சேலத்தில் இருந்து ஈரோட்டுக்கு அனுமதியின்றி கடத்தப்பட்ட ஆற்று மணல் லாரியுடன் பறிமுதல்
ஈரோடு:
சேலம் மாவட்டத்தில் இருந்து ஈரோட்டுக்கு அனுமதியின்றி ஆற்று மணல் கடத்தப்படுவதாக ஈரோடு கனிம வள கடத்தல் தடுப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து ஈரோடு மாவட்ட கனிம தனி வருவாய் ஆய்வாளர் ரவி, கிராம நிர்வாக அதிகாரி குரு மூர்த்தி மற்றும் அதிகாரிகள் ஈரோடு கனிராவுத்தர்குளம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சேலம் மாவட்டத்தில் இருந்து ஒரு லாரி வந்தது. அந்த லாரியை அதிகாரிகள் தடுத்து சோதனையிட்டனர். அப்போது அந்த லாரி எடப்பாடி அருகே உள்ள சேவூரில் இருந்து வருவது தெரியவந்தது.
அந்த லாரியில் 3 யூனிட் ஆற்று மணல் இருந்தது. ஆனால் அந்த மணலை கொண்டு வருவதற்கான எந்த ஆவணமும் டிரைவரிடம் இல்லை. எனவே மணலுடன் அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த லாரி ஈரோடு தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அடுத்த கட்டமாக ஆர்.டி.ஓ. இது தொடர்பாக விசாரணை நடத்தி அபராதம் விதிப்பார் என்று தெரிகிறது.