சிறப்புக் கட்டுரைகள்

தீராத வலிகளும், தீர்வுகளும்

Published On 2023-08-11 07:57 GMT   |   Update On 2023-08-11 07:57 GMT
  • நமது மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களின் விகித அளவு மாற்றங்களால் மன வலி உண்டாகிறது.
  • யாருக்கு மூளை அதிகமாக வேலை செய்கிறதோ அவர்களுக்கே இரைப்பையில் புண் ஏற்படுகிறது.

நோய் வலியை உண்டாக்குகிறது. வலி என்பது நோய் குறித்து நாம் விழிப்புணர்வு அடைய கொடுக்கும் அறிகுறி என கருதலாம். நமது உடலில் ஏதோ ஒரு பிரச்சினை அல்லது உடல் பாகங்களில் ஏதோ ஒன்று சரி இல்லை என்பதைத்தான் வலி நமக்கு உணர்த்துகிறது. 'ஏ சிம்ப்டமேட்டிக் ஹார்ட் அட்டாக்' போன்ற மாரடைப்புகளும், இன்னபிற வியாதிகளும் வலி இல்லாமலே ஏற்படும்.

உடலில் வலி ஏற்பட்டால், அதற்கு ஓய்வு எடுப்பது மற்றும் மருந்துகள் உட்கொள்வதை நாம் ஒரு நிவாரண வழிமுறையாகக் கையாள்கிறோம்.

சில சமயங்களில் நம் உடலில் காயங்கள் அல்லது வியாதிகளால் அதீத வலி ஏற்படக்கூடும். நாள்பட்ட தீராத வயிற்றுவலி, மூட்டு வலி, தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகளால் தற்கொலை செய்து கொள்பவர்கள் ஏராளம்.

இந்த வலிகள் குறித்தும், அதற்கான நிவாரண வழிகளைக் குறித்தும் பார்க்கலாம்.

வலி என்பது 2 விதமாக இருக்கிறது. ஒன்று உடல் வலி. மற்றொன்று மனவலி. இருக்க கூடிய அனைத்து வலிகளிலும் மிகவும் மோசமான வலி எது என்று கேட்டால் அது மனவலியாக தான் இருக்கும்.

மன வலி என்பது மனச்சோர்வு அல்லது மன அழுத்தத்தால் ஏற்படும் ஒரு விளைவு. அதாவது நமது மூளையில் உற்பத்தியாகும் ரசாயனங்களின் விகித அளவு மாற்றங்களால் மன வலி உண்டாகிறது.

நமது உடலின் ஒரு பகுதியில் ஏற்படும் வலியை நமக்கு உணரச் செய்வதே இந்த மூளைதான். எனவே, சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை மனவலி க்கான காரணங்களைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப மன நல ஆலோசனைகள், மாத்திரைகள் உட்கொண்டு அதனை சரி செய்வதே சிறந்தது.

வயிற்று வலி:

மனிதனாகிய நாம் வயிற்றுக்கான உணவினை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி சரியான நேரத்தில் உணவினை எடுத்து கொள்ளவில்லை என்றால் வயிற்றில் வலி ஏற்படுகிறது. வயிற்று வலிக்கு முக்கிய காரணம் இரைப்பையில் புண் மற்றும் பித்தப்பையில் கல் ஏற்படுவதே காரணம்.

வயிற்றில் ஒரு அமிலம் சுரக்கிறது. அந்த அமிலம் சாப்பாடு வருகிறதா என்று எட்டி பார்க்கிறது. அப்படி வரவில்லை என்றால் வயிற்றில் உள்ள உள் சுவர்களை அரித்து விடுகிறது. மேலும் வயிற்றையே செரிக்க ஆரம்பித்து விடுகிறது. இதனால் வயிறு புண்ணாகி போகிறது.

வலி எப்போது வருகிறது, எப்போது குறைகிறது என்று கேட்கலாம். சாப்பிட்டதும் வலி குறைகிறது. சாப்பிட்டு 6 மணி நேரம் கழித்து மீண்டும் வலி வருகிறது. அதாவது ஆகாரம் வயிற்றுக்குள் போனால் வலி குறைகிறது. ஆகாரம் இல்லையென்றால் வலி எடுக்கிறது. இப்படி இருந்தால், இரைப்பையில் புண்(அல்சர்) ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.

சாதாரணமாக இந்த புண் ஆறாது. இதனை குணப்படுத்த ஆண்டாசின், சிமாட்டின் உள்ளிட்ட மாத்திரைகள் எடுத்து கொண்டால் இந்த நோயினை குணப்படுத்த முடியும். அல்லது ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்.

யாருக்கு மூளை அதிகமாக வேலை செய்கிறதோ அவர்களுக்கே இரைப்பையில் புண் ஏற்படுகிறது. தீராத வயிற்று வலியால் கணையத்தில் கூட கட்டி வரலாம். 100 மில்லி வர வேண்டிய இடத்தில் அமிலம் 1000 மில்லியாக வெளி வந்தால், இரைப்பை மட்டுமல்ல குடல் முழுவதுமே புண் ஏற்படும். அதனை சரி செய்ய சிமாட்டின் மாத்திரைகள் அல்லது பான்கிரியாஸ் ஆபரேஷன் செய்து கொள்ள வேண்டும்.

இரைப்பையில் புண் வந்தது தெரிந்தால் கடையில் மருந்து வாங்கி சாப்பிடக்கூடாது. உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இரைப்பை மற்றும் கல்லீரலுக்கு என்று நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களும் உள்ளனர். அவர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். அவர்கள் கூறும் மருந்து, மாத்திரைகளை எடுத்து கொண்டால் நாள்பட்ட வயிற்று வலியை சரி செய்ய முடியும்.

தலைவலி

இடி இடித்தால் எப்படி சத்தம் வருகிறதோ, அதுபோன்ற சத்தம் நம் தலையில் இடித்து கொண்டிருந்தால், நம் தலையில் உள்ள ரத்தக்குழாய் உடைந்து விட்டது என்று அர்த்தம்.

'மைக்ரைன், டென்ஷன்' போன்ற காரணங்களால் நாள்பட்ட தலைவலி ஏற்படலாம். இதுவும், திடீரென தொடர்ச்சியாக வரக்கூடிய தலைவலியும் வேறு வேறு. இப்படிப்பட்ட பிரச்சினையை சந்திக்க நேரிடும்.

ஒருவருக்கு மூளையில் ரத்தக் கசிவு அல்லது அடைப்பு அல்லது ஏதேனும் கட்டி உருவாகி அதில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை மேற்கொண்டு அதற்கேற்ப சிகிச்சைகள் வழங்க வேண்டும்.

மற்றொன்று, முகத்தில் ஏற்படக்கூடிய மின்னல் வலி. பல் துலக்கும் போதும், சாப்பிடும் போதும், காற்று பட்டாலும், சிரித்தாலும் இந்த வலி ஏற்படும். இதனால் சில நோயாளிகள் சாப்பிடக்கூட முடியாமல் அவதியடைகின்றனர். முகத்திற்கு மேல் வரும் ரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படும்போது இந்தப் பிரச்சினை ஏற்படுகிறது. இந்த வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அடுத்தக்கட்டமாக அறுவை சிகிச்சை அல்லது 'ரேடியோ ப்ரீக்வன்சி' மூலமாக சிகிச்சை மேற்கொள்ளலாம்.

முதுகு மற்றும் கழுத்து வலி வராமல் இருக்க தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தசைகளுக்கு அதிகமாக அழுத்தம் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் 20 நிமிடங்களாவது நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் உள்ள கடைக்குச் செல்வதற்குக்கூட வாகனத்தின் உதவியை நாடிச் செல்ல வேண்டாம், ஒரு சிறிய நடைப்பயிற்சி செய்யலாம்.

பொதுவாக, நேரத்தைக் காரணம் காட்டி முதலில் நாம் தவிர்ப்பது உடற்பயிற்சியைத்தான். எனவே, நேரம் இல்லை என்று கூறி தியானம் மற்றும் உடற்பயிற்சியை உங்கள் வாழ்வில் இருந்து ஒதுக்க வேண்டாம். டி.வி மற்றும் செல்போனில் மூழ்கி இருக்கும் நேரத்தை சற்றே தவிர்த்தாலே தினமும் உடற்பயிற்சி செய்துவிட முடியும்.

மூட்டு வலி பலரையும் வாட்டி வதைக்கிறது. வயதானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்குக் காரணம், எலும்புத் தேய்மானம், வயது முதுமை. இளம் வயதில் மூட்டு வலி வருவதற்கு காரணம், இளம்பெண்கள் ஹை-ஹீல்ஸ் அணிந்து நடப்பது தெரியாமல் செய்வது போன்றவையாகும். இதுபோன்ற காரணங்களால் மூட்டு வலி அதிகமாக வருகிறது.

நாள்பட்ட வலிக்கும் சாதாரண வலிக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. ஒருவருக்கு காலில் அடிபட்டால் சிகிச்சை எடுத்த பின்பு அந்த இடத்தில் வரக்கூடிய வலி சாதாரணமானது. இதைவிட மிகவும் மோசமானது, suicide tendency வலி ஆகும். இது, தொடர்ந்து ஏற்படும் வலியின் இன்னல்கள் காரணமாக ஒருவருக்குத் தற்கொலை செய்யும் எண்ணத்தைத் தூண்டும். அந்த அளவிற்கு இந்த வலி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

எனவே, இதுபோன்ற வலி உள்ளவர்களுக்கு எக்ஸ்ரே, ஸ்கேன் போன்றவற்றை எடுத்துப் பார்த்து, பின்னர் அவர்களுக்கு எந்தப் பகுதியில் வலி இருக்கிறதோ அந்தப் பகுதியில் PRP (Platelet-Rich Plasma) எனும் பரிசோதனை செய்யப்படும்.

இந்த பரிசோதனை மூலம், அவர்களுடைய ரத்தத்தை எடுத்து, சிவப்பு ரத்த அணுக்கள் வெள்ளை ரத்த அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளிலிருந்து பிரித்த பின்பு, அந்த பிளேட்லெட் மீண்டும் ஊசி மூலமாக வலியுள்ள இடத்தில் செலுத்தும்பொழுது அவர்களுக்குப் பூரண வலி நிவாரணம் ஏற்படுகிறது.

எப்படியெனில், ஊசி செலுத்தும்போது அவர்களுக்கு அந்தப் பகுதியில் புதிய செல்கள் உருவாகிறது. அதனால் அவர்கள் குணமடைகின்றனர். தோள்பட்டை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படக்கூடிய வலிகளுக்கும் எளிமையான மருத்துவம் உள்ளது.

எந்த பகுதியில் வலி இருக்கிறதோ அதே பகுதியில் ஊசி மூலமாக மருந்து செலுத்தி வலியைக் குணப்படுத்தலாம். அதனால் நீண்ட நாள் வலிகள் இருப்பவர்கள், நமக்கு நிரந்தரத் தீர்வு இல்லையே என வருந்தத் தேவையில்லை.

வலி நிவாரண சிகிச்சை என்பது உடல் உறுப்புகளில் ஏற்படும் நாள்பட்ட வலிகளுக்கு மட்டும் அல்ல. மிக சவாலான அறுவைசிகிச்சைக்குப் பிறகு நோயாளியின் மன பயத்தைப் போக்கி இயன்முறை மருத்துவம் செய்துகொள்ள உதவும் வகையில் வலி நிவாரண சிகிச்சையானது, தற்போதைய நவீன மருத்துவத்தில் ஒரு இணை உதவி மருத்துவமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் எந்த வலி வந்தாலும் உடனே மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுத்து கொண்டால் சிறப்பான வாழ்க்கை வாழலாம்.

தொடர்புக்கு:

info@kghospital.com, 98422 66630

Tags:    

Similar News