சிறப்புக் கட்டுரைகள்

இந்தியப் பெருங்கடல் இனி பாரதப் பெருங்கடலா? தராசு ஷ்யாம்

Published On 2023-09-17 11:29 GMT   |   Update On 2023-09-17 11:29 GMT
  • பெயர் மாற்றத்திற்குச் சர்வதேச அளவில் ஒப்புதல் தேவைப்படும்.
  • அரபிக்கடலை ஒட்டிய இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை மலபார் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

"பாரதம், இந்தியா" பட்டிமன்றம் அனல் பறந்துகொண்டிருந்த ஜி-20 மாலை வேளை! வழக்கமாக நான் தொலைபேசியில் பேசும் எங்கள் கிராமத்து ஏழாம் வகுப்புக் குட்டி ஒரு மாபெரும் சந்தேகத்தைக் கிளப்பியது:

"அங்கிள்.. இனி இண்டியன் ஓஷனை எப்படி அழைக்க வேண்டும்? பாரதப் பெருங்கடல் என்றா? "

மறுநாள் கிளாஸ் டெஸ்ட்! கவலையைப் புரிந்துகொள்ள முடிந்தது. பெயர் மாற்ற அரசியல் விளையாட்டில் மறுபடியும் முதலில் இருந்து படிக்க வேண்டும்! எனது லாயர் நண்பர்களுக்கும், சட்டக் கல்லூரி மாணவ மணிகளுக்கும் இதே கவலை இருக்கிறது. இந்திப் பெயர் சூட்டப்பட்ட புதிய சட்டங்கள் படுத்துகிற பாடு, ஆத்தாடி, ஆத்தா!

உண்மையில் "இந்தியப் பெருங்கடல்" என்பதைப் பெயர் மாற்றம் செய்ய முடியுமா? அது யார் வைத்தது? நம்மை அடிமைப்படுத்திய வெள்ளைக்காரனா? அல்லது அதற்கு முந்திய இஸ்லாமிய அரசர்களா? வங்காள விரிகுடா என்ற "பே ஆப் பெங்கால்", அரபிக் கடல் என்ற "அராபியன் ஸீ" ஆகியவற்றின் கதி?

வரலாறு முழுவதும் இந்தியாவைச் சுற்றியுள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்கள் பல்வேறு பெயர்களால் அறியப்பட்டு வந்திருக்கின்றன, இந்திய மற்றும் உள்ளூர் மொழிகளில் இருந்து காலப்போக்கில் உருவாகியுள்ளன. வேறு சில வெவ்வேறு ஆட்சியாளர்கள் மற்றும் கலாச்சாரப் பாதிப்புகளால் தோன்றியவை.

அரபிக்கடல்:- இந்தியத் துணைக் கண்டத்தின் மேற்கே அமைந்துள்ள அரபிக் கடல் பல நூற்றாண்டுகளாக அரேபிய தீபகற்பத்தின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தியாவிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் கலாச்சாரத் தொடர்புகளின் காரணமாக ஏற்பட்டது.

இந்தியப் பெருங்கடல்: இந்தியத் துணைக் கண்டத்தைச் சூழ்ந்துள்ள இந்து மகா சமுத்திரம் உலகின் மூன்றாவது பெருங்கடல். கி. பி. 1515 வரைபடத்தில் குறிப்பிடப்பட்டி ருந்த பெயர் நாளடைவில் "இந்தியப் பெருங்கடல்" ஆனது. தமிழன் வைத்த பெயர் "குமரிக்கடல்!"

மன்னார் வளைகுடா: இந்தியாவின் தென் முனைக்கும் இலங்கையின் வடக்குக் கடற்கரைக்கும் இடையில் மன்னார் வளைகுடா அமைந்துள்ளது. இலங்கையின் மன்னார் நகரின் பெயரால் இது அழைக்கப்படுகிறது. ராமர் பாலம் பற்றிய சர்ச்சை ஏற்கனவே உள்ளது. "வடக்கே அயோத்தியில் ராமர் கோவில்! தெற்கே ராமர் கடல்!" என்று அண்ணாமலை விவாதத்தைக் கிளப்பலாம்!

வங்காள விரிகுடா: இந்தியாவின் கிழக்கே உள்ள வங்காள விரிகுடா நீண்ட காலமாக இந்தப் பெயரில் அறியப்படுகிறது. "வங்காளம்" என்ற சொல் இப்பகுதியில் இருந்த பழங்கால ராஜ்யமான வாங்காவில் இருந்து வந்திருக்கலாம். குணக்கடல் என்று தமிழர்கள் அழைத்து வந்தனர். அரபிக்கடலுக்குக் குடக்கடல் என்ற தமிழ்ப் பெயர் உண்டு.

வங்காள வளைகுடா: இந்தப் பெயர் வரலாற்று ரீதியாக வங்காள விரிகுடாவின் வடக்குப் பகுதிக்குப் பாரசீக மற்றும் அரபு மூலங்களில் பயன்படுத்தப்பட்டது. இந்திய மொழியான வங்கத்தின் கலப்பு இருப்பதால் இந்தப் பெயரை அப்படியே விட்டுவிடலாம்! அல்லது மம்தா பானர்ஜி மீதுள்ள கோபத்தால் "பாரத விரிகுடா" என்று பெயர் மாற்றம் செய்தாலும் தப்பில்லை.

கோரமண்டல் கடற்கரை: வங்காள விரி குடாவை ஒட்டிய இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரை கோரமண்டல் கடற்கரை என்று ஐரோப்பிய காலனித்துவ சக்திகளால் குறிப்பாகப் போர்த்துகீசியர்களால் பெயரி டப்பட்டது. தாராளமாக எதிர்ப்புத் தெரிவிக்கலாம்! சோழ வம்சத்தைக் குறிக்கும் "சோழ மண்டலம்" என்ற தமிழ்ச் சொல் இருப்பதால் அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்து சோழர் செங்கோல் வரலாற்றோடு "லிங்க்" கொடுத்து தமிழ்நாட்டின் பெருமையைக் காப்பது மோடி தான் என்று மார் தட்டிக்கொள்ளலாம்.

மலபார் கடற்கரை: அரபிக்கடலை ஒட்டிய இந்தியாவின் தென்மேற்கு கடற்கரை மலபார் கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. "மலபார்" என்ற பெயர் பண்டைய இந்திய வேர்களைக் கொண்டுள்ளது. எனவே பெயர் மாற்றம் தேவை இல்லை. அல்லது கேரளாவில் காலூன்ற ஏதாவது வழி கிடைக்குமென்றால் மலையாள மொழி விற்பன்னர்களைக் கலந்து புராதனப் பெயர்களைத் தேடலாம்.

லட்சத்தீவுக்கடல்: இந்தியாவின் மேற்குக் கடற்கரைக்கும் லட்சத்தீவுகளுக்கும் இடையே அமைந்துள்ளது. "லட்சத்தீவு" என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தைகளான "லக்ஷ்யா" (நூறாயிரம்) மற்றும் "த்வீப்" (தீவு) ஆகியவற்றி லிருந்து பெறப்பட்டது. எனவே பெயர் மாற்ற பனிஷ்மெண்ட் நஹி!

எனது நண்பர் ஒருவர் சர்வதேசப் பெயர் மாற்ற ஸ்பெஷலிஸ்ட். அவரிடம் கேட்டேன்.

"இந்தியப் பெருங்கடலின் பெயரை "பாரத் பெருங்கடல்" என்று மாற்றுவது முடியாது. அது உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய மாற்றத்திற்கு சர்வதேச அமைப்புகளை உள்ளடக்கிய நீண்ட ராஜதந்திர செயல்முறை தேவைப்படும்." என்றார் அவர்.

அதனால் என்ன? ஜி 20 அதிகரப்பூர்வமாக நிறைவடைந்து தலைமைப் பொறுப்பை மாற்றிக் கொடுத்த பிறகும் நவம்பர் மாதம் "இணைய ரீவ்யூ" வைத்துக்கொள்ள முடிவு செய்திருக்கிறோம் அல்லவா? அதில் இதை "புரோபோஸ்" செய்தால் போயிற்று! தேர்தல் வரை பேசுபொருள் வேண்டும் சுவாமி!

ஆனாலும் "ஸ்பெஷலிஸ்ட்" நம் கருத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தார். தேசத் துரோகி!

"கடல்சார் வரைபடம் உலகெங்கிலும் உள்ள நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே பெயர் மாற்றத்திற்குச் சர்வதேச அளவில் ஒப்புதல் தேவைப்படும். அந்தப் பொறுப்பு சர்வதேச ஹைட்ரோகிராபிக் அமைப்பிடம் (IHO) உள்ளது." என்று முட்டுக்கட்டை போட்டார். "அடப் போங்க சார்.. உங்களுக்குத் தேச பக்தியே இல்லை!" என்று கூறி விட்டு இடத்தைக் காலி செய்தோம்.

அந்த நேரத்தில் வந்து சேர்ந்தார் வலதுசாரி ஆதரவாளர் ஒருவர். "இந்தியாவைச் சுற்றியுள்ள எல்லாக் கடல்களுக்கும் பெயர் மாற்றம் அவசியம் தேவை!" என்று அவர் பிடிவாதமாகக் கூறினார். நேரடியாக ஏதோ டிவி விவாத மேடையிலிருந்து வந்திருப்பார் போலும்!

முக்கியமாக அவர் சுட்டிக் காட்டியது தமிழ்நாட்டின் தென் கிழக்கு முனையை! அது "பாக் ஜலசந்தி" என்று அழைக்கப்படுவது காரணம். "ஜி.. பால்க் ஜலசந்தி என்பது பேச்சுவழக்கில் அப்படி ஆகிவிட்டது!" என்று சமாதானப்படுத்திப்பாரத்தோம். அவர் கேட்கவில்லை. "யார் பால்க்? வெள்ளைக்காரன் தானே?" என்று கோபப் பார்வை பார்த்தார்.

"இந்தியாவின் தென்கிழக்கு முனையை இலங்கையின் வடக்குக் கடற்கரையில் இருந்து பிரிக்கும் நீர்நிலை பால்க் ஜலசந்தி. ராபர்ட் பால்க் என்பவர் 1755 முதல் 1763 வரை மெட்ராசின் (இப்போது சென்னை) ஆளுநராகப் பணியாற்றினார். அவரது பதவிக்காலத்தில் அவர் ஆற்றிய சேவை மற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த ஜலசந்திக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது." என்று நமது "ஜி"யிடம் விளக்கினோம்.

"மாத்தனும் சார்.. எல்லாத்தையும் மாத்தனும்!" என்று பொங்கியவாறே தனது கோட்டைச் சரி செய்துகொண்டு அவிழ்ந்திருந்த காலணிகளின் முடிச்சுகளைச் சீராக்கி விட்டுத் தலை சிறந்த தேசபக்தனுக்கே உரிய கம்பீரத்தோடு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நடந்தார், "ஜி"!

ஆத்தாடி.. இவ்வளவு சிக்கல்களா? இந்தியப் பிரதமர் எவ்வளவு எளிதாக பாரதப் பிரதமர் ஆகி விட்டார்? இந்தியக் குடியரசுத் தலைவரை எத்தனை ஈசியாக பாரத ஜனாதிபதி என்று பெயர் மாற்றம் செய்து விட்டோம்? நமது எல்லைக்குட்பட்ட கடல் மற்றும் நீரிணைகளின் பெயரை மாற்ற முடியாதா? அதிலும் "பால்க் ஜலசந்தி" வெள்ளைக்காரக் கவர்னரின் பெயரால் அழைக்கப்படுவது இந்த தேசத்துக்கே அவமானம் அல்லவா?

மீண்டும் எட்டிப் பார்த்தார் நமது "ஸ்பெஷ லிஸ்ட்" நண்பர். அவர் கையில் இந்திய அரசின் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்ட இந்திய அரசமைப்பு தமிழ் மொழிபெயர்ப்பு இருந்தது. டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை செய்த தமிழாக்கம் அது. புத்தகத்தைக் காட்டி அவர் ஆவேசமாகச் சொன்னார்.

"சார்.. நமது அரசமைப்புச் சட்டத்தின் பகுதி ஒன்றில் "ஒன்றியமும் அதன் ஆட்சி நிலையும்" என்ற தலைப்பில் ஒன்றியத்தின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஓஹோ.. ஒன்றிய சர்ச்சை) பகுதி இரண்டில் "இந்திய மரபினரின் குடிமை உரிமைகள்" என்று இருக்கிறது. அதை "பாரத மரபினர்" என்று மாற்றினால் விடுதலைக்கு முன்னால் ஒரே நாடாக இருந்தபோது இங்கு இருந்த வம்சாவளியும் சேர்ந்துவிடும்!"

ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நமது நண்பர் "ஸ்பெஷலிஸ்ட்"டை அடிக்கடி தொலைக்காட்சி விவாதங்களில் நீங்கள் பார்க்கலாம்.

"ஐந்தாம் பகுதியில் "இந்தியக் குடியரசுத் தலைவர்" "இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்" என்று தெளிவாக உள்ளது. அப்படி இருக்கும்போது எப்படி சார் பாரத ஜனாதிபதி என்று பெயர் மாற்றம் செய்யலாம்?" என்று புத்தகமும் கையுமாக அடித்துப் பேசினார் அவர்.

"முகப்புரையே "இந்திய மக்களாகிய நாம்" என்றுதான் துவங்குகிறது. பழங்காலத்தில் வழக்கில் இருந்த பெயர்தான் பாரதம். நாம் நவீன தேசம் ஆனபோது நம்மிடமிருந்து பிரிந்தது பாகிஸ்தான். பிரியாமல் எஞ்சி இருந்த பகுதி இந்தியா. ஐநா சபைக்கு பாகிஸ்தான் தான் புதிய உறுப்பினர். ஆனால் இந்தியா ஏற்கனவே இருந்த மெம்பர்ஷிப்பை தக்க வைத்துக் கொண்டது. "பாரதம் என்ற இந்தியா" என்பதை தவிர வேறு எங்கும் பாரதம் என்ற பெயர் அரசியலமைப்பில் பயன்படுத்தப்படவில்லை." என்று தன் வாதத்திற்கு வலுச் சேர்த்தார்.

"பிரதர்.. இதெல்லாம் நமது மாட்சிமை தாங்கிய ஜனாதிபதிக்கும், மாண்புமிகு பிரதமருக்கும் தெரியாதா? நீங்கள் மட்டும் தான் மேதாவியா? ஜி 20 உலக நாடுகள் மத்தியில் "பாரதப் பிரதமர்" என்று சூசகமாகச் சொல்லி விட்டாரே, மோடி?' என்று மடக்கினோம்.

"சார்.. எல்லாமே தப்பு! (எதையும் ரைட் என்று ஒத்துக் கொள்ளாத ஸ்பெஷலிஸ்ட் அவர்) ஜி 20 மாநாட்டு இலச்சினையில் தாமரைச் சின்னம்! அதற்கு யூனியன் பட்ஜெட்டில் 990 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. கடைசியில் 4100 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறார்கள். ஆனாலும் டெல்லியின் ஒரு நாள் மழைக்கே தாக்குப் பிடிக்காமல் ஜி 20 அரங்கமான "பாரத மண்டபத்தில்" தண்ணீர் தேங்கி நின்றது! 2004 ஆகஸ்ட் 3 அன்று உ. பி. சட்டமன்றத்தில் மறைந்த முலாயம்சிங் யாதவ் "பாரத் என்ற இந்தியா" பெயர் மாற்றத் தீர்மானம் கொண்டுவந்தார். அப்போது அதை ஏன் இவர்கள் எதிர்த்தார்கள்? " என்று வரலாறு பேசினார் அவர்.

அப்போது மீண்டும் பிரசன்னமானார் இன்னொரு "ஜி!" இவரையும் டிவி விவாதங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். யாரையும் பேசவிடாமல் சண்டமாருதமாகப் பொங்குவாரே அவர் தான்!

"பாரத மண்டபம் என்று பெயர் வைத்தது இந்த தேச விரோதிகளுக்குப் பொறுக்கவில்லை. மழைத் தண்ணீர் சிறிது நேரம் தேங்கியதைப் பெரிய விஷயமாக்குகிறார்கள். புதிய நாடாளுமன்றக் கட்டிடப் பணியாளர்களுக்கு மேற்கத்திய பாணிச் சீருடைக்குப் பதிலாகப் பாரதக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பஞ்சகச்ச சீருடை கொடுத்திருக்கிறோம்." என்று பெருமையுடன் சொன்னார் அவர்.

"பெரிய அநியாயம் சார். பணியாளர் சீருடை மேல் சட்டையில் தாமரைச் சின்னம் உள்ளது!" என்று கூறினார் ஸ்பெஷலிஸ்ட்.

சண்டமாருத ஜி காதில் வாங்கிக் கொண்டால் தானே? "பாரதம் என்ற பெயர் பிடிக்காத ஆண்டி இன்டியன்ஸ் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறிவிட்டார் எங்கள் முன்னாள் தேசீயத் துணைத்தலைவர் திலிப் கோஷ். பாரதத்தில் உள்ள எல்லா வெள்ளைக்கா ரர்களின் சிலைகளையும் அகற்றப் போவதாகவும் அவர் சூளுரைத்திருக்கிறார்!" என்றார்.

இந்தியப் பெருங்கடலா, பாரதப் பெருங்க டலா? எல்லாப் பெயர்களையும் எப்போது மாற்றுவீர்கள்? அது வரைக்கும் கிளாஸ் டெஸ்ட்டில் என்ன எழுதுவது? எந்தப் பாடத்தைப் படிப்பது?

இறுதிவரை குட்டியின் கேள்விக்கு விடை கிடைக்கவேயில்லை.

Tags:    

Similar News