கோவை எலக்கட்ரிக்கல் கடைக்காரரிடம் ரூ.76 ஆயிரம் மோசடி
- எலக்ட்ரிக்கல் கடைக்கு வந்த முதியவர் ஒருவர் ரூ.1,01,196க்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கினார்.
- நிகில் ஜெயன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை ராம்நகர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் நிகில் ஜெயன்(வயது29). இவர் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று, நிகில் ஜெயன் கடையில் இருந்தார். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர் ரூ.1,01,196க்கு எலக்ட்ரிக்கல் பொருட்கள் வாங்கினார்.
பின்னர் கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக மெசேஜை காட்டி விட்டு சென்றார். தொடர்ந்து அதேநபர் மறுநாள் பொருட்கள் வாங்க கடைக்கு வந்தார்.
அவரிடம் நிகில் ஜெயன் நீங்கள் அனுப்பிய தொகை எனது வங்கி கணக்கில் வரவில்லை என தெரிவித்தார். அதற்கு அவர் சர்வர் பிரச்சினையாக இருக்கும் என்று கூறி மீண்டும் ரூ.20 ஆயிரம் அனுப்பி விட்டு அவரது செல்போன் நம்பரை கொடுத்துவிட்டு சென்றார். ஆனால் அவர் முதலில் அனுப்பிய தொகை சில நாட்கள் ஆகியும் அவரது வங்கி கணக்கிற்கு வரவில்லை.
இதனையடுத்து நிகில் ஜெயன் அந்த நபரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அதன் பின்னர் வாலிபர் ரூ.5 ஆயிரம் மட்டுமே அனுப்பினார். ரூ.1,01,196க்கு பொருட்கள் வாங்கிவிட்டு அவர் ரூ.25 ஆயிரம் மட்டுமே கொடுத்துள்ளார். மீதமுள்ள 76,196 ரூபாயை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த நிகில்ஜெயன் அந்த நபரை செல்போனில் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து நிகில் ஜெயன் காட்டூர் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கூகுள் பே- மூலம் பணம் அனுப்பியதாக கூறி மோசடியில் ஈடுபட்டவர் காய்கறி கடை உரிமையாளர் உக்கடத்தை சேர்ந்த ஷேக்அப்துல் காதர்(50) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.