தரிசனம், இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட இந்திர விமானத்தில் வெள்ளி சிம்ம வாகனத்தில் மகா மண்டபத்தில் இருந்து அம்மன் எழுந்தருளி செட்டியார் தெருவில் அம்பாளுக்கு பதுமைகள் வரகரிசி மாலை போடும் விழா அதி விமரிசையாக நடைபெறும். இந்த விழாவைக்காண மாவட்டம் முழுவதும் இருந்து பக்தர்கள் பட்டுக்கோட்டைக்கு வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    கோவிலுக்கு செல்வது எப்படி?

    சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பஸ் அல்லது காரில் பட்டுக்கோட்டைக்கு வந்து பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீ்ட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். நெல்லை, மதுரை, திண்டுக்கல் போன்ற தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து அங்கிருந்து பட்டுக்கோட்டைக்கு சென்று நாடியம்மனை தாிசிக்கலாம்.

    ×