சந்திரயான் 3: நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த இந்தியா..! லைவ் அப்டேட்ஸ்
- 'லேண்டர்' கருவியை வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கினால், விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா 4-வது இடத்தை பெறும்.
- நிலவின் தென்துருவத்தை தொட்ட முதல் நாடு என்ற அழியாத சாதனையையும் படைக்கும்.
'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் (ஜூலை) 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது.
இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில், நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட நிலவின் மேற்பரப்பு படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் போது எடுக்கப்பட்ட வீடியோ வெளியீடு
ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கருவிகள் செயல்படுவதால், தகவல்கள் வந்த வண்ணம் உள்ளதாக இஸ்ரோ அறிவிப்பு.
நிலவில் திட்டமிட்டபடி பிரக்யான் ரோவர் ஆராய்ச்சி பணியை தொடங்கியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
"சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கியது இஸ்ரோவின் வெற்றி. இது வெளிப்படையானது. நம்முடைய முதல் பிரதமர் நேரு அறிவியல் மற்றும் அதன் வளர்ச்சியை பற்றி பேசியுள்ளார். அரசாங்கத்தை விட, இஸ்ரோவின் அதிகப்படியான வெற்றி என உணர்கிறேன்" என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் சந்திரயான் 3 மிஷனில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதை பரோட்டாவில் இஸ்ரோ என வடிவமைத்து கொண்டாடிய பரோட்டா மாஸ்டர்
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
லேண்டர் தரையிறங்கிய 6 மணி நேரத்திற்கு பின் நிலவின் தரைப்பகுதியில் பிரக்யான் ரோவர் தடம் பதித்தது. ரோவர் அங்கேயே உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்
நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.