சிறப்புக் கட்டுரைகள்

ஆதிகும்பேஸ்வரர்-கும்பகோணம்

Published On 2023-09-15 08:37 GMT   |   Update On 2023-09-15 08:37 GMT
  • கும்பேஸ்வரரை ஒரு நாள் தரிசித்தாலே நற்பெயர் கிடைக்கும். தொடர்ந்து தரிசித்தால் மோட்சம் கிடைக்கும்.
  • கரும்பாயிரம் விநாயகரை வழிபட்ட பிறகு நீங்கள் அடுத்து அருகில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு தான் வர வேண்டும்.

கும்பகோணம் நகரம் எப்படி உருவானது என்பதை கடந்த வாரம் பார்த்தோம். ஜீவ வித்துக்கள் கொண்ட அமுத கலசத்தை சிவபெருமான் அம்பு எய்து தெறிக்க வைத்ததால் அந்த அமுதம் சிதறி நாலாபுறமும் பாய்ந்தது. அந்த அமுதம் பாய்ந்தோடிய இடங்களில் எல்லாம் லிங்கங்கள் தோன்றி ஆலயங்கள் உருவானது. அமுத கலசம் தங்கிய இடத்துக்கு கும்பகோணம் என்ற பெயர் ஏற்பட்டது.

மாசி மாதத்தில் இந்த நிகழ்வு நடந்ததாக குறிப்புகள் உள்ளன. எனவேதான் மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் கும்பகோணம் எப்போதும் திருவிழா கோலமாக மாறிவிடும். அதிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகாமகம் திருவிழா நாடெங்கும் உள்ள பக்தர்களை கும்பகோணத்துக்கு வரவழைப்பதாக இருக்கும்.

கும்பகோணத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆலயங்கள் இருந்தாலும் பிரபஞ்சம் தோன்ற காரணமாக அமைந்த கும்பேஸ்வரர் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆதிகும்பேஸ்வரர் ஆலயம்தான் முதன்மையானதாக கருதப்படுகிறது. கரும்பாயிரம் விநாயகரை வழிபட்ட பிறகு நீங்கள் அடுத்து அருகில் உள்ள கும்பேஸ்வரர் ஆலயத்துக்கு தான் வர வேண்டும்.

கும்பகோணம் நகரின் நடுநாயகமாக இருக்கும் ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தை கும்பகோணத்தின் தலைமை கோவில் என்றே அழைக்கிறார்கள். 128 அடி உயர ராஜகோபுரத்தை வணங்கி விட்டு உள்ளே சென்றால் மிக பிரமாண்டமான ஆலயத்தை காணலாம். ஆலயத்தின் ஒவ்வொரு பகுதியும் வரலாற்று பின்னணி கொண்டது.

ஒவ்வொரு சன்னதியும் ஒரு கதை சொல்லும் மகத்துவம் மிக்கது. எனவே கும்பேஸ்வரர் ஆலயத்தை அவசரம் அவசரமாக வழிபடாமல் பொறுமையாக, நிதானமாக நடந்து வழிபட்டால் பல புதிய தகவல்களை உங்களால் தெரிந்து கொள்ள முடியும்.

விநாயகர், முருகர், அம்பாள், அகத்தியர், சப்த கன்னியர், வீரபத்ரர், லட்சுமி நாராயண பெருமாள் என்று பல்வேறு கடவுளர்களுக்கும் தனித்தனி சன்னதிகள் நிரம்பிய ஆலயம். குறிப்பாக மங்களாம்பிகை சன்னதி அதிக சிறப்பு வாய்ந்தது. புன்னகை ததும்ப காட்சி அளிக்கும் மங்களாம்பிகை கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து விடுவது போல இடது காலை சற்று முன்னே வைத்து நிற்கும் அழகே அழகு.

அம்பிகையின் நிகரற்ற அருள்பீடமாக மங்களாம்பிகை சன்னதி கருதப்படுகிறது. கருவறையில் கும்பேஸ்வரர் கிழக்கு நோக்கிய வண்ணம் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார். அமுதத்தையும், மணலையும் குழைத்து உருவாக்கப்பட்ட லிங்கமாக இந்த லிங்கம் திகழ்கிறது. எனவே கவசம் சாத்தப்பட்டுள்ள இந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யப்படுவது இல்லை. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. லிங்கத்துக்கு பவுர்ணமி தோறும் புனுகு சட்டம் சாத்துகிறார்கள்.

கும்பேஸ்வரர் ஆலய கருவறை லிங்கத்தில் இருந்து தெய்வீக கதிர்வீச்சு தினமும் வெளியில் வருவதாக பக்தர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. அந்த தெய்வீக கதிர்வீச்சை பக்தர்களில் சிலர் அடிக்கடி உணர்வதும் உண்டு.

ஆதி கும்பேஸ்வரரை வழிபட்டால் எங்கு செய்த பாவமும் இல்லாமல் போய் விடும் என்பது ஐதீகமாகும். கும்பேஸ்வரர் ஆலயம் நம் வாழ்க்கை பயணத்துடன் தொடர்புடையது. அதாவது மனித குலத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் சக்தியை இந்த ஆலயம் கொண்டிருப்பதாக புராணங்களில் புகழப்பட்டுள்ளது. எனவேதான் கும்பகோணத்துக்கு யாத்திரை வருபவர்களுக்கு இந்த ஆலயத்தில் முதலில் வழிபட்டு தொடங்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

பிரபஞ்சத்தில் பிரளயம் ஏற்பட்ட பிறகு பிரம்மன் கும்பகோணத்தில்தான் தனது படைப்பு தொழிலை முதல் முதலாக தொடங்கினார். இதற்காகவே சிவபெருமான் இந்த தலத்தில் லிங்கத்துக்குள் உறைந்து சுயம்பு வடிவமாக மாறினார் என்று சொல்வார்கள். இதன் மூலம் உயிர் படைப்பின் தொடக்கமாக இந்த தலம் கருதப்படுகிறது. எனவே ஒவ்வொரு பக்தரும் இந்த தலத்தில் வந்து வழிபடுவது என்பது பிறவி கடமையாக சொல்லப்படுகிறது.

உயிர்களின் தொடக்கத்துக்கு மூலமாக திகழும் இந்த தலத்தில் வழிபட்டால் வாழ்வின் சவால்களை சமாளிக்கும் ஆன்மீக சக்தி கிடைக்கும் என்பது கூடுதல் சிறப்பாகும். கும்பேஸ்வரரை மனமுருகி வழிபட்டால் உடல் பிரச்சினைகள் மட்டுமல்ல மன பிரச்சினைகளும் நீங்கும் என்பது லட்சக்கணக்கான பக்தர்களின் அனுபவமாகும்.

இந்த தலத்தில் சிவபெருமான் தனது 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளை மங்களாம்பிகைக்கு கொடுத்து பிரதிஷ்டை செய்ததாக குறிப்புகள் உள்ளன. அம்பாள் ஏற்கனவே 36 ஆயிரம் கோடி மந்திர சக்திகளை கொண்டவள். சிவனின் 36 ஆயிரம் மந்திர சக்திகளையும் சேர்த்து 72 ஆயிரம் கோடி மந்திர சக்தி கொண்டவளாக மங்களாம்பிகை திகழ்கிறாள்.

எனவே மங்களாம்பிகையை இந்த தலத்தில் மனமுருக வழிபட்டால் மங்களம் உண்டாகும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்ம ராசியிலும், சூரியன் கும்ப ராசியிலும், சந்திரன் குருவுடன் இணையும் மாசி மாத பவுர்ணமி நாளில் வரும் மகாமக பெருவிழா இந்த ஆலயத்துடன் முதன்மையான தொடர்பு கொண்டதாகும். எனவே மகாமக குளத்தில் புனித நீராடி யார் ஒருவர் கும்பேஸ்வரரை மனமுருக வழிபாடுகள் செய்கிறாரோ அவருக்கு நினைத்ததெல்லாம் நடக்கும்.

சித்தர்களில் குள்ளமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர் இங்குதான் ஐக்கியமாகி இருக்கிறார். அவர் கும்பேஸ்வரரையும் மங்களாம்பிகையையும் தியானம் செய்து வழிபட்டு நிகரற்ற ஆற்றல்களை பெற்றார். அதனால்தான் சீதையை மீட்க வந்த ராமருக்கு அவரால் இந்த தலத்தில் நல்ல வழியை காட்ட முடிந்தது. அதை உணர்த்தும் வகையில் அகத்தியர் இந்த ஆலயத்தில் தனி சன்னதியில் இருக்கிறார்.

அந்த சன்னதி முன்பு அமர்ந்து அகத்தியரை நினைத்து தியானம் செய்தால் அவரது அருள் அலைகள் பெருகி வருவதை உணர முடியும். அதுபோல காஞ்சி மகாபெரியவர் இந்த தலத்தில் அம்பாளை பார்த்து அமர்ந்து தியானம் செய்த இடம் இங்கு சிறப்பான இடமாக கருதப்படுகிறது. அங்கு அமர்ந்து தியானம் செய்தால் மனம் அமைதி அடைவதாக சொல்கிறார்கள்.

படைப்பு தொழிலை தொடங்கிய பிரம்மனிடம் சிவபெருமான், "உமக்கு வேறு என்ன வேண்டும்?" என்று கேட்டாராம். அப்போது பிரம்மன், "மனிதர்கள் பல்வேறு வகையான பாவங்களை செய்து விடுகிறார்கள். அந்த பாவங்களில் இருந்து விடுபடுவதற்கு ஏற்ப சில வரங்களை தர வேண்டும்" என்று கேட்டாராம். அதன்படி சிவபெருமான் சில வரங்களை கொடுத்துள்ளார்.

* கும்பேஸ்வரரை ஒரு நாள் தரிசித்தாலே நற்பெயர் கிடைக்கும். தொடர்ந்து தரிசித்தால் மோட்சம் கிடைக்கும்.

* கும்பேஸ்வரரை கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தினத்தன்று நெய் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால் நிறைவான வாழ்க்கை பெற்று முக்தியை பெற முடியும்.

* கும்பேஸ்வரர் ஆலயத்தில் திருப்பணி செய்பவர்களுக்கு வேண்டுபவை எல்லாம் தாமதமின்றி கிடைக்கும்.

* மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரத்தன்று கும்பேஸ்வரரை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் உள்பட முக்கிய தோஷங்கள் அனைத்தும் பனி போல் விலகி விடும்.

* மாசி மாத விழா நாட்களில் கும்பேஸ்வரரை வழிபட்டால் குலவிருத்தி உண்டாகும்.

* மகாமகம் குளத்தில் நீராடி கும்பேஸ்வரரை வழிபட்டில் அஸ்வமேத யாக பலன்களுக்கு நிகரான பலன்கள் வந்து சேரும்.

* கும்பேஸ்வரர் ஆலயத்தில் கொடி மர வழிபாட்டால் தொடங்கி இறுதி வரை ஆகம விதிகளுடன் உரிய வழிபாட்டை செய்தால் எல்லா பாவங்களும் நீங்கி விடும்.

-இப்படி பல்வேறு பலன்களை தருவதாக கும்பேஸ்வரர் பிரம்மனிடம் வாக்களித்து இருப்பதால் நிச்சயம் இந்த தலத்து வழிபாடு வாழ்க்கை மேம்பாட்டுக்கான வழிபாடாக இருக்கும்.

சுயம்பு வடிவமாகவும், சக்தி பீடமாகவும் இந்த தலத்து கும்பேஸ்வரரும், மங்களாம்பிகையும் இருப்பதால் இவர்களை வழிபடும் அனைவருக்கும் மங்களம் உண்டாகும். வெள்ளிக்கிழமைகளில் மங்களாம்பிகைக்கு செம்பருத்தி பூக்களை மாலையாக அணிவித்து வழிபட்டால் வாழையடி வாழையாக வம்சவிருத்தி உண்டாகும். செம்பருத்தி பூவால் மங்களாம்பிகைக்கு மகுடம் சூட்டினால் குபேரன் ஆவான் என்று பிருமாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

இப்படி கும்பேஸ்வரர் ஆலயத்தில் எத்தனையோ பலன்களை உங்களால் பெற முடியும். இங்கு வழிபட்ட பிறகு கும்பகோணத்தை சுற்றியுள்ள ஆலயங்களுக்கு சென்று வழிபட தொடங்கலாம்.

கரு உருவாவது முதல் வாழ்க்கையின் நிறைவு வரை ஒவ்வொரு கால கட்டத்திலும் என்ன நடக்கும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டதாக கும்பகோணம் பகுதி ஆலயங்கள் உள்ளன. அந்த வகையில் கருவை உருவாக்கும் ஆலயமான கருவளர்ச்சேரி ஆலயத்தை அடுத்த வாரம் காணலாம்.

Tags:    

Similar News