- நகைகளை ஏலம் எடுத்து தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.12 ½ லட்சம் மோசடி செய்த இளம்பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள்.
- ரமேஷ், தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்துகொண்டுள்ளார்.
விருதுநகர்
ஈரோடு மாவட்டம் எம்.அம்மன்பட்டி கோவில் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது41). விருதுநகர் ஆலங்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செல்வம் மனைவி பேச்சியம்மாள். இருவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
அதன்பின்னர் இருவரும் நட்பாக பழகி வந்தனர். கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை பார்ப்பதாக ரமேஷிடம் பேச்சியம்மாள் கூறியுள்ளார்.
இந்த நிலையில் தங்களது வங்கியில் 380 கிராம் நகைகள் ஏலத்திற்கு வர உள்ளதாகவும், அவற்றை குறைந்த விலைக்கு ஏலம் எடுத்து தரமுடியும் என்றும் ரமேஷிடம் பேச்சியம்மாள் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
அதனை நம்பிய ரமேஷ் விவரம் கேட்டுள்ளார். அப்போது ரூ.13 லட்சத்து 85 ஆயிரம் கொடுத்தால் 380 கிராம் நகைகளையும் ஏலத்தில் எடுத்து தருவதாக பேச்சியம்மாள் அவரிடம் உறுதி கொடுத்துள்ளார். இதனை நம்பிய அந்த வாலிபர் சிவகாசி பஸ் நிலையத்திற்கு நண்பர்க ளுடன் வந்துள்ளார்.
அதுகுறித்து பேச்சி யம்மாளுக்கு தகவல் கொடுத்தார். பேச்சி யம்மாளும் அங்கு சென்று அவரிடம் பேசியுள்ளார். பின்னர் பல்வேறு வங்கி கணக்கில் இருந்து பேச்சியம்மாளின் வங்கி கணக்கிற்கு ரூ.11 லட்சத்தை பரிமாற்றம் செய்தார்.
மேலும் ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் ரொக்கமாக கொடுத்துள்ளார். அதனை பெற்று கொண்ட பேச்சி யம்மாள் வங்கி கணக்கில் இருந்த பணத்தை எடுத்து கூட்டுறவு வங்கியில் செலுத்த வேண்டும் என்றும், செலுத்திவிட்டு நகைகளை பெற்று கொண்டு வருவதாகவும் அதுவரை பஸ் நிலையத்திலேயே காத்திருக்கும்படியும் கூறிவிட்டு சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.
சந்தேகமடைந்த ரமேஷ் அவரது செல்போன் எண்ணிற்கு அழைத்த போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அப்போது தான் ரமேஷ் தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டுள்ளார்.
உடனடியாக சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் பணம் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை ஏமாற்றிய பேச்சியம்மாளை தேடி வருகின்றனர்.