search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 151251"

    திண்டுக்கல் மாவட்டத்தில் புயல் மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பியது. #GajaStorm
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கஜாபுயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாது கன மழை பெய்தது. இதனால் பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பழனி அருகே உள்ள வரதமா நதி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மொத்த கொள்ளளவான 67.47 அடியில் 49 அடி மட்டுமே தண்ணீர் இருந்தது.

    2 நாட்களாக பெய்த கன மழையால் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் வரத்து ஏற்பட்டது. இதனால் 3 மணி நேரத்தில் அணையின் நீர் மட்டம் 17 அடி வரை எட்டி முழு கொள்ளளவை கடந்தது. இதனால் அணையை தாண்டி அதிக நீர்வரத்து ஏற்பட்டது.

    எனவே அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதனால் வறட்டாறு, சண்முகா நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணையை ஒட்டி அமைந்த குட்டிக் கரடு பாலத்தை தண்ணீர் மூழ்கடித்து சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கரையோரங்களில் இருந்த குடிசை வீடுகள் மற்றும் சிறிய கோவில்களையும் மழை நீர் சூழ்ந்தது.

    இதே போல் பாலாறு பொருந்தலாறு அணைக்கும் நீர் வரத்து திடீரென அதிகரித்தது. வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வந்ததால் நீர் மட்டம் கிடுகிடு என உயர்ந்தது. அணையை ஒட்டி அமைந்துள்ள ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நேற்று மாலை 4 மணி நிலவரப்படி 54 அடியாக இருந்தது. கன மழை காரணமாக அணைக்கு 3,400 கன அடி நீர் வரத்து வந்ததால் நீர் மட்டம் கிடு கிடு என உயர்ந்து அதன் முழு கொள்ளளவை எட்டியது.

    இதனால் அணைக்கு வரும் உபரி நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு வத்தலக்குண்டு வருவாய்த்துறையினர் சார்பில் தண்டோரா அடித்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

    வைகை அணை நீர் மட்டம் 68 அடியில் இருந்தது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் நீர் மட்டம் சரிந்து வந்த நிலையில் கன மழை காரணமாக மீண்டும் நீர் வரத்து அதிகரித்ததால் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் வைகை அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    வைகை ஆற்று நீர் செல்லும் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்ட மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  #GajaStorm
    பொள்ளாச்சி அருகே என்ஜினீயரிங் மாணவர் அணையில் குளித்தபோது நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ஹரி சங்கர் (வயது 20). இவர் கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். சம்பவத்தன்று இவர் ஆழியாற்றில் உள்ள ஆரியாபுரம் அணையில் குளித்துக்கொண்டு இருந்தார்.

    அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றார். அங்கு நீர்வரத்து அதிகமாக இருந்ததால் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஹரிசங்கரின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    மத்திய அரசு அனுமதி வழங்கியவுடன் மேகதாதுவில் புதிய அணை விரைவாக கட்டப்படும் என்றும், தமிழகத்திற்கு இதுவரை 310 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்றும் கர்நாடக மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
    பெங்களூரு:

    கர்நாடக மருத்துவ கல்வி மற்றும் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். 67 டி.எம்.சி.(ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தேக்கி வைக்கும் அளவுக்கு புதிய அணை கட்டுவோம். அதில் பெங்களூரு நகரின் குடிநீர் தேவைக்கு போக மீதமுள்ள நீர் தமிழ்நாட்டுக்கு வழங்கப்படும்.

    காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் தமிழகத்திற்கு நீர் வழங்க முடியும். 4 ஆயிரம் ஏக்கர் நிலம் அணை தேக்க நீரில் மூழ்கும். இதில் வனம், வருவாய் மற்றும் விவசாய நிலங்கள் அடங்கும். நடப்பு ஆண்டில் இதுவரை 310 டி.எம்.சி. நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு இந்த காலக்கட்டத்தில் 82 டி.எம்.சி. நீர் மட்டுமே திறந்துவிட்டு இருக்க வேண்டும். ஆனால் கூடுதலாக தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    புதிய அணை கட்ட ரூ.6,000 கோடி நிதி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. குடிநீர் நோக்கத்திற்காக தான் மேகதாதுவில் மாநில அரசு அணை கட்டுகிறது. மேகதாதுவுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த உள்ளோம்.

    இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.
    கல்லணைக்கு பிறகு கட்டிய அணைகள் மீது நம்பிக்கை இல்லை என்று இல.கணேசன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #LaGanesan #Dam

    கும்பகோணம்:

    பாரதிய ஜனதா தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் இல.கணேசன் கும்பகோணத்தில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு காவிரி நீருக்காக அதிக அளவில் கூக்குரல் கொடுத்துள்ளது. சாதாரண கட்டத்தில் அணைகள் எந்த நிலையில் இருக்கிறது என்று சோதித்து பார்த்திருக்க வேண்டும். அப்படி சோதித்து பார்த்திருந்தால் முக்கொம்பு கீழணையில் உடைப்பு ஏற்பட்டு இருக்காது.

    வறட்சி என்பது ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம். இந்த காலங்களில் ஏரி, குளங்களை தூர்வார ஆண்டவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு. அதை ஆட்சியில் உள்ளவர்கள் செய்ய தவறி விட்டார்கள். தற்போது அதை பற்றி குறை சொல்லி எந்த பயனும் இல்லை. ஆட்சியாளர்கள் இனியாவது விழித்து கொண்டு ஏரி, குளங்களை போர்கால அடிப்படையில் தூர்வார வேண்டும்.

    கரிகாலன் கட்டிய கல்லணை மீது அதிக நம்பிக்கை உள்ளது. அதன் பின்னர் கட்டிய அணைகள் மீது தான் நம்பிக்கை இல்லை.


    கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்காக ஐக்கிய அரபு நாடு ரூ.700 கோடி தருவதாக கூறியது. இந்த நிதியை மத்திய அரசு தடுத்து நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. அதைவிட அதிகமாகவே மத்திய அரசு தர தயாராக இருக்கிறது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்தில் தான், எந்த மாநிலத்திலாவது பாதிப்பு ஏற்பட்டு அதற்காக அந்நிய நாட்டு நிதியை பெற்றால் தேசிய கொள்கைக்கு இழுக்கு என்று தடை போட்டார்.

    அந்நிய நாடுகள் அவ்வாறு பணம் தர வேண்டும் என்றால் முறையாக மத்திய அரசிடம் கேட்டு தர வேண்டும். அவ்வாறு கேட்காமல் கொடுக்கும் பட்சத்தில் தனி அமைப்புகள் தவறாக பயன்படுத்தி கொள்ள நேரிடும்.

    கருணாநிதி நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருகிறார் என்று தகவல் வருகிறது. ஆனால் அது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை. தி.மு.கவில் நடப்பது உள்கட்சி சண்டை இல்லை. உள் குடும்ப சண்டை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இடிந்த பகுதிகளை அகற்றிவிட்டு முக்கொம்பில் புதிய அணை கட்டவேண்டும் என்று அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். #ayyakannu #mukkombu
    திருச்சி:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறியதாவது:-

    முக்கொம்பு அணையில் மதகுகள் உடைந்ததால் புள்ளம்பாடி, பெருவளை வாய்க்கால்கள் மூலம் பாசன வசதி பெறும் பகுதிகள் முற்றிலும் பாதிக்கும் அபாயம் உள்ளது. அணையின் மதகுகள் உடைந்ததால் பாதிப்பில்லை என்று அதிகாரிகள் கூறுவது தவறு.

    லால்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலத்திற்கு பாதிப்பு ஏற்படும். 182 ஆண்டுகள் பழமையான அணையை முறையாக பராமரிக்காததே மதகுகள் உடைய காரணமாகும். கொள்ளிடம் பழைய பாலத்தை ஆய்வு செய்து புதிய பாலம் ஏற்கனவே கட்டியிருக்க வேண்டும்.

    வாய்க்கால் சீரமைப்பு, ஆறுகள் இணைப்பு, புதிய தடுப்பணைகள் கட்டுதல், மேலணை கட்டுதல் என விவசாயிகள் சங்கம் சார்பில் அரசை பல்வேறு கால கட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம். ஆனால் தமிழக அரசு அதனை பரிசீலித்து கவனிக்காமல் விட்டதே இதுபோன்ற நிகழ்வுக்கு காரணம்.

    ஜெயலலிதாஆட்சிக்காலத்தில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர்  காலத்தில்  கட்டப்பட்டிருந்த பழைய இரும்பு பாலத்தின் தூர்ந்து போன, பலவீன மடைந்த நிலையை கருத்தில் கொண்டு அதன் அருகிலேயே நேப்பியர் பாலம் வடிவில் புதிய பாலத்தை கட்டினார். அதேபோல் முக்கொம்பு பாலத்தையும் தற்போதைய தமிழக அரசு புதிதாக கட்டியிருக்க வேண்டும். எனவே இனியும் மெத்தன போக்கை காட்டாமல் மேட்டூர் அணையை போன்று சாதக, பாதகங்களை பரிசீலித்து முக்கொம்புவில் புதிய பாலத்தை கட்டவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ayyakannu #mukkombu
    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அணைகள், ஏரிகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கடும் வறட்சி நிலவி போதிய தண்ணீரின்றி கரும்பு, நிலக்கடலை பயிர்கள் காய்ந்து வருகின்றன.
    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் அணைகள், ஏரிகள் வறண்டதால் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் கடும் வறட்சி நிலவி போதிய தண்ணீரின்றி கரும்பு, நிலக்கடலை பயிர்கள் காய்ந்து வருகின்றன.

    நடப்பு ஆண்டில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் சுமார் 2 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு அரவை நிர்ணயித்து கரும்பு நடவு செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருவதாலும், பஞ்சப்பள்ளி சின்னாறு அணை, தும்பல அள்ளி அணை, மற்றும் பொதுப்பணித்துறை ஏரிகள் முற்றிலும் வறண்டு இருப்பதால் ஆற்றுப்பாசனம் மற்றும் நிலத்தடிநீர் பாசனம் போதிய தண்ணீரின்றியும், நிலத்தடிநீர் ஆயிரம் அடிக்குகீழ் சென்றதாலும் கரும்பு, நிலக்கடலை, காய்கறி பயிர்கள் காய்ந்து வருகின்றன.

    கரும்பு அருவடைக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கரும்பு காய்ந்ததால் வெல்லம் தயாரிக்க விவசாயிகள் கரும்பை வெட்டி வருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

    ஒகேனக்கலில் சுமார் 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் கரைபுரண்டு ஓடுகின்றது. தருமபுரி மாவட்டத்தில் ஓடும் காவிரி ஆற்றால் தருமபுரி, பாலக்கோடு பகுதி பொதுமக்களுக்கு எந்த ஒரு பயனும் கிடைப்பதில்லை.

    மேலும், குடிநீருக்காக ஒகேனக்கல்லில் இருந்து ராட்சத மோட்டர்கள் மூலம் தருமபுரி, பாலக்கோடு பகுதிகளுக்கு குடிநீர் குழாய் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது.

    தற்போது வரும் உபரிநீரை ஒகேனக்கல் குடிநீர் குழாய் மூலம் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணிதுறை ஏரிகள், அணைகள் என தண்ணீரை நிறப்பினால் நிலத்தடிநீர் மட்டம் உயரும், குடிநீர் தட்டுபாடு குறையும், விவசாயம் செழிக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும், கூடுதலாக ஒருசில மின்மோட்டர்கள் பொருத்தினால் பொதுப்பணித் துறை ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பலாம் எனவும் கூறுகின்றனர்.

    எனவே, பொதுப் பணித் துறை ஏரிகளில் தண்ணீரை நிரப்ப பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும், வறட்சியால் கரும்பு பயிர்கள் காய்ந்து வருவதால் உடனடியாக கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மூலம் கரும்பை வெட்டவும், காய்ந்த கரும்பிற்கு இழப்பீடு வழங்கவும், கரும்பு பயிருக்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்யவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
    காந்தல்:

    கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. அங்கு தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கேரளா வெள்ளத்தில் மிதக்கிறது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதி நீலகிரி மாவட்டத்தை ஒட்டி உள்ளது. அப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் மழை நீடிக்கிறது. கடந்த சில நாட்களாக ஊட்டி, கூடலூர், குன்னூர் கோத்தகிரி, பந்தலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    நேற்றிரவு ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய இந்த மழை நீடித்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

    ஊட்டியில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக மின் தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்தனர். இன்று காலை மின்சாரம் வந்தது. ஆனாலும் அடிக்கடி நிறுத்தப்பட்டது.

    பலத்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஊட்டியில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறார்கள். பள்ளி, கல்லூரி சென்ற மாணவ-மாணவிகள் மழை கோட்டு அணிந்தபடி சென்றனர். தொடர் மழை, குளிர் காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    குன்னூர்- 2, ஜி. பஜார்- 45, கே. பிரிட்ஜ்-25, கேத்தி -5, கோத்தகிரி -5, நடுவட்டம் -62, ஊட்டி - 40.20, கல்லட்டி - 20, கிளர் மோர்கன் - 80, அப்பர் பவானி - 135, எமரால்டு - 57, அவிலாஞ்சி - 158, கெத்தை - 9, கின்னக்கொரை- 1, தேவலா- 68.

    நீலகிரி மாவட்டத்தில் அவிலாஞ்சியில் அதிகபட்சமாக 158 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. #MetturDam
    சேலம்:

    கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.

    இதனால் அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு கடந்த 1-ந் தேதி 20 ஆயிரத்து 495 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று 15 ஆயிரத்து 487 கன அடியாக குறைந்தது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 11 ஆயிரத்து 633 கன அடியாக இருந்தது.

    அணையில் இருந்து நேற்று 18 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்றும் அதே அளவில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்த விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.

    நேற்று 119.44 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 119.06 அடியாக இருந்தது. இனிவரும் நாட்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 13 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்றும் அதே அளவில் நீடித்தது. ஐந்தருவி, மெயின் அருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலை முதலே ஒகேனக்கலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் உடலில் எண்ணை தேய்த்து அங்குள்ள அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்ததுடன் உற்சாகமாக படகு சவாரியும் சென்றனர். #MetturDam
    நாட்டில் உள்ள அனைத்து அணைகளையும் பாதுகாக்க சட்டம் வருகிறது. இதற்கான மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. #DamSafefyBill #Cabinet
    புதுடெல்லி:

    நமது நாட்டில் 5 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான அணைகளும், ஆயிரக்கணக்கான சிறிய நடுத்தர அணைகளும் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

    இந்த அணைகளை பாதுகாப்பதற்காக மத்திய அரசு சட்டம் இயற்றுகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச வல்லுனர்களின் ஆலோசனை பெற்று இந்த சட்டம் இயற்றப்படுகிறது.



    இதற்கான மசோதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்கள் அணைகளை பாதுகாக்க ஒரே சீரான நடைமுறைகளை பின்பற்றுவதற்கு இந்த சட்டம் வழிவகுக்கும். மேலும், அணைகளை பாதுகாப்பதுடன், அந்த அணைகளின் மூலம் அடைகிற பலன்களை பாதுகாக்கவும் உதவும்.

    இந்த சட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * அனைத்து அணைகளும் பாதுகாப்பாக இயங்குவதற்கு ஏற்ற வகையில், அவற்றின் பராமரிப்பு, இயக்கம், ஆய்வு, சரியான கண்காணிப்புக்கு இந்த சட்டம் வழிகாட்டும்.

    * அணை பாதுகாப்பு கொள்கைகளை உருவாக்குவதற்கும், தேவையான ஒழுங்குமுறைகளை வகுப்பதற்கும் தேசிய அணை பாதுகாப்பு குழு அமைக்கப்படும்.

    * அணைகள் தொடர்பான கொள்கைகள், வழிகாட்டும் நெறிமுறைகள், பாதுகாப்பு தரம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.

    * மாநில அரசுகள் அணை பாதுகாப்பு மாநில குழுக்களை அமைக்கவும் இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

    * டெல்லியில் பிரகதி மைதானத்தின் 3.7 ஏக்கர் நிலத்தில் தனியார் ஓட்டல் கட்டுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * வடகிழக்கு மாநிலங்களின் கவுன்சிலை மறுசீரமைப்பு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது.

    * வேளாண் கல்வி பிரிவு, ஐ.சி.ஏ.ஆர். (இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமம்) இன்ஸ்டிடியூட்டுகளுக்கு ரூ.2 ஆயிரத்து 225 கோடியே 46 லட்சத்தில் 3 ஆண்டு செயல்திட்டம் தீட்டி செயல்படுத்த அனுமதி தரப்பட்டது.

    * எச்.டி.எப்.சி. வங்கி தனது வர்த்தக வளர்ச்சிக்காக ரூ. 24 ஆயிரம் கோடி நேரடி அன்னிய முதலீடு பெறுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. தற்போது வங்கித்துறையில் 72.62 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளுக்கு அனுமதி உள்ளது. எச்.டி.எப்.சி. வங்கியைப் பொறுத்தமட்டில் இந்த வரம்பை கடந்து 74 சதவீத அன்னிய நேரடி முதலீடு பெற வழி வகுக்கிறது.  #DamSafefyBill #Cabinet #Tamilnews 
    தொடர் மழை காரணமாக நெல்லை, கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. வால்பாறை தாலுகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வந்தது. நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் கொடுமுடியாறு அணை பகுதியில் மட்டும் 24 மணி நேரத்தில் 170 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

    இதையொட்டி நேற்று முன்தினம் 70 அடியாக இருந்த கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து 80 அடியாக உயர்ந்தது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 50.70 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 8 அடிக்கு தண்ணீர் மட்டம் உயர்ந்து உள்ளது. இதேபோல் சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 34 கனஅடியாக அதிகரித்தது.



    இதனால் நேற்று முன்தினம் 19.68 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று 65.29 அடியாக உயர்ந்தது. அதாவது ஒரே நாளில் 45.61 அடி நீர்மட்டம் உயர்ந்தது. நம்பியாற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நம்பி கோவிலில் தவித்த 50 பேரை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

    இதேபோல் கோவை மாவட்டம் வால்பாறையில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் சோலையார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 28 அடி உயர்ந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் இன்று (திங்கட்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    நீர்வரத்து அதிகரித்ததால் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் தொடர்மழையால் 15 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடைபட்டது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு உள்ளது. கூடலூர் தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் மண் சரிந்து தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் கூடலூர் மவுண்ட்பிளசன்ட் பகுதியில் ஒரு கார் மீது மரம் சரிந்து விழுந்தது. இதில் கார் சேதம் அடைந்தது.

    தமிழக-கேரள எல்லையில் குமுளி அருகே உள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்தது. அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகமானதால் லோயர்கேம்பில் மின்உற்பத்தி தொடங்கி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்றால் அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்த செம்மான்விளை, வாழப்பறம் வீடு பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி பாலையன் (வயது 67), குழிச்சல், நெடுமங்காலவிளையை சேர்ந்த தொழிலாளி அகஸ்டின் (36) ஆகியோர் உயிரிழந்தனர்.

    திருச்சி மணப்பாறையில் நேற்று பலத்த சூறைக்காற்று வீசியதால் மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மீது மரம் சாய்ந்து விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற ராஜூ (43), மனோகர் (41) ஆகியோர் பலியாகினர். 
    ×