search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special article"

    • சாந்த சொரூபிணியாக வீற்றிருக்கும் விநாயகி, பார்ப்பதற்குக் கொள்ளை அழகு.
    • ஆற்றல் சக்தியின் அவதாரமான விநாயகி, அருள் வழங்கக் காத்திருக்கிறாள்.

    அம்பாளின் செல்லப் புதல்வர் விநாயகர் என்பது தெரியும். விநாயகரே பெண் வடிவம் பூண்டால்...?

    விநாயகி, விநாயகனி, வைநாயகனி போன்ற பெயர்கள் ஒரு சில கல்வெட்டுகளிலும் பட்டயங்களிலும் காணப்படுகின்றன.

    விநாயகி எப்படி இருப்பாள்?

    தமிழ்நாட்டிலேயே சிற்சில இடங்களில் விநாயகி எழுந்தருளியிருக்கிறாள். சுசீந்தரம் தாணுமாலயன் ஆலயத்தில், வடகிழக்குப் பகுதியில், அமர்ந்த திருக்கோலநாயகியாக இவளைக் காணலாம். கால்களை மடித்து அமர்ந்த சுகாசனம்; நான்குத் திருக்கரங்கள், கரங்களில் சங்கும், தண்டமும், கோடரியும், குவளையும் தாங்கப்பட்டிருக்க, ஒடிசலான, எனினும் ஒய்யாரமான திருமேனி, தலையும் முகமும் பெயருக்கேற்றாற்போல், யானையை ஒத்தவை. சாந்த சொரூபிணியாக வீற்றிருக்கும் விநாயகி, பார்ப்பதற்குக் கொள்ளை அழகு.

    மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும், புடைப்புச் சிற்பமாக, விநாயகி எழுந்தருளியிருக்கிறாள். நின்ற திருக்கோலம். கால்கள், புலிக் கால்களாக இருப்பதால், வியாக்ரபாத கணேசனி (வியாக்ர=புலி, பாத=கால்) என்றழைக்கப்படுகிறாள். வாலை லேசாக மேல் தூக்கியபடி, ஒய்யாரமாகத் திரும்பியிருக்கிறாள். கரங்களில் பாசமும் அங்குசமும் காணப்படுகின்றன.

    விநாயகரின் திருவாட்டியாகவும், சக்தி அம்சமாகவும் கருதப்படுகிற இப்பெண் வடிவிற்கு, இன்னும் சில திருநாமங்களும் உண்டு. அநேகமாக, விநாயகர் அல்லது கணேசர் என்னும் ஆண்பால் பெயரைச் சற்றே மாற்றினவாகவே இப்பெயர்கள் உள்ளன. கணேசனி, கஜானனி, கஜரூபா, கஜரூபிணி, விக்னேசனி, விக்னேஸ்வரீ, கணேசீ போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

    மத்ஸ்ய புராணத்திலும், இன்னும் சில புராணங்களிலும், விநாயகருக்கு மனைவி உண்டென்றும், இவளே விநாயகி என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில், பேராகட் என்னும் இடத்தில், கவுரிசங்கர் கோவிலில், பெண் வடிவ விநாயகி தோற்றம் தருகிறாள். இடது காலை மடித்தும் வலது காலைத் தொங்கவிட்டும் அமர்ந்திருக்கும் இவள், கழுத்தில் ஆரமும் இடையில் மேகலாபரணமும் கால்களில் சிலம்பும் அணிந்திருக்கிறாள். மெலிந்த இடையும் திரட்சியான தனங்களும், நான்குத் திருக்கரங்களும் கொண்ட இவளை கணேசனி அல்லது கணேசாயனி என்றே வழங்குகிறார்கள். இவளின் தும்பிக்கை இடம்புரியாக மடிந்துள்ளது.

    ஒடிசாவில், ஹிராபூர் என்னும் ஊருக்கு அருகில், சவுசத் யோகினித் கோவிலில், நின்ற கோல கணேசனி எழுந்தருளியிருக்கிறாள். இரண்டுத் திருக்கரங்கள், நேராகப் பார்த்தபடி நிற்கிறாள்; ஒய்யாரமாகச் சாய்ந்த திரிபங்கி வடிவம். வராகம் ஒன்றின் மீது இவள் நின்றிருப்பதைக் கண்டால், பாதவிரல்கள் லேசாக வளைந்து இவள் நாட்டியமாடுவது தெரியும்.

    மத்தியபிரதேசத்தின் ஹிங்கலஜாத் பகுதியில், அமர்ந்த கோலத்தில் அபயம் காட்டியபடி இருக்கிறாள்.

    கணேசனி என்னும் பெண், எவ்வாறு அவதாரம் எடுத்தாள் என்பதைப் பற்றிய சுவாரசியமான கதைகள் உண்டு. அந்தகாசுரன் என்னும் அரக்கனை அழிப்பதற்காகப் பார்வதி தேவி சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அப்போது, தன்னைப் பற்பல வடிவங்களாக அந்த அரக்கன் பல்கிப் பெருக்கிக் கொண்டான்.

    அவனை எவ்வாறு எதிர்ப்பது என்று தெரியாமல் தயங்கிய பார்வதி தேவியார், ஒரு கணம் யோசித்தபின், அனைத்து தெய்வங்களின் ஆற்றல் சக்திகளையும் பெண் வடிவில் வரச் சொல்லிக் கேட்டாள். விஷ்ணுவின் வைஷ்ணவியாக, பிரம்மாவின் சக்தி பிராக்மியாக, குமாரனின் சக்தி கவுமாரியாக, இந்திரனின் சக்தி ஐந்திரியாக, இவ்வாறு ஒவ்வொரு தெய்வத்தின் சக்தியும் ஒவ்வொரு பெண்ணாக உருமாறி வந்தன. அனைத்து பெண் சக்திகளும் ஒன்றுதிரண்டு எடுத்த வடிவமே விநாயகி அல்லது கணேசனி.

    வெளிநாடுகளில்கூட கணேசனி உண்டு. திபெத் நாட்டில் கணேசனியாகக் காட்சியளிக்கும் இவள், ஜப்பானில் அர்த்தநாரி வடிவம் கொள்கிறாள். ஷோடனீ என்றும் இவளுக்கொரு பெயருண்டு.

    விநாயக சதுர்த்தி போலவே, விநாயகி சதுர்த்தி உண்டா?

    உண்டு. திங்கள்தோறும், அதாவது மாதம் தோறும், அமாவாசையை அடுத்துவரும் சதுர்த்தி நாள் (நான்காம் நாள்) விநாயகி சதுர்த்தியாகக் கருதப்படுகிறது. மாதந்தோறும் எப்படிப் பிறந்தநாள் வரும்? ஆற்றல் வடிவம்தான், விநாயகி. ஆற்றல் என்பது எல்லாவற்றுக்கும் தேவை. சராசரி மனிதர்களான நாம் மூச்சு விடுவதற்கும், பேசுவதற்கும், அசைவதற்கும் ஆற்றல் தேவை. இவ்வளவென்ன? கைகால்களை அசைக்காமல், மூச்சைக் கட்டுப்படுத்தி அமர்ந்தால், அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கும் அமர்வதற்கும்கூட ஆற்றல் அவசியம்.

    இதைவிட முக்கியம், புற அசைவுகளைக் கட்டுப்படுத்திக்கொண்டாலும், அக அசைவான சிந்தனைகளுக்கும், சிந்திப்பதற்கும் ஆற்றல் தேவை. ஆக, ஆற்றல் என்பது எப்போதும் தேவை. ஆற்றல் சக்தியான விநாயகிக்குத் திங்கள்தோறும் சதுர்த்தித் திருநாள்.

    அநேகமாக நான்குத் திருக்கரங்கள் கொண்டிருக்கும் கணேசனி, நான்கிலும் பலவகை ஆயுதங்களைத் தாங்கியிருப்பாள். வேறெந்த ஆயுதமும் இல்லையென்றாலும், அங்குசமோ கோடரியோ தாங்கியிருப்பாள். தேவையற்ற கட்டுகளை வெட்டுவதற்கும், தீமைகளை வெட்டிப் புறந்தள்ளுவதற்கும் இவற்றைப் பயன்படுத்துகிறாள்.

    சிற்ப சாத்திர நூல்கள், யானைத் தலையும், அழகிய இடையும், பருத்த தனங்களும், சற்றே சாய்ந்து பெருத்த வயிறும், ஒய்யாரத் தோற்றமும், அனைவரையும் கவர்கிற வசீகரமும் கொண்டவள் விநாயகி என்று வரையறுக்கின்றன.

    ஆற்றல் சக்தியின் அவதாரமான விநாயகி, அருள் வழங்கக் காத்திருக்கிறாள். அன்னை இவளை வணங்குவோம், அனைத்து நலங்களும் பெறுவோம்.

    தொடர்புக்கு:- sesh2525@gmail.com

    • ரோட்டில் திரியும் யாசகர் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவருக்கும் கவலைகள் இருக்கிறது.
    • தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்க ளுக்கு கவுன்சிலிங் அளிக்க அரசே 104 என்ற பிரத்யேக டெலிபோன் எண்களை வழங்கி உள்ளது.

    இந்தியாவில் தற்கொலைகள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தற்கொலை செய்து கொள்பவர்களில் கிட்டத்தட்ட 35 சதவீதத்தினர் குடும்ப பிரச்சினை காரணமாகவும், 25 சதவீதத்தினர் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகள் காரணமாகவும், எஞ்சியோர் வாழ்வாதாரத்தை இழந்ததன் காரணத்தினாலும், கடன் தொல்லையாலும் இந்த துயர முடிவை எடுக்கிறார்கள்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றிய விஜயகுமார், துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார். உயர் படிப்பான ஐ.பி.எஸ். படித்த, ஆளுமைமிக்க ஒரு போலீஸ் அதிகாரியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளது தமிழகத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விஜயகுமார் ஓ.சி.டி. எனப்படும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததாக சொல்கிறார்கள். இந்த மன அழுத்தமே அவரை தற்கொலை செய்ய தூண்டியுள்ளது. மன அழுத்தம் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறோம், இப்போது என்ன புதிதாக ஓ.சி.டி. பாதிப்பு என்கிறார்களே? என்பது தான் பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

    ஓ.சி.டி. மன அழுத்தம் என்றால் என்ன? அதில் இருந்து விடுபடுவதற்கான வழிகள் என்ன? என்பது பற்றி இன்று பார்ப்போம்.

    மன அழுத்தம் என்பது 2 வகையானது. ஒன்று தற்காலிகமான மன அழுத்தம். தேர்விலோ அல்லது வேறு எதாவது செயல்களில் தோல்வி அடைந்து விடுகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த பாதிப்பு சில காலம் இருக்கும். பின்னர் மறைந்து போகும். ஒருவர் பணம் கடன் வாங்கியிருக்கிறார், அதனை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுகிறார். அல்லது யாராவது ஒருவர் அவரை ஏமாற்றிவிட்டார். இதனால் ஏற்படும் மன அழுத்தமும் தற்காலிகமானது தான். அவை அனைத்தும் சரியாகி விடும்.

    மற்றொன்று ஓ.சி.டி. எனப்படும் மன அழுத்தம். இந்த பாதிப்பு சற்று தீவிரமானதே. Obsessive Compulsive Disorder என்பதன் சுருக்கம் தான் ஓ.சி.டி. இந்த மன அழுத்த பாதிப்பு என்பது புதிய நோய் அல்ல. ஏற்கனவே இருப்பது தான். டி.ஐ.ஜி. ஒருவர் தற்கொலையால் ஓ.சி.டி. எனப்படும் வார்த்தை அதிகமாக பேசப்படுகிறது.

    மனதை ஆட்டிப்படைக்கும் ஒரு வகையான நரம்பியல் குறைபாடே ஓ.சி.டி. பாதிப்பு. மூளையில் இருக்கும் செரட்டோனின் என்னும் வேதிப்பொருள் பற்றாக்குறையால் இந்த குறைபாடு ஏற்படுகிறது. செரட்டோனின் குறையும் போது சிந்தனையை கட்டுப்படுத்தும் சக்தி வெகுவாக குறைகிறது. சிந்தனை என்பது நரம்பியல் மண்டலத்தோடு தொடர்புடையது. ஆதலால் இது சிந்தனையை வெகுவாக பாதிக்கிறது. இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு சந்தேகங்களும், கவலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். வீட்டுக்கதவை பூட்டினோமா, அடுப்பை அணைத்தோமா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும். பின்னர் அந்த செயல்களை செய்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விடுவோம். ஆனால் ஓ.சி.டி. பாதிப்பு உள்ளவர்கள் அதனை பற்றி யோசித்து, யோசித்தே அன்றைய இரவை தூங்காமல் வீணடித்து விடுவர்.

    பணம் சரியாக இருக்கிறதா என்று தொடர்ந்து எண்ணிக் கொண்டே இருப்பார்கள். பொருட்களை கூட வெறும் கையால் தொட பயப்படுவார்கள். சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொண்டே இருப்பார்கள். உதாரணமாக 12 முறை கைகழுவினால் தான் சுத்தமாகும், இல்லையெனில் கிருமிகள் போகாது என எண்ணிக் கொள்வர். வேதனை என்னவென்றால் இவர்கள் 12 முறை கைகழுவினாலும் ஒருமுறை குறைவாக கழுவி விட்டதாக எண்ணி வருந்துவர். அந்த எண்ணம் அவர்களின் அன்றைய நாளையே விழுங்கிவிடும். நம்மை யாராவது தாக்கி விடுவார்களோ என்ற அச்சம் இருந்து கொண்டே இருக்கும். அடிக்கடி நாம் பத்திரமாக இருக்கிறோமா, நம் சொந்தங்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள். மொத்தத்தில் ஓசிடி பிரச்சினை உள்ளவர்களுக்கு திருப்தி என்னும் நிலையே இருக்காது. உடலில் தலைவலி, நெஞ்சு வலி, கண் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் வந்தால் நமக்கே தெரிந்து விடும். ஆனால் மன அழுத்தத்தை எளிதில் கண்டுபிடித்து விட முடியாது. வெளியில் இருந்து பார்க்கும் போது தற்கொலை செய்த போலீஸ் அதிகாரி திடகாத்திரமாக, நன்றாகத் தான் இருந்தார். ஆனால் அவருக்கு இருந்த தீவிர மன அழுத்தம் உடன் இருந்தவர்களுக்கே தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.

    தற்கொலை என்பது ஒரு தவறான செயல். கோழைத்தனமானது. இந்த உடலை உருவாக்கியது கடவுள். அந்த உடலை அழிப்பதற்கு எந்தவிதமான உரிமையும் நமக்கு கிடையாது. யாருக்கு தான் கவலையில்லை. ரோட்டில் திரியும் யாசகர் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவருக்கும் கவலைகள் இருக்கிறது. கவலை என்பது மனிதனுக்கு வருவதும், போவதுமாக இருக்கும். அந்த கவலைகளில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் மன அழுத்தம் உருவாகி நம்மையே அது அழித்து விடும்.

    தற்கொலை செய்து கொள்பவர்கள் அவரை பற்றி மட்டுமே கவலைப்படக்கூடாது. நம்மை சுற்றி இருக்கும் குழந்தைகள், மனைவி, பெற்றோரை பற்றியும் எண்ணி பார்க்க வேண்டும். அந்த ஒரு நிமிட எண்ணம் தான் உயிரை காவு வாங்கக் கூடியது. அந்த நிமிடத்தில் எண்ணத்தை மாற்றிக் கொண்டால் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். மனதில் சந்தோஷம் யாருக்கு அதிகம் இருக்கிறதோ, அவர் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும். மனதில் கவலை இருந்தால் வெற்றி பெற முடியாது. மனதில் இருக்கும் சுமைகளை யாரிடமாவது சொல்ல வேண்டும். நண்பர்களிடமோ, திருமணம் ஆனவர்கள் மனைவியிடமோ மனச்சுமையை இறக்கி வைத்து விட வேண்டும். வீட்டுக்கு சென்றதும் அலுவலகத்தில் நடந்த அனைத்து விவரங்களையும் மனைவியிடம் சொல்ல பழக வேண்டும். நல்லது, கெட்டது என அனைத்து விவரங்களையும் அந்த வாழ்க்கை துணைவியாரிடம் சொல்ல வேண்டும். பெண்களும் அதேபோல் அன்று நடந்த விவரங்களை தெரிவிக்க வேண்டும். எதையும் மனதில் பூட்டி அடக்கி வைக்கக் கூடாது.

    வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள் என்றால் அவர்களுக்கு மன அழுத்தம் வருவது குறைவு. பெற்றோர், மனைவி, மக்களிடம் கூற முடியாத விஷயங்களை, ரகசியங்களை நண்பர்களிடம் தான் சொல்லியாக வேண்டும். நல்ல நண்பர்களிடம் அதனை சொல்லும் போது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். சிலர் கவலையை மறக்கிறேன் என கூறிக் கொண்டு மது குடிப்பது, சிகரெட் குடிப்பது என போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி விடுகிறார்கள். நாளடைவில் அதுவே தற்கொலை எண்ணத்தை தூண்டக்கூடியதாக அமைந்து விடும். அதனால் கவலையை மறக்க போதையை தேடுவது தவறான செயல்.

    தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்க ளுக்கு கவுன்சிலிங் அளிக்க அரசே 104 என்ற பிரத்யேக டெலிபோன் எண்களை வழங்கி உள்ளது. அந்த எண்க ளுக்கு போன் செய்து கவுன்சிலிங் பெற்றுக் கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் குறைபாடுகளை, கவலைகளை ஒரு டைரியில் எழுதி பாருங்கள். எனக்கு மனம் சரியில்லை, அலுவலகத்தில் ஒருவர் சத்தம் போட்டுவிட்டார், என்னை ஒருவர் ஏமாற்றி விட்டார் என எழுதலாம். பிரச்சினைகளை எழுதினாலே 50 சதவீதம் மன அழுத்தம் குறைந்து விடும்.

    தினமும் டைரியில் சந்தோஷத்தையும் எழுதுங்கள், பிரச்சினைகளையும் எழுதுங்கள். காலை முதல் இரவு வரை என்ன நடந்தது என்பதை சுருக்கமாக எழுதினீர்கள் என்றால் அதனை திரும்பி பார்க்கும் போது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். மனஅழுத்தமாக உள்ளது, தற்கொலை செய்து கொள்ளலாம் போல் எண்ணம் தோன்றுகிறது என்று எழுதலாம். அதனை மனைவியோ, குழந்தைகளோ பார்க்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்து அவர்களின் மனதை மாற்றலாம்.

    மன நல மருத்துவரிடம் சென்றால் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் கவுன்சிலிங் அளிப்பார். உங்களை இருக்கையில் அமர வைத்து மருத்துவர் சில கேள்விகளை கேட்பார். நீங்கள் பதில் அளித்துக் கொண்டே வருவீர்கள். இந்த கவுன்சிலிங் சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நீடிக்கும். கவுன்சிலிங்கில் பாதிக்கப்பட்டவரின் மனநிலையை மருத்துவர் அறிந்து கொள்வார். அதன்பிறகு உங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர மன நல சிகிச்சையை மருத்துவர் அளிப்பார். இந்த சிகிச்சைக்கு நல்ல மருந்துகளும் உள்ளன. அவற்றை சாப்பிட பரிந்துரைப்பார். சில மாதங்கள் மருத்துவர் சொல்வதை தொடர்ந்து கடைபிடித்தால் மன அழுத்தம் நீங்கி விடும். இதற்கு சிறந்த மன நல மருத்துவரை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் அவரிடமே தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டும். அடிக்கடி மருத்துவரை மாற்றிக் கொண்டே இருக்கக் கூடாது. இதுதவிர நீங்களாகவே சுயமருத்துவம் செய்யக்கூடாது. இணையத்தில் பார்த்தோ, யூடியூப்பில் பார்த்தோ இஷ்டத்துக்கு மருந்து சாப்பிடக்கூடாது. உங்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் தரும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

    மனநல மருத்துவத்தில் 5 விதமான நிபுணர்கள் உள்ளனர். அதில் ஒரு சிகிச்சையாக கரண்ட் ஷாக் கொடுப்பார்கள். அந்த ஷாக் கொடுத்ததும் பாதிக்கப்பட்டவர் 30 நிமிடம் வரை அயர்ந்து தூங்குவார்கள். இந்த தூக்கமும் மன நல பாதிப்பை குறைக்கும். மற்றொரு மருத்துவர் கவுன்சிலிங் அளித்து சிறந்த மாத்திரைகளை உட்கொள்ளவும் பரிந்துரைப்பார். இப்படி ஒவ்வொருவரும் வேறுவிதமான சிகிச்சைகளை அளிப்பர்.

    மன அழுத்தத்தில் தூக்கம் முக்கிய இடத்தை பெறுகிறது. தூக்கம் என்பது இறைவன் கொடுத்த வரம். காலை முதல் மாலை வரை வியர்வை சிந்தி உழைத்து விட்டு இரவில் வந்து படுத்தால் நிம்மதியாக தூக்கம் வரும். தூக்கம் என்பது தானாகவே வரக்கூடியது. வரவைக்க கூடியது அல்ல. தூக்கத்தை வரவைக்க மாத்திரை சாப்பிட்டால் நாளடைவில் அதுவே மன அழுத்தத்துக்கு காரணமாகி விடும்.

    உழைத்து விட்டு வீட்டுக்கு வந்ததும் வெது, வெதுப்பான சுடுநீரில் குளியுங்கள். இரவில் தூங்க செல்லும் ஒரு மணி நேரத்துக்கு முன்பு உணவு சாப்பிடுங்கள். டி.வி. பார்ப்பதை தவிருங்கள். பின்னர் ஒரு டம்ளர் பால் குடித்து விட்டு படுத்தோம் என்றால் தானாக தூக்கம் வரும். இனிமையான இசையும் தூக்கத்தை கொடுக்கும். தூங்கும் அறையில் மின்விளக்கை ஒளிர விடாதீர்கள். இருள்சூழ்ந்த அறையில் தூங்கினால் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும். இதேபோல மதியம் சாப்பாடு முடிந்ததும் 15 நிமிடம் தூங்கி பாருங்கள். முன்பு பணியாற்றிய உற்சாகம் அதன்பிறகும் கிடைக்கும். சீனர்கள் இந்த மதிய உறக்க முறையை கடைபிடித்து வருகிறார்கள். உற்சாகமாகவும் பணியாற்றுகிறார்கள்.

    வயதானவர்கள்: வயதானவர்கள் தனிமையாக இருக்கும் போது அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு விபரீத எண்ணங்கள் தோன்றும். அந்த எண்ணங்களில் இருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். அவர்கள் வீட்டில் இனிய இசை கேட்கலாம். கோவிலுக்கு சென்று மன அமைதி பெறலாம். உறவினர் வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி மகிழலாம். தினமும் நண்பர்களுடன் கூடி நேரத்தை செலவிடலாம்.போலீஸ்காரர்கள் என்றால் எப்போதும் சீரியசாக இருக்க வேண்டும் என்று இல்லை. டென்னிஸ், கால்பந்து விளையாடுங்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழியுங்கள். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமை எடுத்துக் கொள்வோம். அவர் எவ்வளவு பிசியான மனிதர். அவர் பேசி, பேசி மற்றவர்கள் மனதில் சந்தோஷத்தை உருவாக்கினார். அதன் மூலம் அவரும் சந்தோஷம் அடைந்தார். மற்றவர்களை பார்க்கும் போது சிறிய புன்சிரிப்பு செய்தீர்கள் என்றால் மகிழ்ச்சியானது உங்களிடம் நிரந்தரமாக தங்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்தால் மனதில் இருக்கும் மகிழ்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

    குழந்தைகள்: குழந்தைகளுக்கு பெற்றோர் அவர்களது சிறு வயதிலேயே நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும். நல்ல எண்ணங்களை விதைக்க வேண்டும். மனதில் தைரியத்தை, தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். அப்படி செய்தால் அந்த குழந்தைகள் பெரியவர்களாகும் போது தைரியமாக இருப்பது மட்டுமல்லாமல் எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வர். அவர்களுக்கு தியானம் செய்வதையும், இறைவனை துதிப்பதையும் சொல்லிக் கொடுங்கள். அதற்கு மாறாக அவர்கள் முன்பு கணவனும், மனைவியும் சண்டையிட்டு வந்தால் பெரியவர்கள் ஆனதும் நாமும் இப்படித்தான் சண்டையிட வேண்டுமோ என்று எண்ணத் தோன்றும். அவர்களுக்கு சிறுவயதிலேயே மன அழுத்தம் ஏற்பட அது காரணமாகி விடும். சினிமாவில் வரும் கொடூர காட்சிகளை குழந்தைகள் பார்ப்பதை தவிருங்கள். குழந்தைகளுக்கு செல்போன் கொடுத்து பழக்கப்படுத்தாதீர்கள். எனவே குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைவது அவர்களின் பெற்றோர் கையில் தான் உள்ளது.தியானம் செய்வது மன அழுத்தத்தில் இருந்து விடுபட நல்ல வழியை ஏற்படுத்திக் கொடுக்கும். அதனால் தினந்தோறும் காலையில் தியானம் செய்வதை பழக்கமாக கடைபிடியுங்கள்.

    தொடர்புக்கு:

    info@kghospital.com, 98422 66630

    • அனைவரையும் அடியாராக ஏற்றுக் கொண்ட ஈசன், சுந்தரரை தோழனாக ஏற்றுக் கொண்டார்.
    • நாவுக்கரசரும், சம்பந்தரும் இறைவனைப் புகழ்ந்து பாடினார்கள் என்றால், சுந்தரர் இறைவனின் அடியார்களைப் புகழ்ந்து பாடினார்.

    பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை

    -சுந்தர மூர்த்தி நாயனார்

    பரம்பொருளான ஈசனின் அருள் மழையில் நனைந்த அடியவர்களில் அவரைத் தோழனாக ஏற்ற பெருமைக்குரியவர் சுந்தரமூர்த்தி நாயனார்.

    ஈஸ்வரனுடைய பிம்பமே சுந்தர மூர்த்தி நாயனார். உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்திலும் உறைகின்ற பரம்பொருளின் பிம்பமே சுந்தரராக வந்து அவதரித்தது. ஈசனே சகலமும். நம்மை இயக்கும் சூத்தரதாரி அவரே என்பதைத் தனது பாடல்கள் மூலம் உணர்த்துகிறார் சுந்தரர்.

    சிவபெருமானை நண்பனாக ஏற்ற சுந்தரர் அவரிடம், கொஞ்சுவார், கெஞ்சுவார், மிஞ்சுவார், முறுக்கிக் கொள்வார். நீர் மட்டும் நன்றாக இரும் என்று கோபப்படுவார். அவரின் தமிழ் அழகில் மயங்கும் ஈசன் சின்னப் புன்சிரிப்புடன் அவருக்குச் சோதனைகள் பல தந்து, சுந்தரரின் பதிகம் கேட்டு மகிழ்ந்து, பின் அவரை ஆட் கொள்வார்.

    அனைவரையும் அடியாராக ஏற்றுக் கொண்ட ஈசன், சுந்தரரை தோழனாக ஏற்றுக் கொண்டார். திருவாரூர் வருக என்று ஈசன் ஆணையிட அங்கு வந்து ஈசனை போற்றித் துதித்த அவரை நோக்கி இறைவன் "நம்பியாரூரனே தோழமையாக உனக்கு நம்மைத் தந்தோம்" என்று வாக்கு அளிக்கிறார்.

    "அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே" என்ற அவரின் சொல்லே, ஈசனை அவருக்குத் தோழர் ஆக்கியது.

    அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, வாசுகி என்னும் பாம்பு விட்ட மூச்சு, கடலிலிருந்து தோன்றிய விஷம் இரண்டும் கலந்து ஆலகால விஷமானது. அதன் வெப்பம் தாங்காமல் தேவர்களும், அசுரர்களும் சிவபெருமானைத் தஞ்சம் அடைந்தார்கள்.

    இறைவன் மட்டுமே விஷத்தின் வெம்மையைத் தாங்கி, அதைக் கொண்டு வரும் சக்தி படைத்தவர் என்பதால் ஈசன் கண்ணாடியின் முன் நின்று அதில் தெரிந்த தன் அழகிய பிம்பத்தைப் பார்த்து "சுந்தரா வருக" என்று ஆசையுடன் அழைக்க ஆலால சுந்தரர் வருகிறார். அவர் கொண்டு வந்த விஷத்தை உண்டுதான் ஈசன் நீலகண்டன் ஆனார்.

    சிவபெருமானின் அணுக்கத் தொண்டராய் இருந்தவர் ஆலால சுந்தரர். ஒருநாள் இறைவனை பூஜிக்க மலர் பறிக்க நந்தவனத்திற்குச் சென்ற அவர் உமாதேவியின் தோழியாகிய சுமலினி, அநிந்திதை ஆகிய இருவரை ஒரு கண நேரம் பார்த்து அவர்கள் அழகில் மயங்கி, மையல் கொள்கிறார்.

    ஒரு கணம்தான் என்றாலும், அதைப் பிழை என்று வருந்துகிறார். மாயையில் ஆட்பட்ட அவரை, ஈசன் பூவுலகில் பிறந்து, அந்த இரு பெண்களை மணந்து, சிலகாலம் வாழ்ந்து பின் தன்னை அடையுமாறு பணிக்கிறார். ஈசன் வேண்டுவதும் அறிவான், வேண்டியதையும் தருவான் அல்லவா?

    ஆனால் இறைவனை விட்டுப் பிரிய மனமில்லாத நம்பியாரூர் "மனிதப் பிறவி எடுத்து மதி மயங்கி உன்னை மறக்கும் காலத்தில் நீயே வந்து என்னைத் தடுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்று விண்ணப்பம் செய்ய, இறைவனும் சம்மதிக்கிறார்.

    திருமுனைப்பாடி நாட்டிலுள்ள திருநாவலூரில் ஆதிசைவ மரபில் தோன்றிய சடையனார், இசை ஞானியார் என்பவர்களின் தவப்பயன் காரணமாக சுந்தரர் அவர்களின் மகனாகப் பிறக்கிறார். நம்பியாரூரர் என்பது இவரின் இயற்பெயர்.

    சடையனாரின் நண்பரான, அந்நாட்டு அரசன் நரசிங்க முனையரையர், குழந்தை சுந்தரரின் அழகில் மயங்கி, அவரின் பெற்றோர் சம்மதத்துடன் தன்னிடம் அழைத்துச் சென்று அரசிளங்குமரனாக வளர்க்கிறார். உபநயனம் செய்வித்து பதினாறாவது வயதில் அவருக்குத் திருமண ஏற்பாடுகளும் நடக்கிறது.

    சடங்கவி சிவாசாரியாருடைய மகளுக்கும், சுந்தரருக்கும் புத்தூரில் திருமணம் நடக்க ஏற்பாடாகிறது. மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகனாக அலங்கரிக்கப் பட்டு மணமேடையில் அமர்ந்த சுந்தரரை தடுத்தாட் கொள்ள இறைவன் ஒரு முதியவராக வந்து "இவன் என் அடிமை" என்று ஒரு ஓலையைக் காட்டுகிறார். அங்கிருந்த சான்றோர்கள் நம்ப மறுக்கிறார்கள்.

    திருவெண்ணெய் நல்லூரே இவன் இருக்க வேண்டிய இடம். அங்கு வந்தால் இவன் என் அடிமை என்று நிரூபிப்பேன்" என்று முதியவர் கூறுகிறார். அவையோர்களுடன் அங்குள்ள கோவிலுக்கு வர, முதியவர் ஓலையைக் காட்டுகிறார். நம்பி ஆரூரான் குடும்பம் வழிமுறையாக அவருக்கு அடிமை என்று மூல ஓலையில் இருக்கிறது.

    அங்குள்ளப் பெரியோர்கள் அதை ஏற்றுக் கொண்டு "நாங்கள் இதுவரை உங்களைப் பார்க்கவில்லையே" என்று கூற, இறைவன் திருவருட்துறை என்னும் திருக்கோவிலுள் சென்று மறைகிறார். உமையம்மையுடன் விடைமேல் காட்சி தந்த ஈசன் சுந்தரருக்கு அவரின் முன் பிறவியையும், அவருக்குத் தந்த வாக்குறுதியையும் நினைவு படுத்தி, மறைகிறார்.

    மணமேடையில் திருமணம் நின்றபோது பல வன்சொற்களை சுந்தரர் பேசியதால் "வன்தொண்டர்" என்றே அழைக்கப்படுகிறார். "இறைவா உங்கள் திருவருட் பண்பில் எதைப் புகழ்ந்து பாடுவேன்" என்று சுந்தரர் வினவ? "நீ என்னைப் பித்தா என்று அழைத்ததால் பித்தா என்றே பாடு" என்று அருள்கிறார்.

    கடல்மடை திறந்தது போல் 'பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா" என்று பாடுகிறார் சுந்தரர்.

    "பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா

    எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்துன்னை வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர் அருட்டுறையுள் அத்தா உனக்காளாயினி அல்லேன் எனல் ஆமே." என்று பாடுகிறார்.

    உன் நினைப்பின்றி பேயாய் அலைந்தேன் என்கிறார். மாயை நம்மைச் சூழ்ந்து இறைவனை மறக்கச் செய்கிறது. அதையும் அகற்றும் வல்லமை படைத்தவன் ஆண்டவனே. அவன்தான் தன் திருவருளால் நம்மை அடியவனாக்கிக் கொள்கிறான்.

    "நாயேன் பல நாளும் நினைப்பின்றி மனத்துன்னைப் பேயாய்த் திரிந்தெய்த்தேன் பெறலாகவருள் பெற்றேன் வேயார் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் நல்லூர்

    அருட்டுறையுள் ஆயா உனக்காளாயினி அல்லேன் எனல் ஆமே"

    என்றுதான் துதிக்கிறார்.

    பேயாய் உழலும் மனதைச் சீர் செய்ய வல்லவர் இறைவன் மட்டுமே. பொன்னும் மணியும் அள்ளித் தரும் இறைவனே அவற்றின் மேலும் வெறுப்பைத் தருகிறார். மனதில் இறைவன் மீதான நினைப்பு மட்டும் இருந்தால் போதும். அவன் நம்மை ஆட்கொள்வான்.

    கைலாயத்தில் அவர் விரும்பிய பெண்கள், பரவையார், சங்கிலி நாச்சியாராகப் பிறக்க ஈசனே சுந்தரரின் காதலுக்குத் துணை போகிறார். பறவை நாச்சியாருடன் திருவாரூரில் சிவத் தொண்டு புரிந்து வரும் காலத்தில் சிவபெருமான் அவரிடம் " திருத்தொண்டர் திறத்தை விவரிக்கும் பாமாலை ஒன்று பாடு என்று கூறி " தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன்" என்று அடியெடுத்துக் கொடுக்கிறார்.

    இறைவனின் அருளைப் பெறுவதற்கு குருவின் வழி காட்டல் மிக முக்கியம். குருவருள் இருந்தால் எதையும் சாதிக்க இயலும். அத்தகைய அருளைப் பெற்றுத் தரும் பதிகம் சுந்தரர் பாடிய "திருத்தொண்டத்தொகை".

    "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கு அடியேன் திருநீல கண்டத்து குயவனார்க்கு அடியேன் " என்று தொடங்குபவர் அடுத்த டுத்து இறைவனின் அடியார்களைப் புகழ்ந்து துதிக்கிறார்.

    "இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன்

    ஏனாதினாதன் தன் அடியேற்கு அடியேன்

    கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன்

    கடவூரில் கலயன்தன் அடியார்க்கு அடியேன்"

    என்று ஒவ்வொரு அடியவர்களின் பெயரைச் சொல்லி அவர்களுக்கு அடியேன் என்று மகிழ்கிறார்.

    "மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன்

    முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன்" என்று மகிழும் சுந்தரர்

    மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர்ப் பூசல்

    வரிவளையால் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்

    தென்னவனாய் உலகாண்ட செங்கணாற் கடியேன்

    திருநீல கண்டத்துப் பாணனார்க்

    கடியேன்

    என்னவனாம் அரனடியே அடைந்திட்ட

    சடையன்

    இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன்

    அன்னவனாம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார்

    ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே' என்று உறுதி கூறுகிறார்.

    முழுமுதற் கடவுளான ஈசனுக்கு அரிய பல தொண்டுகள் செய்து, பேரின்பத்தில் மூழ்கிய அடியவர்களைப் போற்றிப் பாடுகிறது "திருத்தொண்டத்தொகை" என்னும் பதிகம்.

    நாவுக்கரசரும், சம்பந்தரும் இறைவனைப் புகழ்ந்து பாடினார்கள் என்றால், சுந்தரர் இறைவனின் அடியார்களைப் புகழ்ந்து பாடினார். ஈசன் அவரின் நல்ல நண்பனாக, உற்ற தோழனாக, சுந்தரரின் காதலுக்குத் தூது சென்று, அவ்வப்போது அவரின் தவறுகளுக்குத் தண்டனை கொடுத்து, திருத்தி தன்னிடம் முழுமையாக ஈர்த்துக் கொள்கிறார்.

    அவர் பாடல்களில் இறைவன் மேலான உரிமை தெரியும், நட்பு தெரியும், கோபம் கொள்ளும் நெருக்கம் இருக்கும்,சுந்தரருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தவர் சேரமான் பெருமான். சுந்தரர் வெள்ளை யானையின் மீதேறி கயிலை செல்கிறார் என்று அறிந்ததும், சேரமானும், அஞ்செழுத்தை ஓதி தன் யோக சக்தியால், சுந்தரருடன் சேர்ந்து கயிலாயம் செல்கிறார். முக்தி அடைவதிலும் பிரியாத நட்பு.

    தமிழ் வேதங்கள் இறைவனால், ரசித்துக் கேட்கப் பட்டவை. "திருத்தொண்டகைத் தொகை"- படிப்பதால் உண்டாகும் பலன் அதிகம். திருமுறைகளால் பெற முடியாத பயன் எதுவும் இல்லை. இறைவன் அருள் பெற்றால் கிடைக்காதது எதுவும் இல்லை.

    தொடர்புக்கு-gaprabha1963@gmail.com

    • இரண்டு நாட்களுக்கு முன்னர் சிம்சீ, ஜெர்மானிய சத்தம் கிம்சே, என்னும் மகா பெரிய ஏரிக்குப்போயிருந்தோம்.
    • நான் அங்கே இருந்தபோது பல நாட்கள் நடந்த இன்பமான வழக்கம் இது!

    போன வருடம் நான் ஜெர்மனிக்குப்போயிருந்தபோது ஒருவர் மூன்று தினங்களாக மாலை எட்டிலேர்ந்து எட்டரைக்குள் வருவேன் என்று சொல்லிவிட்டு சரியான நேரத்துக்கு வந்து, சரியான நேரத்துக்குப்போனார்.

    யார்?

    சொல்கிறேன்…

    மேற்குப்பக்கம் மெதுவாக நமக்கு பிரக்ஞையே ஏற்படாமல் ஒருவித அமானுஷ்ய திதியில் கரு மேகங்கள் கூட ஆரம்பிக்கின்றன. ஏதோ ஒரு உந்துதலில் நாம் மேலே பார்க்கும்போது ஒரு சில மேகங்கள் சாதுவாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு குழு அமைக்கின்றன. சட்டென்ற ஒரு நிமிஷத்தில் காற்று தன் ஈரப்பதத்தை அதிகரித்துக்கொண்டு ஒரு வீசு வீசுகிறது. மரங்கள் "அட ச்சே மறுபடியுமா" என்னும் அலுப்பில் சில இலைகளை உதிர்த்துவிட்டு அமைதியாகப்பார்க்கின்றன.

    முதல் மழைத்துளி நம் மூக்கின் மேல் விழுகிறது.

    "ஓ மழை வருதா?"

    இந்த "தா" வை முடிப்பதற்குள் ஏழெட்டு துளிகள். "உள்ளேன் அய்யா" என்று கொஞ்சம் வயது முதிர்ந்த கனமான காற்று ஒரு பெரிய வாரலுடன் நம்மைக்கடக்கின்றது. சடசடவென மழை. "இப்ப நான்" என்று காற்று. நேர் கோட்டு மழை கொஞ்சம் காற்றில் வளைந்து எல்லிப்டிகலாகி, மறுபடியும் நேர்கோடு. இப்போது காற்றும் மழையும் ஒரு சேர வீச்சு. எங்கிருந்தோ இந்தக் குதூகலத்தில் சேர்ந்துகொள்ளும் இன்னும் கொஞ்சம் கரு மேகம்.

    "சரி, இனி என் முறை!" என்றபடி கீழ் வானத்தில் ஒரு சின்ன மின்னல் கோடு. அந்தக்கோட்டின் கடைசி பாயிண்ட்டைப்பிடித்தபடி ஒரு சைக்கடெலிக் வண்ணக்கோடுகள். கண்ணில் தெறிக்கிற கூர்மையான வெளிச்சம். ஓரிரு நொடி அமைதி. எங்கோ ஆரம்பித்து நம்மை நோக்கி ஆக்ரோசமாக உருண்டு வரும் இடியோசை. நம் தலைக்கு மேல் படாரென வெடித்து, மீண்டும் எங்கோ உருண்டோடி அமைதி. மழை வலுக்கிறது. காற்றும் கூடத்தான்.

    கையில் டீயுடனும் சீஸ் க்ரேக்கர் பிஸ்கெட்டுடனும் நாம் இந்த ஜாலத்தை பால்கனியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோமானால், நாம் அறியாத ஒரு நிமிஷத்தில் சட்டென்று மழை நிற்க, காற்றும் "அடப்போடா" என்று போய் விட, அப்பப்போ மின்னல் மட்டும் சில கீற்றுக்களைத்தவழ விட்டு பெட்ரோல் தீர்ந்த எஞ்சின் போல சில சில்லரை இடிகள், அப்புறம்..மறுபடி வெளிச்சம், மறுபடி இதமான சில் காற்று. வானம்..துல்லிய நீலம்.

    "டைம் எட்டரையாச்சாப்பா?"

    மகன் கேட்கிறான்.

    வாட்ச் பார்த்து நான், "சரியா எட்டரை!"

    அதான் ஸ்டார்ம் போயிடுத்து! இன்னிக்கு வெதர்ல போட்டிருந்தான், எட்டிலேர்ந்து எட்டரை வரைக்கும்னு!"

    அடப்பாவிகளா!

    மழையும் புயலும்கூட அப்பாயிண்ட்மெண்ட்டில் வருகிற ஊரா இது!

    நான் அங்கே இருந்தபோது பல நாட்கள் நடந்த இன்பமான வழக்கம் இது!

    இரண்டு நாட்களுக்கு முன்னர் சிம்சீ, ஜெர்மானிய சத்தம் கிம்சே, என்னும் மகா பெரிய ஏரிக்குப்போயிருந்தோம். 10,000 வருஷங்களுக்கு முன்னால் ஐஸ் ஏஜ் (பனிக்காலம்) இன் இறுதியில் பனிக்கட்டியினால் உருவான இந்த ஏரி பிரிஅல்பின் என்று சொல்லப்படுகிறது. அந்த யுகத்தில் 240 சதுர கிலோமீட்டர் இருந்த ஏரி இப்போது 80 சதுர கிலோமீட்டராகச்சுருங்கி விட்டதன் காரணம் நிலத்தை எடுத்துக்கொண்டதால் என்கிறார்கள்.

    இந்த மகா பெரிய ஏரியில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பல முயற்சிகள் செய்திருக்கிறார்கள். சூழலைப்பாதுகாக்க இங்கே ஓடும் படகுகள் பாட்டரியில் செலுத்துபவை. இவைகூட மிதமான வேகத்தில், அதிக சப்தம் இன்றி ஒரு காஸ்மோலாசிக்கல் ஸ்டில்நெஸ்க்கு நடுவில்தான் ஓடுகின்றன.இதை விட்டால் தனியார்களின் துடுப்பு படகுதான்.

    சுற்றிலும் ஆல்ப்ஸ் மலைகள் பிரம்மாண்டமாக எழும்பியிருக்க இடையிடையே தெரியும் நீலவானம், சம்மரிலும் கரையாத பனி படர்ந்த மலைச்சிகரங்கள், ஓங்கி உயர்ந்த கானிபெரஸ் காடுகள், மேப்பிள், பைன் மரங்களின் பச்சை. ஏரியில் நடுவில் ஒரு இடத்தில் படகின் எஞ்சினை நிறுத்திவிட, எங்கும் துல்லியமான அமைதி. சாவைப்போல அமைதி. படகு ஓட்டும் அந்த வெயிஸ்ட் கோட் ஆசாமி சட்டென்று அலங்காரப்பெட்டியிலிருந்து ஒரு டிரம்பெட்டை எடுத்து படகின் மேல் பகுதிக்குப்போய் என்னமோ சோகமான பாடல் வரிகளை வாசிக்க, எங்கும் அமைதி. ஓரிரு வினாடிகள் நிறுத்துகிறார். மறுபடி அமைதி. அதோ அந்த மலையிடையெ பனிகளுக்கு நடுவே புகுந்து.. அதே இசை மீண்டும் எதிரொலியாகக்கேட்க ஆரம்பிக்கும் கணம் ..எந்த ஒரு நாத்திகனும் கடவுள் நம்பிக்கை பெறும் கணம் என்பது என் கணிப்பு.

    கோனிக்ஸே என்னும் இன்னொரு பெரிய ஏரி. கோனிக் என்றால் ஜெர்மனில் ராஜாவாம், மன்னராம்! ஏரி என்றால் நீலத்தண்ணி மட்டுமில்லை. சுற்றிலும் பவேரியன் ஆல்ப்ஸ் மலைச்சிகரங்கள், ஆங்காங்கே பனி படர்ந்து ராட்சச குணம் காட்டும் மேகத்திரைக்கு நடுவே பச்சை ரகசியம், காதுக்குள் ஜிவ்வென்னும் சில் காற்று தலையைக்கலைக்கும் விஷமம், துளிக்கூட குப்பை ஏதும் இல்லாத ஸ்வச் பவேரியா, அமைதியாக நம்மைக்கடத்தும் எலெக்ட்ரிக் படகுகள், தூரத்தே ஊடாடும் வெள்ளை பாய்மரத் துணிகள் வைத்த உல்லாச ஆசாமிப்படகுகள், கூடவே கச்சிதமாக சினேகிதிகள், நம்மைப்போல கூட்டங்கூட்டமாய் டூரிஸ்டுகள். பாதிப்பேர் கிழங்கட்டைகள், பலர் துணைவியுடன் கூடவே ஒரு ஸ்ட்ராலரில் கண்ணைக்கொட்டக்கொட்ட விழித்துப்பர்க்கும் ஒரு வெள்ளை பொம்மை போன்ற குழந்தையுடன் வருகிறார்கள். வெறும் ஜட்டியுடன் மேலே ஒன்றுமில்லாமல், இருங்கள், இருங்கள், சின்னச்சின்னக்குழந்தைகள், ஸ், அப்பாடா, ஏரிக்கரையில் கால்களையும் பிருஷ்டத்தையும் நனைத்து விளையாடுகிறார்கள்.

    இந்த கோனிக்சீ ஏரியுமே ஆல்ப்சின் பனியிலிருந்து உருகி வந்ததாம். இந்தப்பக்கம் ஜெர்மனியின் பிரீஸ்டெஸ்காடன் என்னும் பெரிய பார்க்கும், அந்தப்பக்கம் ஆஸ்திரியாவின் ஸால்ஸ்பர்க்குக்கும், ஆம், பிரபல இசை மேதையான மோஸார்ட்டின் ஊரேதான், இடையே இருக்கின்றது. இங்கே வருவதற்கு 1965 வரை ரெயில்வே சர்வீஸ் இருந்திருக்கிறது. இப்போது பிரீஸ்டெஸ்காடன் ஸ்டேஷனில் பர்கர், பீட்சா, கோதுமை பியர் என்று சாப்பாட்டுக்கடையாக்கி விட்டார்கள். ஹிட்லர் காலத்திய கொடூர டக்காவ் (Dachau) கான்சன்ட்ரேஷன் கேம்ப்பின் (அகதிகள் முகாம்) துணை முகாம் இங்கே இருந்திருக்கிறது. அருகாமையிலேயே ஹிட்லரின் இடதோ வலதோ கையான ஹிட்லர் தன்னுடைய சின்ன வீடு ஒன்றை இங்கே வைத்திருந்தார் என்று பராபரியாக காதில் விழுகிறது!

    "இந்த ஏரி என்ன ஆழம் இருக்கும்?"

    "தெரியாது!"

    "பனிக்காலத்தில் உறைந்து விடுமோ?"

    "நிச்சயமா"

    "அப்ப அது மேல நடக்கலாமா?"

    "தெரியாது! ஆனா 1997-ல் இந்த ஏரியில நூறு அடி ஆழத்துல போல்க்ஸ்வேகன் காருடன் ஒரு ஆசாமி கண்டெடுக்கப்பட்டார்!"

    "அடேடே, கொஞ்சம் முன்னே தெரிஞ்சிருந்தா அவரைக்காப்பாத்தியிருக்கலாமோ!"

    "இல்ல, கஷ்டம்தான்!:

    "அப்படியா ஏன்?"

    "அவர் 1964-ல் இதுக்குள விழுந்தாருன்னு சொல்றாய்ங்க!"

    இத்துடன் நான் மவுனமாகி, படகில் வந்த இங்கிலிஷ் தெரிந்த குறுந்தாடியுடனான என் உரையாடல் முற்றுப்பெற்றது!

    • அந்த காலகட்டத்தில் தான் `நெஞ்சங்கள்' படத்துக்காக சிவாஜி சாருடன் நடிப்பதற்காக ஒரு குழந்தை நட்சத்திரத்தை தேடி இருக்கிறார்கள்.
    • என்ன பாப்பா நல்லா இருக்கியா? என்று மேஜர் சுந்தரராஜன் சார் கேட்டபடி `என்ன பாப்பா சினிமாவில் நடிக்க வர்றீங்களா... என்று கேட்டு சிரித்தார்.

    நடிகை மீனா...!

    குழந்தை நட்சத்திரமாக தனது கலை உலக பயணத்தை தொடங்கியவர். சினிமா சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்ட நடிகர் திலகம் சிவாஜி முதல் இந்த கால ரஜினி வரை முன்னணி நட்சத்திரங்களோடு ஜொலித்து கொண்டிருப்பவர்.

    40 ஆண்டுகளுக்கும் மேலான அவரது கலைப்பயணம் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத தடம் பதித்தவை. தனது திரை வாழ்க்கையின் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்.

    மீனாகுட்டி...

    `என்னம்மா... அம்மாவின் குரல் கேட்டதும் வீட்டின் ஒரு அறைக்குள் இருந்து கையில் கிடைத்த கலர் பென்சில்களால் ஒரு நோட் புக்கில் ஓவியம் வரைவதாக நினைத்து கிறுக்கி கொண்டிருந்த நான் குரல் கொடுத்தேன்.

    மூன்றரை வயதில் வரைவது என்றால் கிறுக்குவது தானே... `இங்கே வாயேன்...' மீண்டும் அம்மாவின் குரல் கேட்டதும் எல்லாவற்றையும் அப்படியே போட்டுவிட்டு அம்மா இருந்த அறைக்குள் ஓடி சென்று அவர் முன்பு ஆஜரானேன்.

    அம்முகுட்டி இந்த டிரெஸ்சை போட்டுக்கோங்க... என்று அம்மா ஒரு பிராக்கை எடுத்து போட சொன்னதும், லீவு நாளிலும் அம்மா ஸ்கூலுக்கு அனுப்ப போவதாக நினைத்து `இன்னிக்கு லீவுதானேம்மா...' என்று செல்லமாக சிணுங்கினேன்.

    என் எண்ணத்தை புரிந்து கொண்ட அம்மா `ஸ்கூலுக்கு இல்லடி செல்லம்...' என்றார்.

    வேற எங்கம்மா போறோம்...?

    ஒரு அங்கிளுக்கு `ஹேப்பி பர்த்டே' அங்கதான் போறோம்.

    ஹேப்பி பர்த்டேன்னா சாக்லேட்லாம் தருவாங்கதானே...?

    கண்டிப்பா தருவாங்க! என்றவர் அடுத்த சில நிமிடங்களில் எனக்கு டிரெஸ் போட்டு ரெடியாக்கிவிட்டார்.

    காரில் ஏறி அமர்ந்ததும் கார் புறப்பட்டது. சிறிது நேரத்தில் நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. இறங்கினோம்.

    நிறைய கார்கள் அணிவகுத்து நின்றன. நிறைய ஆண்களும், பெண்களும் திரண்டு நின்னாங்க. எல்லோரும் கைகளில் பூமாலை, சால்வை அல்லது பரிசு பொட்டலம் என்று ஏதாவது ஒன்றை வைத்திருந்தார்கள்.

    அந்த கூட்டத்துக்கு இடையே அம்மா என்னையும் கையை பிடித்து அழைத்து சென்றார்.

    பெரிய பங்களா வீடு. வீட்டுக்குள் சென்றதும் உயரமாக ஒரு அங்கிள் நின்று கொண்டிருந்தார். அம்மா என்னை தூக்கி வைத்துக்கொண்டு ஒரு மாலையை கையில் தந்து அந்த அங்கிளுக்கு போடு என்றார்.

    நான் மாலையை போட்டதும் தலையை குனிந்து வாங்கினார். அப்படியே என் கன்னத்தையும் லேசாக கிள்ளியபடி தட்டிக்கொடுத்தார்.

    அவர் தான் திரை உலகை ஆண்ட சக்கரவர்த்தி சிவாஜி என்பதோ... அதுதான் அவரது இல்லமான `அன்னை இல்லம்' என்பதோ அந்த வயதில் எனக்கு புரியவில்லை.

    தி.நகர் தெற்கு போக்ரோட்டில் அமைந்துள்ள அன்னை இல்லம் திரை உலகினருக்கு கோவில் மாதிரி. திரை உலக ஜாம்பவானை அவரது இல்லத்திலேயே அந்த சின்ன வயதிலேயே சந்திக்கும் பாக்கியத்தை உங்கள் மீனா பெற்றிருக்கிறேன்.

    அந்த இல்லத்தில் இருந்துதான் எனது திரை உலக பயணமும் தொடங்கியது.

    அந்த காலகட்டத்தில் தான் `நெஞ்சங்கள்' படத்துக்காக சிவாஜி சாருடன் நடிப்பதற்காக ஒரு குழந்தை நட்சத்திரத்தை தேடி இருக்கிறார்கள். அதுவரை குழந்தைகள் யாரும் அவர்களுக்கு `செட்' ஆகவில்லை.

    பிறந்த நாள்விழாவில் என்னை பார்த்த சிவாஜி சாருக்கு அந்த கதா பாத்திரத்துக்கு என்னை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றி இருக்கிறது. ஆனால் அன்று அவர் எங்களிடம் எதுவும் சொல்லவில்லை. வழக்கபோல் நானும் பள்ளிக்கு சென்று கொண்டு இருந்தேன்(எல்.கே.ஜி தான்).

    சில நாட்கள் கழித்து பட தயாரிப்பு குழுவினர் எங்களை வீட்டிற்கு வந்து சிவாஜி சார் கூப்பிடுவதாக என்னை அழைத்து சென்று இருக்கிறார்கள். அன்னை இல்லத்தில் அவரை நானும் எனது அம்மாவும் சந்திக்க சென்ற போது தான் தங்கள் படத்துக்கு ஒரு குழந்தை நட்சத்திரம் தேவைப்படுவதாகவும், அதில் நான் நடித்தால் நன்றாக இருக்கும் என்றும் சிவாஜி சார் அம்மாவிடம் தெரிவித்து இருக்கிறார். அங்கு இருந்த மேஜர் சுந்தரராஜன் சாரிடமும் சிவாஜி சார் இந்த பொண்ணை தான் நமது படத்திற்கான கதாபாத்திரத்துக்கு தேர்வு செய்து இருக்கிறேன் என்றார்.

    உடனே அருகில் நின்ற அம்மாவிடம் `என்ன மல்லிகா உங்க பொண்ணா... என்று கேட்டுக்கொண்டு என் பக்கம் திரும்பி `என்ன பாப்பா நல்லா இருக்கியா? என்று மேஜர் சுந்தரராஜன் சார் கேட்டபடி `என்ன பாப்பா சினிமாவில் நடிக்க வர்றீங்களா... என்று கேட்டு சிரித்தார்.

    புகழின் உச்சத்தில் இருந்தவர் சிவாஜி. அவருக்கு மரியாதை செய்ய வந்தவர் அம்மா. அப்படி இருக்கும் போது அவருடன் நடிக்க தன் பிள்ளைக்கு வாய்ப்பு கிடைப்பதை மறுப்பாரா? உடனே ஓ.கே. சொல்லி இருக்கிறார்.

    அம்மாவும் காங்கிரசில் இருந்ததால் சிவாஜி சாருக்கு நன்கு அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிட்டத்தக்கது.

    சினிமா... நடிப்பு... என்பதெல்லாம் அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. தெரிந்து இருக்கவில்லை என்பதைவிட புரியும் வயதில் அப்போது நான் இல்லை என்பதே உண்மை.

    (மலரும் நினைவுகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கிறேன்.)

    • செர்ரி பிளாசம்! எத்தனை அழகான பேரு பாரு!
    • ஜப்பானிய செர்ரி அல்லது சகுரா என்றும் அழைக்கப்படுகிறது.

    "தினோம் ஷூவுக்கு பாலிஷ் போடுக்கணும். ஒரு சின்ன பொட்டு புழுதி இருந்தாலும் முட்டி போட வெப்பேன்"

    -என். சி. சி. மாஸ்டர் விஜயசீலன் உறுமுவார்.

    அம்மாவைப்படுத்தி எடுத்து அந்த அமுதா காப்பிக்கொட்டைக்கடைக்கு அடுத்து இருக்குமே, சின்ன செருப்பு கடை, ஓனர் பையனா, ஆளா என்று சொல்ல முடியாத உயரமும் ஒல்லியுமாய் இருப்பாரே, அங்கு போய் வாங்கின ஷூ பாலிஷ் பெயர் செர்ரி பிளாசம்.

    தட்டையான வட்ட வடிவ டப்பா. மேல் மூடியில் ஆட்டின் வடிவ துக்கினியூண்டு துருத்திக்கொண்டு இருக்குமே, அதை உவப்பாக டப்பென்று திருப்பினால் மூடி கழண்டுகொண்டு விடும். ஜாக்கிரதையாகத் திறக்க வேண்டும். கையெல்லாம் ஈஷிவிடும்.

    புதிதாய் வாங்கின ஷோக்கில் நானே அவசர அவசரமாகத் திறந்து துணியை வைத்து அதன் ராயச வழுவழுப்பில் தீய்த்து ஷூவில் காமாசோமாவெனப் போட்டுவிட்டேன்.

    "என்ன அவசரம் உனக்கு! நாந்தான் வரேன்னு சொன்னேனே! இதுக்குப்பேரு பாலிஷ் போடறதா? என்னடா இது.. மாடு கன்னுக்குட்டி பிரசவித்த எடம் மாதிரி பண்ணிவெச்சிருக்கே!"

    "எல்லாம் நல்லாத்தான் போட்டிருக்கேன்!"

    "ஆமா! போட்டே! சட்டையப்பாரு!"

    பார்த்தால் தொப்பைக்குக்கு மேலே சட்டையில் தார் கொட்டினா மாதிரி பாலிஷ் பரவி.....

    அய்யய்யோ!

    "செர்ரி பிளாசம்! எத்தனை அழகான பேரு பாரு!

    அந்த பூ கூட ரொம்ப அழகா இருக்குமாம். வாசனையாக்கூட இருக்கும்னு நெனக்கறேன். ஒரு தரமாவது இந்த செர்ரி பிளாசம் பூவை பார்த்துடணும்!

    சரி சரி, என்ன பண்ணியிருக்க நீ? அந்த ஷூ பாலிஷை இப்படி சட்டை மேல பரப்பிண்ட்டு..! படவா! இன்னும் ரெண்டுமாசம் வரைக்கும் இதத்தான் போட்டுண்டு போயாகணும்! இன்னமே தீபாவளி அப்பத்தான் வாங்கிக்கொடுப்பேன்!"

    அம்மாவை கவர்ந்திருந்த அந்த செர்ரி பிளாசம் பேர் கொண்ட பாலீஷை ஒன்றிரண்டு முறை போட்டதோடு சரி.

    என்.சி.சி.யையே நிறுத்திவிட்டேன். அந்த அகால நிறுத்தத்தின் சுவாரஸ்யமான காரணம் பற்றி இன்னொரு சமயம் எழுதுகிறேன்.

    போன வருடம் ஜெர்மனி போயிருந்தபோது பவேரிய நகரமான மியூனிக்கில் இருந்து பார்ட்னா கிளம் என்று என்னால் சரியாக உச்சரிக்க முடியாத ஒரு இடத்திற்கு மகனுடன் பிக்னிக் போனோம்.

    சரியாக பன்னிரெண்டு பத்துக்கு, அப்புறம் மூணு இருவத்தைந்துக்கு என்றெல்லம் முன் நோட்டீஸ் கொடுத்து நேரம் தவறாமல் மழையும் இடியுடன் கூடிய சூறைக்காற்றும் அடிக்க, நாங்கள் பாட்டுக்கு அந்த பச்சை சோலை ரகசியத்தின் ஊடே வேடிக்கை பார்த்துக்கொண்டே போனோம்.

    "என்னடா மழை சூறைக்காத்துங்கறானே" என்றெல்லாம் விசனப்படவே கூடாது. திடீரென்று ஒரு திருப்பத்தில் சின்ன ஊர் தென்பட்டு அதன் ஆரம்பத்தில் ஒரு சில வீடுகளும் வாசலில் பி.எம்.டபிள்யூ. கார்களும், ராட்சச டிராக்டரும் எதிரேயே ஒரு பியர் கார்ட்டென் என்னும் பியர் கடையும் இருக்கும் அதை விடுங்கள், அந்த ஊரில் சுள்ளென்று ஜில்லாக வெயில் அடிக்கும். அந்த வெயிலுக்கு நடுவே நீங்கள் போட்டோவில் காணும் மரங்கள் பூத்துக்குலுங்கும்.

    "என்ன இப்படி பூவா மிளிருதே என்று ஒரு திருப்பத்தில் அந்த ஜெர்மன் பெண்மணி கூட குட்டை பிராக் போட்டுண்டு என் சைசில் இருக்கும் ஒரு நாயை வாக்கிங் அழைத்துக்கொண்டு போனாளே – அந்த திருப்பத்தில் அதே மாதிரி பூத்துக்குலுங்கின மரங்களைப்பார்த்துவிட்டு மகனிடம் கேட்டேன்..

    "என்ன மரம் இது? இப்படி பூத்துச்சொரியுது?"

    "அதுவா செர்ரி பிளாசம்ப்பா!"

    ஓ இதுதானா செர்ரி பிளாசம்!

    செர்ரி பிளாசம் , ஜப்பானிய செர்ரி அல்லது சகுரா என்றும் அழைக்கப்படுகிறது. இது புரூனஸ் அல்லது புரூனஸ் துணை இனத்தைச் சேர்ந்த பல மரங்களின் பூவாகும் . செராசஸ் , செர்ரி மரத்தின் காட்டு இனங்கள் சீனா, கொரியா மற்றும் குறிப்பாக ஜப்பான் உட்பட கிழக்கு ஆசியாவில் இவை பொதுவானவை. அவை பொதுவாக அலங்கார செர்ரி மரங்களைக் குறிக்கின்றன, சாப்பிடுவதற்கு பழங்களை உற்பத்தி செய்யும் செர்ரி மரங்களை அல்ல . செர்ரி மலர் ஜப்பானின் தேசிய மலராகக் கருதப்படுகிறது .

    ஐரோப்பாவில் , 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, ஆங்கிலேயரான காலிங்வுட் இங்க்ராம், ஜப்பானிய செர்ரி மலர்களைச் சேகரித்து ஆய்வு செய்தார், பல்வேறு அலங்கார சாகுபடிகளை உருவாக்கினார், அந்தக்காலங்களிலேயே செர்ரி மலரைப் பார்க்கும் கலாச்சாரம் பரவத் தொடங்கியது.

    1912-ம் ஆண்டு நட்பின் அடையாளமாக ஜப்பான் செர்ரி மலர்களை வழங்கிய பிறகு, அமெரிக்காவில் செர்ரி மலரைப் பார்ப்பது பரவத் தொடங்கியது.

    செர்ரி மலர்கள் அழகான வாசனையைக் கொண்டிருப்ப தாகவும், பல மெழுகுவர்த்திகள் மற்றும் தூபங்கள் வீட்டு உபயோகத்திற்கு உத்வேகமாக இருப்பதாகவும் இருக்கின்றன.

    வழி நெடுக அந்த செர்ரி மரங்களின் பூக்களைப் பார்த்துக்கொண்டே வந்தேன். குப்பென்று வசந்த காலத்திற்காய் பூத்துக்குலுங்கும் இந்த செர்ரி மரங்களைப் பார்க்கும்போது கடைசி வரை செர்ரி பிளாசம் பூக்களை நேரில் பார்க்காமலேயே இறந்து போய் விட்ட என் அம்மாவை நினைத்துக்கொண்டேன்......

    அம்மாவும் செர்ரி பிளாசமும் எப்போதும் அழகுதானே!

    • பாடலுக்கு தகுந்தாற்போல் ஆடும் திறமை மிக்கவர்களாக ஒவ்வொரு கலைஞர்களும் இருந்தார்கள்.
    • இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் பெரிய நடிகை... அப்படி... இப்படி என்று யாரும் இருக்கமாட்டார்கள்.

    கலை நிகழ்ச்சி என்றால் கலாதான் என்று சொல்லும் அளவுக்கு கலை நிகழ்ச்சிகளில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரமாண்டங்களையும், புதுமைகளையும் கொடுத்து இருக்கிறோம்.

    இப்போது இருப்பதுபோல் தொழில்நுட்ப வசதி கிடையாது. நடிகர்-நடிகைகளுக்கு கேரவேனெல்லாம் கிடையாது. ஒத்திகை பார்க்கும் இடங்களில்தான் மேக்-அப், காஸ்ட்யூம் எல்லாம்.

    ஆனாலும் நமது கலைஞர்களிடம் இருக்கும் திறமை அலாதியானது. எத்தனையோ நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை பார்க்க கூட நேரம் கிடைக்காமல் நேரடியாக மேடைகளுக்கு சென்றிருக்கிறோம். அதே இடத்தில் பாடலுக்கு தகுந்தாற்போல் ஆடும் திறமை மிக்கவர்களாக ஒவ்வொரு கலைஞர்களும் இருந்தார்கள்.

    சிங்கப்பூரில் மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி. நாங்கள் மலேசியாவில் இருந்து மாலை 3 மணிக்குதான் சிங்கப்பூர் சென்றோம். உடனடியாக சிறிதுநேரம் வேக வேகமாக ரிகர்சல் பார்த்துவிட்டு உடனடியாக மேடைக்கு போக வேண்டிய தாயிற்று. ஆனால் மேடையில் ஆடும்போது பல நாட்கள் பயிற்சி எடுத்துவிட்டு ஆடியது போல் திறமையாக ஆடி ரசிகர்களால் பாராட்டப்பட்டார்கள்.

    இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் நான் பெரிய நடிகை... அப்படி... இப்படி என்று யாரும் இருக்க மாட்டார்கள். எல்லோருமே வாடி போடி என்று பேசும் அளவுக்கு உரிமை எடுத்து பேசுவார்கள்.

    குஷ்பு, ரம்யாகிருஷ்ணன், ரோஜா, மும்தாஜ், தேவயாணி என்று ஆளாளுக்கு எதையாவது சொல்லி கலாய்த்துக்கொண்டே இருப்பார்கள்.

    அவர்களுக்கான காட்சி வந்ததும் அடித்து புரண்டு எழுந்து ஓடி சென்று மேடையில் ஆடி அசத்திவிடுவார்கள்.

    1996-ம் ஆண்டில் பெங்களூரில் உலக அழகி போட்டியை நடிகர் அமிதாப் பச்சன் நடத்தினார்.

    ஒரே மேடையில் 120 டான்சர்களை வைத்து நிகழ்ச்சியை நடத்தினேன். 88 மாடல் அழகிகளும் மேடையில் ஒவ்வொருவராக நடந்து வரும்போது பின்னணி நடன நிகழ்ச்சியை அமைத்தோம். அதற்கான பாடல் கம்போசிங் ஒரே நாளில் செய்து நிகழ்ச்சியை நடத்தியதை பார்த்து லண்டனில் இருந்து வந்திருந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பாராட்டினார்கள். தென்னிந்தியர்களின் கலைத் திறமையை பார்த்து வியந்து போனார்கள்.

    சென்னையில் 'நேற்று இன்று நாளை' என்று ஒரு ஷோவை நடத்தினோம். அதற்கு டைரக்டர் மணிரத்னம் சார். பழைய பாடலில் தொடங்கி புதிய பாடல் வரை பாடல்களை தேர்ந்தெடுத்து நடிகர்-நடிகைகளுக்கு வழங்கி இருந்தோம். எம்.ஜி.ஆர். பட பாடலுக்கு பிரகாஷ்ராஜ் ஆடினார். பாடலுக்கு ஏற்றவாறு கலைஞர்களை தேர்வு செய்து காட்சியை அமைத்து இருந்தோம். இதில் புதுமை என்னவென்றால் ஒவ்வொரு பாடலுக்கும் புது புது செட் மாறும். இடைவெளி 15 நிமிடங்கள்தான் அதற்குள் அடுத்த 'செட்' தயாராகிவிடும்.

    நடிகர் பிரசாந்த் நிகழ்ச்சியில் 23 பாடல்கள். கதாநாயகன் அவர் மட்டும்தான். கதாநாயகிகள் 7 பேர். அதாவது குஷ்பு, ரம்பா, ரோஜா, தேவயாணி, மும்தாஜ், சிம்ரன், சுவலெட்சுமி! "பூவுக்குள் ஒளிந்திருக்கும்..." என்ற பாடலுக்கு 7 ஹீரோயின்களும் சேர்ந்து ஆடினார்கள்.

    நைஜீரியா, தென்னாப்பிரிக்க நாடுகளை தவிர உலகில் பெரும் பாலான நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறேன். பெரும்பாலும் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கலந்து ஆடியிருக்கிறார்கள்.

    பெரும்பாலும் இந்த ஷோக்களை ஒரு குடும்ப நிகழ்ச்சி போலவே நடத்துவோம். ஷோக்களில் எனக்கு உதவி செய்வதற்காக எனது சகோதரிகளும் வந்து விடுவார்கள். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு அத்தனை கலைஞர்களுடன் இறை வணக்கம் செய்வேன். நிகழ்ச்சி முடிந்ததும் அதேபோல் எல்லோரையும் நிற்க வைத்து பிருந்தா சுற்றி போடுவார்.

    ஒவ்வொரு ஆண்டும் அரபு நாடுகளில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட ஷோக்கள் இருக்கும். 1996 முதல் 2002 வரை ஓய்வே இல்லாதபடி கலை நிகழ்ச்சிகள் நடத்தி இருக்கிறோம். 1500-க்கும் மேற்பட்ட ஷோக்களை நடத்திய பெருமை எனக்கு கிடைத்தது.

    மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவில்லை. இப்போது அந்த அளவு ரிஸ்க் எடுத்து யாரும் நடத்த முன் வருவதுமில்லை.

    மறக்க முடியாத நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து அவர்கள் மனதில் இடம்பிடித்ததும் முன்னணி திரை நட்சத்திரங்கள் அனைவருடனும் பணியாற்றிய அனுபவமும் என்றும் என்னால் மறக்க முடியாதவை.

    இதுவும் படிப்பு மாதிரி தான். நம்மை நாம் அப்டேட் செய்துகொள்ள வேண்டும். அதற்கு படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது இருந்த டிரெண்ட் வேறு, இப்போது உள்ள டிரெண்ட் வேறு. நான் பெரிய படம் சின்ன படம் என்று பிரித்துப் பார்க்கமாட்டேன். சின்ன படங்கள் பண்ணும்போது பெரிய படங்களே கைவிட்டுப் போயுள்ளது. என்னைப் பொறுத்தவரை பிசியாக இருக்கணும். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று படங்கள் பண்ணியிருக்கிறேன். எனக்கு டான்ஸ் பிடிக்கும். பிடிச்ச விஷ யத்தைப் பண்ணும்போது நேரம் காலம் பார்க்காமல் உழைப்பேன். சில வருடங்கள் ஐதராபாத், கேரளா என்று மாறிக்கொண்டே இருந்தேன். என்னுடைய தொடர் உழைப்பு தான் தொடர் பயணத்தை தக்க வைக்கிறது.

    என்னுடைய நடனத்தை மற்றவர் ஆடும்போது ரசிப்பேன். என்னுடைய நடனத்தில் பரதம் , போக் அதிகம் இருக்கும். அதை நடிகைகள் அப்படியே என்னுடைய பாடி ஸ்டைலில் பண்ணும்போது சந்தோஷமாக இருக்கும்.

    கலைத்துறையில் எனக்கு பிடித்தது டான்ஸ் தான். டைரக்ஷனில் எனக்கு ஆர்வம் கிடையாது அப்படியே பண்ணினாலும் டான்ஸ் முக்கியத்துவம் உள்ள ஒரு படம் மட்டுமே பண்ணுவேன்.

    பிரபல இயக்குனர்கள் பலர் என்னை நடிக்கச் சொல்லியிருக்கிறார்கள். நான் மறுத்துவிட்டேன். நயன்தாராவிடம் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. அந்த நட்பில் ஒரு நாள் போன் பண்ணி 'விக்கி பேச வேண்டுமாம்' என்று விக்னேஷ்சிவனிடம் போனை கொடுத்தார். 'கதை எழுதும்போது உங்களை வைத்து எழுதினேன். மறுக்காமல் நடிக்க வேண்டும்' என்று அவுட் லைன் சொன்னார். 'எனக்கு டான்ஸ் போதும். மனப்பாடம் பண்ணி என்னால் டயலாக் பேச முடியாது' என்று சொன்னேன்.

    அவர் டைம் கொடுத்து யோசித்து முடிவை சொல்லச் சொன்னார். இரண்டு நாள் கழித்து, நயன்தாராவுக்கு போன் பண்ணி ஓகே சொன்னேன். படத்துல எனக்கு காமெடி கலந்த அழகான கேரக்டர். விஜய் சேதுபதி, சமந்தா காம்பினேஷனுடன் "காத்து வாக்கில் இரண்டு காதல்" என்ற படத்தில் நடித்தது அருமையான அனுபவம்.

    உழைப்பு, கிரியேட்டிவிட்டி, நேர நிர்வாகம் இந்த மூன்றும் இருந்தால் வெற்றி நிச்சயம். இது வரை அப்படித்தான் இருக்கிறேன்.

    ஆடிய காலும், பாடிய வாயும் நிற்காது என்பார்கள். அதேபோல்தான் எனது கலைப் பயணமும்...

    (முற்றும்)

    • குரு பூர்ணிமா என்பது வேத வியாசரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகும்.
    • வேதத்தைத் தொகுத்து நான்காகப் பிரித்து நமக்கெல்லாம் எளிமையாக வழங்கி, சனாதனதர்மத்தை வேரூன்றச் செய்த வேத வியாசர் நமக்கெல்லாம் ஆதி குருவாக விளங்குகிறார்.

    ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் ஒரு தனி சிறப்பு உண்டு. பவுர்ணமியில் எந்த மாதம் கிரிவலம் வருகிறோமோ அதற்கு ஏற்ப பலன் கிடைப்பதாக சொல்வார்கள். குறிப்பாக பவுர்ணமி தினத்தில் பித்ருக்கள் வழிபாடு, சித்தர்கள் வழிபாடு செய்வதற்கு மிகவும் ஏற்றது என்பார்கள். ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்ப பவுர்ணமி வழிபாடுகளில் மாறுபாடு உள்ளது.

    அந்த வகையில் தற்போதைய ஆனி மாத பவுர்ணமி குரு பவுர்ணமி என்றும், வியாசர் பவுர்ணமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பவுர்ணமியில் குருவை வழிபட வேண்டும் என்பது முக்கியமான நோக்கமாகும்.

    ஆதிகாலத்தில் ஆசிரமத்தில் இருக்கும் சன்னியாசிகள் தங்களது முதன்மையான குருவான வியாசரை வணங்கி பூஜை செய்வார்கள். எனவேதான் ஆனி மாத பவுர்ணமியை வியாசர் பூர்ணிமா என்றும் அழைக்கிறார்கள்.

    தமிழர்கள் கலாச்சாரத்தில் குரு அல்லது ஆசிரியர் கடவுளுக்கு நிகராக கருதப்படுகிறார். அந்த அடிப்படையிலும், ஆனி மாத பவுர்ணமி தினத்தை குரு பவுர்ணமி தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு குரு பவுர்ணமி ஞாயிற்றுக்கிழமை இரவு 7.45 மணிக்கு சதுர்த்தசி திதி முடிந்ததும் தொடங்குகிறது. நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5.49 மணி வரை பவுர்ணமி இருக்கிறது.

    எனவே இந்த ஆண்டுக்கான குரு பவுர்ணமி வழிபாடுகள் நாளை இரவே தொடங்கி விடுகிறது.

    குரு பூர்ணிமா என்பது வேத வியாசரின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகும். வியாசர் பண்டைய இந்தியாவில் மிகவும் மதிக்கப்படும் குருக்களில் ஒருவராக அறியப்படுகிறார். வேத வியாசர் நான்கு வேதங்களை இயற்றினார், மகா பாரத இதிகாசத்தை இயற்றினார், பல புராணங்கள் மற்றும் இந்து புனிதக் கதைகளின் பரந்த கலைக்களஞ்சியங்களுக்கு அடித்தளம் அமைத்தார் என்பதையும் நவீன ஆராய்ச்சி வெளிப்படுத்துகிறது.

    குரு பூர்ணிமா என்பது, சிவபெருமான், ஆதி குரு அல்லது அசல் குரு வடிவில், வேதங்களின் ஞானிகளான ஏழு முனிவர்களுக்கு கற்பித்த தேதியைக் குறிக்கிறது. யோகா சூத்திரங்களில், பிரணவ அல்லது ஓம் வடிவில் உள்ள கடவுள் யோகாவின் ஆதி குரு என்று அழைக்கப்படுகிறார். புத்தர் சாரநாத்தில் தனது முதல் பிரசங்கத்தை இந்த நாளில் வழங்கியதாக நம்பப்படுகிறது. இது இந்த புனித நாளின் சக்தியைக் காட்டுகிறது

    குரு பூர்ணிமாவுடன் தொடர்புடைய விஷ்ணு வழிபாட்டின் முக்கியத்துவம் உள்ளது. இந்த நாளில், விஷ்ணுவின் ஆயிரம் நாமங்கள் என்று அழைக்கப்படும் விஷ்ணு சத்ரநாமத்தை உச்சரிக்க வேண்டும். இந்த நல்ல நாளில், உங்களுடன் இணக்கமாக இருங்கள் மற்றும் உங்கள் ஆற்றலைச் செலுத்துங்கள்.

    அமைதியும் செழிப்பும் உங்களுக்கு தொலைதூரக் கனவாகத் தோன்றினால், தனிப்பயனாக்கப்பட்ட நேரடி விஷ்ணு பூஜையை முழு-ஆதார தீர்வாக பதிவு செய்யவும்.

    இந்த நாளில், அதிகாலையில் எழுந்து, குளித்தல், பூஜை போன்ற உங்கள் அன்றாட வழக்கமான கடமைகளை மேற்கொள்ளுங்கள்; மேலும், நீங்கள் சரியான ஆடை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    அதன் பிறகு, வியாசர் திருவுருவப் படத்திற்கு மலர்கள் மற்றும் நறுமண மாலையை வைத்து, பின்னர் உங்கள் சொந்த குருவிடம் ஆசீர்வாதம் பெறுங்கள்.

    உங்கள் குருவை ஒரு நாற்காலியில் அல்லது வேறு எங்காவது உட்கார வைத்து, பின்னர் அவருக்கு ஒரு மாலையை வழங்குங்கள்.

    அதன்பிறகு, உங்கள் குருவுக்கு வஸ்திரம், பழங்கள், மலர்கள், மாலைகள், தட்சிணை போன்றவற்றைப் பணமாக அளித்து, அவர்களின் ஆசிகளைப் பெறுங்கள்.

    உங்கள் ஜாதகத்தில் வலுவான வியாழன் இருந்தால் நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று வேத ஜோதிடம் வெளிப்படுத்துகிறது. இது உங்கள் ஜாதகத்தில் உள்ள நல்ல பலன்களான குரு அல்லது கடவுள் வியாழனை வலுப்படுத்த உதவும். உங்கள் ஜாதகத்தில் வியாழன் வலுவிழந்த ராசியான 9-ல் (அதாவது மகரம் ) இருந்தால், நீங்கள் தவறாமல் குரு யந்திரத்தை வழிபட வேண்டும்.

    உங்கள் ஜாதகத்தில் வியாழன்-ராகு, வியாழன்-கேது அல்லது வியாழன்-சனியின் சேர்க்கை இருந்தாலும் குரு யந்திரத்தை வழிபடுவது உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் ஜாதகத்தில் வியாழன் பலவீனமான வீட்டில் அதாவது 6, 8 அல்லது பன்னிரண்டாம் வீட்டில் இருந்தால், நீங்கள் ஆற்றல் மிக்க குரு யந்திரத்தை வணங்க வேண்டும் .

    தனியாக ஒரு மனிதன் சிந்தித்து, பரம்பொருளை உணர்ந்து, ஞானம் அடைவது கடினம். அதற்கு குருவின் துணை இன்றியமையாதது.

    குரு என்பவர் யார்?. "கு' என்றால் "இருள்'. "ரு' என்றால் "போக்குபவர்'. அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஞானமாகிய ஒளியைத் தருபவரே குரு ஆவார். தன் சீடர்களுக்கு ஆன்மிக முன்னேற்றம் ஏற்பட, யார் அவர்களுக்கு சாதனையைக் கற்றுத் தந்து, ஆன்மிக அனுபவங்களை அருள்கின்றாரோ அவரே குரு எனப்படுகிறார்.

    தன்னை நம்பி வருகின்றவர்கள் நல்ல வழியில் செல்ல வேண்டும் என்று எந்தவொரு குருவும் நினைப்பார். அவர்களிடமிருந்து எவ்விதப் பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் நல்வழிப்படுத்தி இறையின்பத்தை அனுபவிக்கச் செய்கின்ற பெருந்தன்மையை குருவைத் தவிர வேறு யாரிடமும் காணமுடியாது.

    குருவே தெய்வம். குருவே பிரம்மா. குருவே விஷ்ணு. குருவே மகேஸ்வரன். குருவே தேவர்கள். குருவே சாட்சாத் பரப் பிரம்மம். இத்தகைய பெருமை வாய்ந்த குருவைப் போற்றும் திருநாளான "குரு பூர்ணிமா' இவ்வருடம் நாளை (ஞாயிறு) இரவு தொடங்குகிறது.

    வேதத்தைத் தொகுத்து நான்காகப் பிரித்து நமக்கெல்லாம் எளிமையாக வழங்கி, சனாதனதர்மத்தை வேரூன்றச் செய்த வேத வியாசர் நமக்கெல்லாம் ஆதி குருவாக விளங்குகிறார்.

    அவர் வடக்கில் "நைமி சாரண்யம்' என்ற இடத்தில் அமர்ந்து வேதங்களைத் தொகுத்து புராணங்களை இயற்றியதாகக் கூறப்படுகிறது. அவரைப் போற்றும் வகையில் இந்த பவுர்ணமி "வியாச பவுர்ணமி' என்றும் அழைக்கப்படுகிறது.

    தென்னகத்தில், சென்னை மாகாணத்தில் மகரிஷி வியாசரும், அவரது சீடர்களும் வாழ்ந்த ஒரு பகுதி "வியாசர் பாடி' என்றழைக்கப்படு கிறது.

    இவ்வூரில் அமைந்துள்ள ஸ்ரீமரகதாம்பாள் சமேத ரவீஸ்வரர் திருக்கோயிலில் சிவன் சந்நிதிக்குப் பின்புறம் வியாசருக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு, வியாசர் புலித்தோல் மீது பத்மாசனத்தில் அமர்ந்து அருள் புரிகிறார். கல்வி, கேள்விகளில் தங்கள் குழந்தைகள் சிறந்து விளங்க இவரிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

    வியாச பவுர்ணமியன்று நாமும் வியாசரைத் துதித்து அவர் அருள் பெறுவதோடு நமக்கு குருவாய் அமைந்த அனைவரையும், அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை மனதில் தியா னித்து வேண்டிக் கொண்டால் அவர்கள் அருளால் நம் வாழ்வு சிறக்கும்.

    • தலை குளித்து முடித்தவுடன் துண்டை கொண்டு அழுத்தி அழுத்தி கூந்தலை உலர்த்தாமல், லேசாக உலர்த்துதல் போதுமானது.
    • வெள்ளரி விதையை பொடி செய்து அதை சிறிது பால், வெண்ணெய் அல்லது தயிரில் குழைத்து கண்களை சுற்றி தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வரலாம்.

    அழகியல் என்பது தோல், நகம், முடி போன்றவற்றை அழகுபடுத்தி ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் வழிமுறைகளை கூறும் ஒரு பிரிவாகும். நம் உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல் ஆகும். உடலுக்கு பாதுகாப்பு போர்வையாக அமைந்துள்ள இது பெரும்பாலும் சூரிய கதிர்கள், சுற்றுசூழல் மாசுபாடு போன்றவற்றாலும், போதுமான நீர் பருகாமையாலும், ஆரோக்கியமான உணவின்மையாலும் பாதிக்கப்படுகிறது. மேலும் வயது அதிகமாகும்போது, உடலில் உள்ள Collagen, Elastin, Hyaliusanic அமிலம் குறையத் தொடங்கும் அதன் காரணமாக தோல் வறட்சி, சுருக்கம் போன்ற முதுமைக்கான அடையாளங்கள் தொடங்கும். எனவே ஆண், பெண் இருவருக்கும் அனைத்து வயதிலும் அழகியல் இன்றியமையாதது. தோல், தலைமுடி, நகம் போன்றவற்றை இயற்கை முறையில் பராமரிப்பது குறித்து அறியலாம்.

    முதலில் தலைமுடி பராமரிப்பு குறித்து காணலாம். நல்ல அடர்த்தியான கருமை கூந்தல் பெறுவது நம் அனைவருக்கும் விருப்பமாகும். சிறு சிறு எளிய வழிமுறைகள் மூலம் நாம் அதை பெறலாம். தினம் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பொழுது முடியின் வேர்களில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவ்விடத்தில் ரத்த ஓட்டம் அதிகமாகி மயிர்க்கால்கள் உறுதிபெறும். தலைக்கு தேய்க்கும் எண்ணெய்யை நம் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். கூந்தல் ஆரோக்கியத்திற்கு பொண்ணாங்கண்ணி, கரிசாலை, அரைகீரை விதை, கற்றாழை, வெந்தயம், சின்னவெங்காயம், கறிவேப்பிலை, செம்பருத்தி போன்றவை பெரிதும் உதவும். மேற்கூறியவற்றுள் அவரவர் உடலுக்கு ஏற்ப பொருட்களை தேர்வு செய்து நல்லெண்ணெய்/தேங்காய் எண்ணெயிலிட்டு காய்ச்சி தினம் தேய்த்து வரலாம். உதாரணமாக பொண்ணாங்கண்ணி கீரையின் சாறு அரை பங்கிற்கு, ஒரு பங்கு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி கரகரப்பு பதத்தில் வடித்து தினம் தலையில் தேய்த்து வரலாம்.

    பொடுகு போன்ற பாதிப்புள்ளவர்கள் தேங்காய் எண்ணெயில் பொடுதலை சாறு சேர்த்து முன்கூறியவாறு காய்ச்சி தலைகுளிக்கும் முன்னரோ அல்லது தினமுமோ தேய்த்து வர பொடுகு நீங்கி முடி நன்கு வளரும் வீட்டில் செய்து பயன்படுத்த நேரமில்லாதவர்கள் பாரம்பரிய மருந்து கடைகளில் கிடைக்கும் நீலிபிரிங்காதி, வெட்பாலை தைலம் போன்றவற்றை வாங்கி பயன்படுத்தி வரலாம்.

    அடுத்ததாக தலைக்கு தேய்த்து முழுகும் போது ஷாம்புகளை தவிர்த்து சிகைக்காய் பயன்படுத்தலாம். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சிகைக்காயுடன் பூந்திக்கொட்டை, வெட்டிவேர், செம்பருத்தி, பன்னீர் ரோஜா, ஆவாரம்பூ, மகிழம்பூ, கார்போகரிசி, வெந்தயம், பச்சைபயிறு, உலர்ந்த எலுமிச்சை தோல், மருதாணி இலை, அவுரி இலை, வேப்பிலை, உலர் நெல்லி போன்றவற்றை சேர்த்து அரைத்து வைத்துக்கொள்ளலாம். தலை குளிக்கும் முன்னர் கஞ்சித்தண்ணீருடன் இந்த பொடியை கலந்து ஊறவைத்து தலையில் தேய்த்து முழுகலாம். தலைமுடி உதிர்வது குறைவதுடன் கருத்து நீண்டு வளர்ந்து குளிர்ச்சியையும் கொடுக்கும்.

    சித்த மருத்துவத்தில் பஞ்சகற்பம் தேய்த்து முழுக வலியுறுத்தப்படுகிறது. நெல்லிவித்து, வேப்பம்வித்து, கடுக்காய்த் தோல், வெண்மிளகு, கஸ்தூரி மஞ்சள் சேர்ந்த இக்கலவையை வீட்டிலேயே தயாரிக்கலாம் அல்லது கடைகளில் வாங்கி பயன்படுத்தலாம். இதை பசும்பாலில் சேர்த்து சூடு செய்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து ஊறவைத்து தலைமுழுக மூலச்சூடு குறைவதுடன், தலைமுடி உதிர்தல், பொடுகு போன்றவற்றை நீக்கி பார்வை திறனை மேம்படுத்தும்.

    தலை குளித்து முடித்தவுடன் துண்டை கொண்டு அழுத்தி அழுத்தி கூந்தலை உலர்த்தாமல், லேசாக உலர்த்துதல் போதுமானது. அழுத்தி தேய்ப்பதால் கூந்தல் உதிர்வதுடன் முனைகளும் பிளவுபடும். எனவே இது போன்ற எளிய வழிமுறைகளை பின்பற்றி கூந்தலை பேணி வரலாம்


    மேலும் நரைமுடி உள்ளவர்கள் ரசாயணம் கலந்த டை பயன்படுத்துவதை விட இயற்கை முறையில் தலைக்கு சாயம் பூசி கொள்ளலாம். மருதாணி இலையின் பொடியை முதல் நாள் இரவு டீ தூளுடன் லவங்கம் சேர்த்து காய்ச்சி வடிகட்டிய நீரில் கலந்த ஒரு இரும்பு பாத்திரத்தில் வைக்கவும். பின்பு மறுநாள் காலை இதை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளிக்கலாம். பின்பு மறுநாள் காலை மருதாணி இலையை போன்றே அவுரி இலை பொடியையும் வெது வெதுப்பான நீரில் தலைக்கு தேய்த்து 1.30 மணி நேரம் கழித்து குளிக்க முடி கருமை நிற சாயலை பெறும்.

    அடுத்தாக கண் பராமரிப்பு குறித்து காண்போம். பெரும்பாலானவர்களுக்கு கருவளையம் பெரும் பிரச்சினையாக உள்ளது. தூக்கமின்மை, அதிக வேலை பளு, மன அழுத்தம் போன்றவை கருவளையத்திற்கு காரணமாக அமைகிறது. இதை நீக்க வெள்ளரி விதையை பொடி செய்து அதை சிறிது பால், வெண்ணெய் அல்லது தயிரில் குழைத்து கண்களை சுற்றி தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வரலாம். அல்லது விளக்கெண்ணையுடன் கற்றாழை மடல் சேர்த்து காய்ச்சி கண்களை சுற்றி தேய்த்து வர கண் குளிர்ச்சி அடைவதுடன் கருவளையமும் குறைந்து நல்ல உறக்கம் ஏற்படும்.

    கண்களுக்கு மையிடுவது பெண்களின் அன்றாட வழக்கத்தில் ஒன்றாக மாறி உள்ளது. சித்த மருத்துவத்தில் நாட்களுக்கொருமுறை கண்களுக்கு மையிட வலியுறுத்தப்படுகிறது. இதனால் கண்களுக்கு அழகுடன் புத்துணர்ச்சியை கொடுக்கும். பழங்காலத்தில் கண்களுக்கு அஞ்சனக்கல் இழைத்து மை தீட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இன்றைய பெண்கள் வேதியல் பொருட்கள் நிறைந்த காஜல்களை பயன்படுத்துவதை தவிர்த்து கடைகளில் கிடைக்கும் சுர்மா பயன்படுத்தலாம். அஞ்சனக்கல்லில் இருந்து கிடைக்கும் இது கண்களை நோய் தொற்றில் அருந்து பாதுகாப்பதோடு கண்களுக்கு ஒளியும் தரும். இது கிடைக்காதவர்கள் வீட்டிலேயே மை தயாரித்து பயன்படுத்தலாம் மை தயாரிக்கும் முறை குறித்து அறியலாம்.

    கரிசாலை இலையை நீர் சேர்க்காமல் அரைத்து சாறு எடுக்க வேண்டும் பின்பு அச்சாற்றில் சுத்தமான பருத்தி துணியை தோய்த்து உலர்த்த வேண்டும். இது போல் ஏழு முறை செய்து உலர்த்தி நல்லெண்ணெய், பசு நெய், அல்லது விளக்கெண்ணெயில் தோய்த்து திரியாக்க வேண்டும். அகல் விளக்கில் இத்திரியை இட்டு விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் இட்டு காற்றில்லாத இருட்டு அறையில் தீபம் ஏற்றி, அதன் இரு புறமும் செங்கல் வைத்து மேலே செம்பு தட்டை கவிழ்க்க வேண்டும். செம்பு தட்டில் படியும் கரியை பத்திரப்படுத்தி பசுநெய் சேர்த்து கண்மையாக்க வேண்டும். இதை வாரம் இருமுறையோ அல்லது தினமுமோ செய்து வர கண் நோய் அண்டாமல் இருப்பதுடன் கண்ணின் அழகும் கூடும்.

    அடுத்தாக பருவ வயது ஆண்கள் மற்றும் பெண்களை அதிக கவலைக்கு ஆளாக்கும் முகப்பருக்களை நீக்கும் முறைகளை குறித்து காண்போம். சிலருக்கு முகத்தில் மட்டுமல்லாது முதுகிலும் ஏற்படும். உடல் வெப்பம், சுற்று சூழல் மாசுபாடு, ஹார்மோன் மாற்றம், துரித உணவு வகைகளை உட்கொள்ளுதல் போன்றவற்றால் இது ஏற்படுகிறது.

    அடிக்கடி முகத்தை குளிர்ந்த நீரில் அலம்பி வர வேண்டும் அடிக்கடி முகப்பரு ஏற்படுபவர்கள் சங்கை ஊற வைத்த நீரை கொண்டு முகம் கழுவி வரலாம். மேலும் வெளிபிரயோகமாக சங்கை பன்னீரிலோ, தாய்ப்பாலிலோ இழைத்து முகப்பருவின் மேல் பூசி வரலாம். அல்லது சங்கை மோலில் இழைத்து சிறிது கறிவேப்பிலை தூள் அதில் சேர்த்து முகப்பரு மேல் தினமும் பூசி அரைமணி நேரம் கழித்து முகம் கழுவி வர முகப்பரு மறையும்.

    நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் புனுகை முகப்பரு மேல் பூசி வர விரைவில் மறையும் அல்லது கடைகளில் கிடைக்கும் செஞ்சந்தனத்தை பசும்பாலில் சேர்த்து இழைத்து வாரம் இரு முறை முகத்தில் தேய்த்து வர பருவை சரிசெய்வதுடன் மறுபடி வராமலும் தடுக்கும். பசலைக்கீரையை கடைந்தும் பசுவெண்ணெய் சேர்த்தும் முகப்பரு மேல் பூசி வரலாம். கருஞ்சீரகம் மற்றும் சீரகம் இரண்டையும் பசும்பாலில் அரைத்து முகத்தில் அப்பி ஒரு மணி நேரம் ஊறவிட்டு குளிர்ந்த நீரில் முகம் கழுவி வரலாம். இதை தவிர காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் உணவில் சேர்க்க வேண்டும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    இதைத்தவிர சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய வெண்ணெய் மற்றும் சங்குபற்பம் போன்றவைகளை பயன்படுத்தியும் பயன்பெறலாம்.

    முகம் மற்றும் உடல் பொலிவு பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து காணலாம் பால் மற்றும் இளநீர் இயற்கை சுத்தப்படுத்தி பயன்படும், குளிர்ந்த பாலில் அல்லது இளநீரில் பஞ்சை தோய்த்து முகம் மற்றும் உடலில் தேய்த்து கழுவி வர சருமத்திற்கு ஈரப்பதம் கிடைப்பதுடன் பொலிவும் பெறும்.

    பாதாம் பருப்பை பாலில் ஊறவைத்து அரைத்து முகம் மற்றும் கழுத்தில் தடவி அரைமணி நேரம் கழித்து கழுவி வர தோல் மிருதுவாகி பளபளப்பாகும். உடலுக்கு வெட்டிவேர், விலாமிச்சு வேர், கோரைக்கிழங்கு, கிச்சிலிகிழங்கு, சந்தனம், பாசிப்பயிறு, கார்போகரிசி, கஸ்தூரி மஞ்சள், ரோஜா இதழ்கள், ஆவாரம் பூ போன்றவற்றை சேர்த்து பொடி செய்து நீரில்/பன்னீரில் கலந்து உடல் முழுவதும் தேய்த்து முழுகி வர, உடல் புத்துணர்வு பெறுவதுடன் பொலிவு பெறும். நாள் கணக்கில் பயன்படுத்தி வர உடலில் உள்ள தழும்புகளும் மறையும். தோல் சுருக்கம் நீங்கும்.

    முகத்தில் உள்ள மங்கு மற்றும் பரு தழும்புகள் நீங்க ஜாதிக்காய், சந்தனம், வேப்பங்கொழுந்து முதலியவற்றை பால் சேர்த்து அரைத்து கருப்பு திட்டுகள்/தழும்புகள் இருக்கும் இடத்தில் தடவி வர நாளடையில் மாறும்.

    கழுத்தை சுற்றியுள்ள கருப்பு தழும்புகள் நீங்க பன்னீருடன் பச்சைபயிறு மாவு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து கழுவி வர சிறிது சிறிதாக மாறும். மேலும் கை, கால்களில் பூசி வர வெயிலினால் ஏற்படும் தடயகளையும் அகற்றும் வெளியில் செல்லும் பொழுது இயற்கையான சன்ஸ் கிரீன்களை பயன்படுத்தலாம். சித்த மருந்து கடைகளில் கிடைக்கும் குங்கிலிய வெண்ணெய், குங்குமாதி தைலம் போன்றவை சூரியனின் வெப்பகதிர்களில் இருந்து தோலை பாதுகாத்து, தோல் நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

    உடல் பொன்னிறம் பெற்று நரை, திரை, மூப்பில்லாமல் வாழ சித்தமருத்துவ நூல்கள் கற்ப மருந்துகளை எடுக்க பரிந்துரைக்கிறது. நமக்கு எளிதாக கிடைக்கும் பொன்னாங்கண்ணி கீரை, அமுக்கரா கிழங்கு, இஞ்சி, நெல்லிக்கனி போன்றவை உடலை என்றும் இளமையுடன் இருக்கச்செய்வதாக தேரன்யமக வெண்பா கூறுகின்றது.

    வயலில் செழிப்பாக வளர்ந்த பொன்னாங்கண்ணி கீரையின் இலைகளை நெய்விட்டு வதக்கி, உப்பு, மிளகு சேர்த்து புளி நீக்கி உண்டு வர உடல் அழகு பெறும். தேனில் தோல் நீக்கிய இஞ்சியை கீற்றுகளாக்கி போட்டு ஊறவைத்து தினம் உண்டு வர நரைதிரை மூப்பு மாறும். கரிசாலைக்கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து இளநீரில் ஒரு மாதம், தேனில் ஒரு மாதம் உட்கொள்ள நரை மற்றும் தோல் சுருக்கம் மாறும். மேலும் அமுக்கிராக்கிழங்கு பொடியை நெய் சேர்த்து உண்டு வர அழகு ஏற்படுவதுடன் ஆயுளும் நீளும் என கூறப்பட்டுள்ளது.

    அடுத்தது நக பராமரிப்பு குறித்து அறியலாம். வாரம் இருமுறை நகங்களில் பாதாம் ஆயில் அல்லது ஆலிவ் ஆயில் தேய்த்து மசாஜ் செய்து ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறு கலந்து நீரில் கைகளை கழுவி வரலாம் இதிலுள்ள வைட்டமின் இ மற்றும் வைட்டமின் சி, கொலாஜென் உற்பத்தியை தூண்டி நகங்களின் அடிபாகம் வரை வறட்சி, வெடிப்பு, கிருமி தொற்று போன்றவற்றை சரி செய்யும் எலுமிச்சை சாறில் சிறது தேன் மற்றும் சிறு துண்டு வாழைப்பழம் சேர்த்து நன்றாக அரைத்து நகங்களின் மேல் பூசி சிறிது நேரம் கழித்து கழுவி வரலாம். இது நகங்களை மிருதுவாக்கி, மாசுக்களை நீக்கி பளபளப்பாக்கும்.

    ஆரோக்கியமான தலைமுடி, சருமம் மற்றும் நகங்களே ஆரோக்கியமான உடலை பிரதிபலிக்கும். எனவே இவைகளை இரசாயண பொருட்கள் நிறைந்த Cleanser, Toper, moisturize, Sun Screen கொண்டு பராமரிப்பதை விட இயற்கை முறையில் பராமரிப்பது சிறப்பாகும். அன்றாடம் நமக்கு கிடைக்கும் பொருட்களை கொண்டு நமது அழகை பராமரிப்போம். இயற்கையோடு இயந்த அழகிய வாழ்வை பெறுவோம்.

    • திலகவதியார் துறவு ஏற்று ஈசனின் கழல்களை வணங்கி, திருவதிகை திருக்கோவிலில் உழவாரப் பணிகள் செய்து வந்தார்.
    • சிவபெருமான் திருவருளால் பதிகம் பாட வயிற்று வலி நீங்கியது.

    "நெஞ்சம் உனக்கே இடமாக வைத்தேன்

    நினையாதொரு போதும் இருந்தறியேன்."

    -திருநாவுக்கரசர்

    இறைவனாலேயே நாவுக்கு அரசர் என்றும் வயதின் காரணமாக அடியார்களால் அப்பர் என்று போற்றப்பட்ட பெருமைக்கு உரியவர் திருநாவுக்கரசு பெருமான்.

    வாழ்வின் தொடக்கத்தில் இருந்து துன்பங்களையே அனுபவித்தாலும், இறைவனையே நம்பி அனைத்தையும் தாண்டி வருகிறார். இவரின் வாழ்வு நமக்கு ஒரு அனுபவப் பாடம். வாழ்வின் பல உண்மைகளை, வாழ வேண்டிய முறைகளை நமக்கு இவரது பாடல்கள் போதிக்கிறது.

    ஏழாம் நூற்றாண்டில் சமணமும், பவுத்தமும் மேலோங்கி இருந்த காலம். பல்லவர்களும், பாண்டியர்களும் சமண சமயத்தைச் சார்ந்து வடமொழிக்கு முக்கியத்துவம் அளித்து, தமிழ் மொழியும், சைவமும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இருந்த காலச் சூழலில்தான், நாவுக்கரசர் பிறக்கிறார்.

    திருவாமூர் என்ற தலத்தில் புகழனார், மாதினியார் என்ற அடியவர்களின் மகனாகப் பிறந்த அப்பர் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்தவர். அவரின் இயற்பெயர் மருள் நீக்கியார். அவரின் தமக்கை திலகவதியார் கலிப்பகையார் என்பவரை மணக்க இருந்த நிலையில், கலிப்பகையார் போர்க்களத்தில் வீர மரணம் அடைகிறார். திலகவதியார் துறவு ஏற்று ஈசனின் கழல்களை வணங்கி, திருவதிகை திருக்கோவிலில் உழவாரப் பணிகள் செய்து வந்தார்.

    ஆனால் திருநாவுக்கரசர், சமண மதத்தில் சேர்ந்து அந்த நூல்களைப் பயின்று பாடலிபுர சமண மடத்தின் தலைவராக இருந்தார். தன் அறிவாற்றலால் சமண நூல்கள் அனைத்தையும் கற்று எல்லையற்ற திறமையுடன் இருந்த அவருக்கு சமண மடத்தில் தருமசேனர் என்று பெயர்.

    "நில்லாத உலகியல் கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன்

    என்று அறத் துறந்து சமயங்கள் ஆனவற்றின் நல்லாறு

    தெரிந்து உணர நம்பர் அருளாமையினால் கொல்லாமை

    மறைந்து உறையும் அமண் சமயம் குறுகுவார்." என்கிறார் சேக்கிழார்.

    எது நல்லது என்று அறியாமல் சமண சமயத்தில் இருந்த அப்பர் பெருமானை, ஈசன் ஆட்கொண்டார் என்று நயமாகக் குறிப்பிடுகிறார் சேக்கிழார்.

    திலகவதி என்ற அவர் தமக்கையார் இறைவனிடம் வேண்டி நாவுக்கரசரை சைவ சமயத்துக்கு வரவழைக்க வேண்டினார். இறைவன் அவரது கனவில் தோன்றி "மருள் நீக்கியார் முற்பிறவியில் எனை அடைய முனிவனாகத் தவம் செய்தார். எனவே இப்போது அவருக்கு நான் சூலை நோய் தந்து ஆட்கொள்வேன்" என்று உரைக்கிறார்.

    எனவே நாவுக்கரசருக்கு கொடிய சூலை நோய் ஏற்பட்டது. வலியில் துன்புற்று, துடி துடித்தார். சமண சமய மந்திரங்கள், மருந்துகள் எந்தப் பலனும் தரவில்லை. தன் தமக்கையை நாடி ஓடி வந்தார்.

    தமக்கை சிவபிரானின் கழல்களை வணங்கி, ஈசனின் விபூதியை நமசிவாய என்று ஓதி தம்பிக்கு அளித்தார். அதை உடல் முழுவதும் பூசி, வாயில் இட்டு விழுங்கி, திருவதிகை கோவிலில் இறைவன் முன் நின்று, "கூற்றாயினவாறு.." என்ற பதிகம் பாட சூலை நோய் மறைந்தது. சிவபெருமான் திருவருளால் பதிகம் பாட வயிற்று வலி நீங்கியது.

    "கூற்றாயினவாறு விலக்ககிலீர் கொடுமை

    பல செய்தன நான் அறியேன்- ஈற்றாய் அடிக்கே

    இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாது என் வயிற்றின் அகம்படியே

    குடரோடு துடக்கி முடக்கியிட- ஆற்றேன் அடியேன் "

    அதிகைக் கெடில வீரட்டானத்துறை அம்மானே, உடலோடு ஒட்டியுள்ள உயிரை எமன் கூறு செய்கிறான். இந்த வலியைப் போக்காமல் இருக்கின்றீர்களே. இப்பிறப்பில் எனக்குத் தெரிந்து பல கொடுஞ்செயல்கள் செய்ததாக நான் அறியவில்லை. எனினும் சூலை நோய் தன்னைப் பற்றியது ஏன்? என்று இறைவனைக் கெஞ்சுகிறார் அப்பர்.

    நாம் எல்லோருமே இறைவனிடம் ஏன் என்ற கேள்வியைத்தான் முன் வைக்கிறோம். ஆனால் தன்னிடம் ஈர்க்கவே இறைவன் துன்பங்களைத் தருகிறான். அந்தத் துயரில் இருந்து நம்மை அவனே மீட்பான் என்று நம்பிக்கை வேண்டும். தான் பாடிய மற்ற அனைத்துப் பதிகங்களிலும், இறைவனின் கழல்களைப் பற்றினால் என்றும் துயர் இல்லை என்றுதான் கூறுகிறார் அப்பர் பெருமான்.

    இந்தச் சூலை நோயை நீக்கி அருளினால் உன் அடியை இரவும், பகலும் விலகாமல் வணங்குவேன், ஈசனையே அல்லும் பகலும் நினைத்துருகுவேன் என்று கூறும் அவர் என் நெஞ்சம் உனக்கே இடமாக உள்ளது என்கிறார்.

    "நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன். நினையாதொரு

    போதும் இருந்தறியேன்- வஞ்சம் இது வொப்பது கண்டறியேன்

    வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை

    நலிவதனை நணுகாமல் துறந்து கரந்தும் இடீர்

    அஞ்சேலும் என்னீர் அதிகக்கெடில வீரட்டானத்துறை அம்மானே"

    என்று கெஞ்சுகிறார்.

    நம் கர்ம வினைகளே நோய்களுக்குக் காரணமாகிறது. அந்த வினையைத் தீர்க்க இறைவனால் மட்டுமே முடியும்.

    வினையைத் தீர்க்காமல் என்னைச் சூலை நோயில் வருத்துவதன் காரணம் என்ன என்று புலம்புகிறார்.

    "சுடுகின்றது சூலை நோய்" எனும் அப்பர்,

    "பணிந்தாரன பாவங்கள் பாற்ற வல்லீர்" எனும் அவர், "முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்தென்னை முடக்கியிடப் பின்னை அடியேன் உமக்கே ஆளும் பட்டேன்." என்பதன் மூலம் முன்னர் தான் சமண சமயத்தில் இணைந்து இறைவனை வழிபடாமல் இருந்த பாவமே இந்தச் சூலை நோய்க்குக் காரணம் என்றும் கூறுகிறார்.

    "சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் தமிழோடிசை

    பாடல் அறிந்தறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்தறியேன்"

    என்கிற நாவுக்கரசர், தன் முன் பிறவியில் கயிலையில் முனிவனாக ஈசனை நோக்கித் தவம் இருந்தார். அப்போது பத்து தலை ராவணன் கைலாய மலையை ஆணவத்துடன் தூக்க முயன்று மலையின் கீழ் நசுக்குண்டு வேதனைப் பட்டபோது, முனிவரே, ஈசனை சாமகானம் பாடி வழிபட்டால் துன்பம் நீங்கும் என்று இடரிலிருந்து நீங்க வழி காட்டியதாகவும், அதற்குத் தண்டனையாகத்தான் இந்தப் பிறவியில் சூலை நோய் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

    சமண சமயமே உயர்ந்தது என்று கூறி, சைவ சமயத்தை இழிவாகப் பேசியதற்கு தண்டனையே இந்தச் சூலை நோய் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

    ஆனால் ஈசன் கருணை வடிவானவன். தண்டனை கொடுப்பவன் அல்ல. தன்னிடம் ஈர்த்துக் கொள்பவன். எல்லா சமயங்களும் கூறும் அன்பு வடிவான பரம்பொருள் அவன் மட்டுமே. அவரிடம் நேரிடையாக உரையாடுகிறார் அப்பர் பெருமான்.

    "சலித்தால் ஒருவர் துணை யாருமில்லைச்

    சங்க வெண்குழைக் காதுடை எம்பெரு மான்" என்று ஈசனையே சரண் அடைகிறார்.

    மனித வாழ்க்கையின் துன்பங்கள், பிணி இவைகள் எல்லாம் இறைவன் கருணையால் மட்டுமே அகலும், இறைவன் அருளினால் மட்டுமே நம்மை அணுகாமல் காக்க முடியும். எனவேதான் நாவுக்கரசுப் பெருமான்.

    "என்போலிகள் உம்மையினித் தெளியார்

    அடியார் படுவதிதுவே யாகில் அன்பே அமையும் அதிகைக்

    கெடில வீரட்டானத்துறை அம்மானே"- என்று உறுதியாகக் கூறுகிறார்.

    யானையின் தோலைப் போர்த்தவன், சுடுகாட்டை இடமாகக் கொண்டு நடம் ஆடும் ஈசனே, கைலாய மலையை பெயர்த்து எடுக்க முயன்ற ராவணனின் ஆணவத்தை அழித்தவன். எம்பெருமானின் லீலைகளை நினைத்துப் பார்த்து, உன்னை விழுந்தும், புரண்டும், எழுந்தும் வணங்குகிறேன்.. என் சூலை நோயைத் தீர்த்தருள் என்கிறார்.

    "ஆர்த்தான் அரக்கன்றனை மால்வரைக் கீழ் அடர்த்திட்டருள்

    செய்த அது கருதாய் வேர்த்தும், புரண்டும் விழுந்தும்

    எழுந்தால் என் வேதனை யான விலக்கியிடாய்"- என்று மனமுருகி வேண்ட இறைவன் அவரின் சூலை நோயைத் தீர்த்தருள்கின்றான்.

    இப்பாடல் வேண்டுதல் விண்ணப்பம் போல் அமைந்துள்ளது. என் நோய் தீர்த்தருள உன்னால் முடியும் எனும்போது ஏன் தாமதம். எமனைக் காலால் உதைத்து, மார்க்கண்டேயனைக் காப்பாற்றிய சிவபெருமான்தான் என்னையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறார்.

    உலகின் பரம்பொருள் நீதானே. நான் செய்த பிழை என்னவென்று தெரியவில்லை. ஆனால் உன் கழல்கலையே இனிப் பற்றி வேண்டுவேன் என்பதன் மூலம் இனி அவரை விட்டு வேறு பக்கம் செல்ல மாட்டேன் என்பதைத் தன் தமக்கைக்கும் உரைக்கிறார்.

    அதேபோல் இறைவனையே சதம் என்று வாழ்ந்து அவரிடம் ஐக்கியமாகிறார் அப்பர் பெருமான். வேதங்கள் கடவுள் ஒருவரே என்றுதான் உணர்த்துகின்றன. எந்த முறையில் வழிபட்டாலும் அது அந்த ஜோதி வடிவையே சென்று சேர்கின்றன.

    மனிதனை அவன் மன விசாரங்கலில் இருந்து விடுவித்து உயர்ந்த நெறிக்கு அழைத்துச் செல்வதே பக்தி. அவன் முயற்சியினால் இதில் வெற்றி அடைவதோடு உயர்ந்த ஞானத்தையும் அடைய முடியும்.

    நம் காரியங்கள் அனைத்தும், ஈஸ்வரனால் மட்டுமே நடத்தப் படுகின்றன. அனைத்தும் ஈஸ்வர சங்கல்பம். பக்தியினால் அவனிடம் அனைத்தையும் கேட்டுப் பெற முடியும். ஈசனே பக்தி நெறியில் இருந்து நம்மை முக்தி நெறிக்கு அழைத்துச் செல்வார். பக்தியுடன் அவனை நினைந்து உருகினால் நம் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுதலை அடையலாம்.

    அப்படி பக்தியோடு இறைவனைப் பாடி பலரின் நோய்களைத் தீர்த்தும், இறந்த சிறுவனை மீட்டும், பல அற்புதங்களைப் புரிகிறது அவரின் பதிகங்கள். மூவர் பாடிய தேவாரப் பதிகங்களில் இதுதான் காலத்தால் முந்தியது. இதைப் பாடுவதன் மூலம் பல வியாதிகள் குணமாகும். தீராத வயிற்று வலி குணமாகும் என்பதுடன், இறைவனின் அருளையும் பெற்றுத் தரும் பதிகம்.

    இதைப் பிறருக்காகவும் நாம் 5 எழுத்தை ஓதி, பதிகத்தைப் பாடினால் நிச்சயம் வயிற்றுவலி குணமாகிறது என்பது கண்கூடு.

    தொடர்புக்கு-gaprabha1963@gmail.com

    • இனிப்பு சுவையும் விறுவிறுப்பு தன்மையும் கொண்ட அன்னாசி பூ வெப்ப வீரியத்தை உடையது என்கிறது சித்த மருத்துவம்.
    • பிரியாணி இலை என்ற மூலிகைத் தாவரத்தின் பிறப்பிடம் தெற்கு ஆசியா.

    உணவில் முதன் முதலில் அழகிற்காக பயன்படுத்தப்பட்ட அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு 'அன்னாசி பூ' தான். ஆனால், இது தன்னுள் பலப்பல மருத்துவ குணங்களை உள்ளடக்கியுள்ளது. இது பார்ப்பதற்கு நட்சத்திர போன்ற வடிவம் கொண்டு இருப்பதாலும், இதன் மருத்துவத் தன்மையானது மற்றொரு அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கான சோம்பின் குணத்தை ஒத்து இருப்பதால் இதனை 'நட்சத்திர சோம்பு' என்றும் அழைப்பதுண்டு.

    அன்னாசி பூ எனும் மூலிகைத் தாவரமானது சீனா மற்றும் வியட்நாம் நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கும் மேலாக அந்நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருவதாக வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீன மருத்துவத்தில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளின் உணவுப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும் உபயோகப்படுத்தப்படுகின்றது.

    ஜப்பானியர்களால் கோவில் மற்றும் கல்லறைகளில் அன்னாசி பூ மூலிகைத் தாவரம் மணத்திற்காக வளர்க்கப்பட்டதாகவும் தெரிகிறது. பதினேழாம் நூற்றாண்டில், இந்த மூலிகையானது ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    அதன் பின்னர் உணவுத் துறையில் ஜாம் தயாரிப்பிலும், உணவுப் பொருட்கள் நறுமணத்திலும் பயன்படுத்தப்பட்டது. கூடுதலாக சோம்பின் சுவை கொண்ட மதுபானங்கள் தயாரிப்பில் அன்னாசி பூ பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிகிறது. பாரசீக மற்றும் இந்திய முகலாய பிரியாணி உணவுகளில் அதிகம் அன்னாசி பூ பயன்படுத்தப்படுவதாக உலக அளவில் கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    அன்னாசி பூவானது பல்வேறு நாடுகளில் தோல் சார்ந்த அழற்சி (வீக்கம்), மூட்டு வலி, ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி ஆகிய நோய்நிலைகளில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

    அன்னாசி பூவில் சர்க்கரைச் சத்தும், புரதச்சத்தும், கொழுப்புச் சத்தும், நார்சத்தும் இருப்பதாக நவீன அறிவியல் தெரிவிக்கின்றது. அத்துடன் கூடுதலாக நோய் எதிர்ப்புச்சக்தி தரும் விட்டமின்களாக அறியப்படும் வைட்டமின்- 'ஏ' மற்றும் வைட்டமின்- 'சி' ஆகியவற்றையும் கொண்டுள்ளது. மேலும் உடலுக்கு நன்மை பயக்கும் சோடியம், கால்சியம், இரும்புச் சத்து, செம்புச் சத்து, துத்தநாகச் சத்து, மக்னீசியம், பொட்டாசியம் ஆகிய தாது உப்புகளின் ஆதாரமாகவும் உள்ளது. ஆக, நாம் உண்ணும் பிரியாணியில் அன்னாசி பூவை நம் முன்னோர்கள் ருசிக்காக மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்திற்கும் திட்டமிட்டு சேர்த்துள்ளது இதில் வெளிப்படை.

    அன்னாசி பூவின் நறுமணத்திற்கு காரணம் அதில் உள்ள அத்தியாவசிய எண்ணெய் தான். புதிய பழங்களில் 2.5 - 3.5 சதவீதம் நறுமண எண்ணெயும் மற்றும் உலர்ந்த அன்னாசி பூவில் 8-9 சதவீதம் நறுமண எண்ணெயும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தியாவசிய சத்துகளைத் தவிர லிக்னன்கள், இயற்கை நிறமிகள் (பிளாவனாய்டுகள்), பால்மிடிக் அமிலம் போன்றவையும் அன்னாசி பூவில் உள்ளன.

    இனிப்பு சுவையும் விறுவிறுப்பு தன்மையும் கொண்ட அன்னாசி பூ வெப்ப வீரியத்தை உடையது என்கிறது சித்த மருத்துவம். அன்னாசி பூ என்பது அந்த தாவரத்தின் நட்சத்திர வடிவ மருத்துவ குணமுடைய பகுதி. இதனால் உணவு செரியாமை, மந்தம், புளியேப்பம் ஆகிய குறிகுணங்கள் நீங்கும் என்றும் சித்த மருத்துவம் கூறுகின்றது.

    அன்னாசி பூவைப் பொடித்து அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை எடுத்துக்கொள்ள அசீரண கோளாறுகளுக்கு நற்பலன் தரும். அவ்வப்போது எடுத்துக்கொள்ள நோய் எதிர்ப்பாற்றலைக் கூட்டும். கிருமிகளைக் கொல்லும். சுவாச மண்டலத்தில் தங்கிய கோழையை அகற்றும் தன்மையும் இதற்குண்டு.

    உணவில் அன்னாசி பூவை சேர்ப்பது குடல் சார்ந்த உபாதைகளுக்கு மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு நன்மைகளை அள்ளித்தருவதாக உள்ளது. சுவாச மண்டலம் சார்ந்த அடைப்புக்கு அன்னாசி பூவினை பொடியாக்கி உள்ளிழுக்கும் பழக்கம் பாரம்பரியமாக பல நாடுகளில் இருந்துள்ளது.

    குடல்வாயு மற்றும் வலிக்கு தீர்வாக அன்னாசிபூ தேநீர் பயன்படுத்தப்படுகிறது. உணவுக்குப் பிறகு அன்னாசி பூவினை மென்று சாப்பிட்டால் செரிமானத்தை மேம்படுத்தும். வயிறு உப்பிசம், அடிக்கடி ஏப்பம் ஆகிய வயிறு தொடர்பான நோய்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும், இது மூச்சுக்குழாய் அழற்சி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது. மூலிகை மருத்துவ தேநீர், மற்றும் இருமல் மருந்து கலவைகளுக்கு அன்னாசி பூ ஒரு பொதுவான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது பாரம்பரியமாக வாத நோய்க்கு சிகிச்சையளிக்கப் பயன்படுவதாகவும் குறிப்புகள் உள்ளன. இதனைக் கொண்டு செய்யப்படும் தேநீர், இதயம், மூளை, கல்லீரல் மற்றும் நுரையீரல் போன்ற உடல் உறுப்புகள் மற்றும் சுரப்பிகளை பலப்படுத்தி பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடியதாக உள்ளது.

    அன்னாசி பூவானது புற்றுநோய் தடுப்பு மற்றும் வைரஸ் தடுப்பு செய்கைகளை உடையது குறிப்பிடத்தக்கது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது டிரான்ஸ்- அனீதோல் என்கிற வேதிப்பொருள் தான். இதன் நறுமண எண்ணெய் ரத்தத்தில் உள்ள தட்டணுக்கள் ஒன்று கூடுவதை தடுப்பதாக உள்ளதால், மாரடைப்பு வரவிடாமல் தடுக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பது கூடுதல் சிறப்பு.

    கடந்த நூற்றாண்டில் பல மனித உயிர்களை கொன்று குவித்த தொற்றுக்கிருமிக்கு இந்த அன்னாசிப்பூ தான் தீர்வு காண உதவியது என்கிற வரலாறு பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. 1918-ம் ஆண்டில் பரவிய ஸ்பானிஸ் ப்ளூ எனும் இன்புளுயன்சா காய்ச்சல், வைரஸ் கிருமிகளால் பரவுவது பலரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அத்தகைய புளூ காய்ச்சலுக்கு மருந்து தயாரித்தலில் முன்னோடி வேதிமூலக்கூறாக நின்றது அன்னாசி பூவில் இருந்து பிரிக்கப்பட்ட வேதிப்பொருள் தான்.

    அன்னாசி பூவில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட 'ஷிகிமிக் அமிலம்' எனும் வேதி மூலக்கூறு தான் 'டாமிபுளூ' என்ற புளூ வைரஸை கொல்லும் இக்கால மாத்திரைக்கு அடிப்படை. நாம் உணவில் சேர்க்கும் அன்னாசி பூவிற்கு கிருமிக் கொல்லி தன்மை உண்டென்பது, இதில் உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறியக்கிடக்கின்றது.

    அன்னாசி பூவின் மணத்திற்கும் மருத்துவ குணத்திற்கும் காரணம் அதில் உள்ள மற்றொரு வேதிப்பொருள் அனீதோல் என்கிறது நவீன அறிவியல். இந்த அனீதோல் சதகுப்பை எனும் மற்றொரு மூலிகையில் முதன்மை சரக்காக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த அனீதோல் வேதிக்கூறு தான் அன்னாசிபூவின் பல்வேறு கிருமிகளைக் கொல்லும் தன்மைக்கு முக்கிய காரணகர்த்தா.

    மேலும், அன்னாசி பூவானது ஹெர்பஸ் வைரஸ்-1 மற்றும் 2 ஆகியவற்றின் கட்டமைப்பை சிதைப்பதன் மூலம் வைரஸ் கிருமியின் வீரியத்தைக் குறைப்பதாக ஆய்வுக்கூட சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கூடுதல் சிறப்பு என்னவெனில், மேற்கூறிய வைரஸ்களுக்கு பயன்படுத்தப்படும் 'ஏசைக்ளோவிர்' மருந்தைக் காட்டிலும் நல்ல பலன் தருவதாக ஆய்வு முடிவுகள் கூறுவது தான்.

    அன்னாசி பூவிற்கு துவர்ப்பி செய்கையும், வீக்கத்தைக் குறைக்கும் செய்கையும், பாக்டீரியாக் கிருமிகளை கொல்லும் செய்கையும் இருப்பதால் அதனைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாய் கொப்பளிக்கும் திரவங்கள் சந்தையில் கிடைக்கும் மற்றவற்றை விட, நல்ல பலன் தருவதாக சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மூலிகை சார்ந்த பல் பொடிகளிலும், பற்பசைகளிலும் அன்னாசி பூ முக்கிய இடம் பிடிப்பது இதனால் தான்.

     அடுத்ததாக பிரியாணி என்கிற மனம் மயக்கும் மணம் உடைய உணவில், பயன்படுத்தப்படும் மற்றொரு கடைச்சரக்கு 'பிரியாணி இலைகள்' தான். 'பே இலைகள்' என்று அறியப்படும் இவை, பிரியாணி உணவில் மட்டும் முக்கியத்துவம் பெறுவதால் 'பிரியாணி இலைகள்' என்ற பெயரையே பெற்றதாக அறியப்படுகின்றது.

    பிரியாணி இலை என்ற மூலிகைத் தாவரத்தின் பிறப்பிடம் தெற்கு ஆசியா. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவியதாக தெரிகிறது. பிரியாணி இலைகள் நம் நாட்டில் மட்டுமல்லாது, பாரம்பரியமாக பல நாடுகளிலும் உணவில் அதிகம் பயன்படுத்தப்படும் சிறப்புடையது.

    பிரியாணி இலைகள் கசப்பு சுவையுடையன. இதில் பிளவனாய்டுகள், டானின்கள், யூஜெனால், சிட்ரிக் அமிலம், ஸ்டீராய்டுகள், அல்கலாய்டுகள் போன்ற மருத்துவ குணம் தரும் வேதிப்பொருட்கள் பல உள்ளன. மேலும் இவற்றில் இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும், சிறிய அளவு பொட்டாசியம் சத்தும், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவையும் உள்ளது. யூஜெனால் மற்றும் எலிமிஸின் ஆகிய வேதிப்பொருட்கள் அதன் தனித்துவ மணத்திற்கு காரணம் என்கிறது அறிவியல்.

    பாரம்பரியமாக பிரியாணி இலையானது வாதநோய், சுளுக்கு, செரியாமை போன்ற பல நோய்களுக்கு நன்மை அளிக்கும் மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. நீரிழிவு மற்றும் ஒற்றைத் தலைவலிக்கு சிகிச்சையளிக்க இந்த இலைகளை பயன்படுத்தப்படலாம் என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    பிரியாணி இலைகள் இருமல், சளி, காய்ச்சல், மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு ஆகிய நோய்நிலைகளில் உதவுவதாகவும் உள்ளது. இது ரத்தத்தில் கொழுப்பின் அளவைக் குறைப்பதாகவும், மன அழுத்தத்தைப் போக்குவதாகவும் இருக்கின்றது. மேலும் இலைகள் அதிக இயற்கை நிறமிகளைக் கொண்டுள்ளதால், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் உதவக்கூடும் என்கின்றன ஆய்வுகள். வைரஸ் போன்ற கிருமிகளைக் கொல்லும் தன்மையும், நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் தன்மையும் கூட இதற்கு உள்ளது.

    அமெரிக்காவில் பே இலைகளை கொண்டு சர்க்கரை நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், இதனை பொடித்து 1 கிராம் முதல் 3 கிராம் வரை எடுத்துக்கொள்ள சர்க்கரை அளவு கணிசமாக குறைவதை முதல் கட்ட ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அத்துடன், இரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து, நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. இதன் மூலம் இலைகள், இதயத்திற்கு நன்மை பயப்பதாக உள்ளது. இதன் இலைகள் மூட்டு வீக்கத்தைக் குறைப்பதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகளும் தெரிவிக்கின்றன.

    நட்சத்திர வடிவத்தில் இளம் கருஞ்சிவப்பு நிறத்திலான அன்னாசி பூ நாம் அதிகம் பயன்படுத்த மறந்த அஞ்சறைப்பெட்டி கடைச்சரக்கு. பிரியாணி இலைகளும் நம்முடன் பயணித்து வரும், நமக்கு பழக்கப்பட்ட மிகச்சிறந்த நலமூட்டி கடைச்சரக்கு. பல்வேறு மருத்துவ குணமிக்க இவற்றை சமையலில் பிரியாணி என்கிற ஒற்றை உணவுவகையில் மட்டும் பயன்படுத்தாமல் அன்றாடம் கையாள துவங்கினால் ஆரோக்கியம் கைகூடும். இவைகள் நம் நலவாழ்விற்கு கிடைத்த நற்பேறுகள்.

    தொடர்புக்கு:drthillai.mdsiddha@gmail.com

    • பங்குனி ஏகாதசி திருவோணத்தன்று திருமால் கிழப்பிராமணன் வேடங் கொண்டு வந்து மகரிஷியிடம் மகளை மணம் முடித்துத்தரக் கேட்டார்.
    • 108 திவ்ய தேசங்களில் திருமால் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம் கண்டருளுகிறார்

    ஒரு சமயம் துளசி திருமாலிடம் லட்சுமியை மார்பில் தாங்கியுள்ளது போன்ற சிறப்பு தனக்கும் வேண்டுமெனக் கடுந்தவம் புரிந்தாள். லட்சுமி மீளவும் பூவுலகு சென்று பூமிதேவி என்ற பெயருடன் காவிரிக்கரையில் தோன்றித் தவம் புரிந்து பலன் அடைய இருக்கிறாள். நீ சென்று துளசிச்செடியாக அங்கே தோன்ற , உன் மடியில் லட்சுமி அவதரிப்பாள். லட்சுமி அவதரிப்பதற்கு நீ ஆதாரமாக இருந்ததனால் லட்சுமியை விட சிறந்த பேறு பெறுவாய். உன் இதழ்களால் என்னை பூசிப்பவர்கள் அசுவமேத யாகத்திற்குண்டான பலனைப் பெறுவார்கள். எப்போதும் நீ என் நெஞ்சை அலங்கரிக்கும் மாலையாய் இருப்பாய் என்றார். திருத்துழாய் தேவி உடனே விண்ணகர் எனும் இடத்திற்கு வந்து துளசிச் செடியாய் மலர்ந்திருக்கிறாள்.

    "வண்பூங்கடிகை இளங்குமரன் தன் விண்ணகர்" என ஆழ்வார்களால் மங்களாசாசனம் ஆன தன் தந்தையாகிய பிரம்மனிடம் நாரதர் இத்தலத்து மேன்மையை கேட்பதாகவும், பிரம்மன் நாரதனுக்குச் சொல்வது போல் இத்தல வரலாறு பிரம்மாண்ட புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.

    வேண்டுதல் செய்யும் இடம்

    மிருகண்டு மகரிஷியின் மகனான மார்க்கண்டேயர் திருமகள் தனக்கு மகளாகப் பிறக்க வேண்டும். திருமால் தனக்கு மாப்பிள்ளையாகவும் வரவேண்டும் என நீண்ட நாட்களாக பல புண்ணிய தலங்களுக்கு சென்று தீர்த்தமாடி பல இடங்களுக்கு சென்று இறுதியில் திருவிண்ணகர் எனும் இப்பகுதிக்கு வந்து தவத்தைத் துவங்கினார்.

    அப்போது லட்சுமி தேவி, மழலைக் குழந்தையாக திருத்துழாய்ச் செடி மடியில் தோன்ற எடுத்து வளர்த்தார் மார்க்கண்டேயர் திருமகள் பருவத்தின் எல்லை எய்த ஓர் பங்குனி ஏகாதசி திருவோணத்தன்று திருமால் கிழப்பிராமணன் வேடங் கொண்டு வந்து மகரிஷியிடம் மகளை மணம் முடித்துத்தரக் கேட்டார்.

    நீங்கள் முதியவர். என் மகள் சிறியவள். மணம் செய்துதரக் கேட்பது சரியல்ல என்றார். மறுமொழியாய் "முதுமை உடலுக்கேயன்றி உள்ளத்துக்கில்லை. நீரே கதி'' யென்றார்.

    மகள் சமைக்கக் கூட தெரியாதவள். உணவில் உப்பு சேர்க்கக்கூட தெரியாது. ஒத்துவராது என்றார் முனிவர். உம் மகள் சமைக்கும் உப்பிலா பண்டமே எமக்கு உகப்பு. இவளை மணந்து கொள்ளாமல் இவ்விடம் விட்டு நகரமாட்டேன் என்று அமர்ந்துவிட்டார். தமது தவவலியால் வந்திருப்பவர் திருமாலே என்று உணர்ந்து கண் திறக்கும் வேளையில் சங்கு சக்கர தாரியாக பெருமாள் காட்சி தந்தார். பக்தி நிலையின் உச்சத்தில் இருந்த மார்க்கண்டேயர் தண்டனிட்டு வணங்கி அரிக்கும் அம்மங்கைக்கும் கன்னிகாதானம் செய்வித்து தமது மாப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்கிறது வரலாறு.

    உப்பில்லா நிவேதனம்

    பூதேவி சமைத்தது உப்பில்லா பண்டமானாலும் அதனை உகந்து நாம் ஏற்போம் என்று பெருமாள் சொன்னதாலேயே பெருமாளுக்கு திருமடைப்பள்ளியில் தயாராகும் உப்பில்லா நிவேதனமே இன்றும் படையலாகச் சமர்ப்பிக்கப்படுகிறது. இதனால் பெருமாள் உப்பிலியப்பன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார்.

    பெருமாளின் ஊரும் பெயரும்

    ஒப்பிலியப்பன் கோவில் என தெய்வத்தின் பெயராலும் மார்க்கண்டேய க்ஷேத்ரம் என்று ரிஷியின் பெயராலும் திருவிண்ணகரம் என்று விஷ்ணுவின் கிருகம் ( வசிப்பிடம் ) > விண்ணகரம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

    மூலவர் ஒப்பற்றவன் என்ற பொருளில் ஒப்பிலியப்பன் எனவும் தன்னொப்பாரில்லப்பன் என்று நம்மாழ்வார் அழைத்ததால் "ஒப்பிலியப்பன்" என்ற திருநாமம் பெருமாளுக்கு உண்டான பெயராகும். உப்பில்லா பண்டம் ஏற்பவனாதலால் உப்பிலி என்ற திருப்பெயர்களில் வணங்கப்படுகிறார். திருப்பதி திருவேங்கடமுடையானைப் போன்ற தோற்றத்தில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கே திருமுக மண்டலத்துடன் பெருமாளின் வலதுகரத்தில் சரம ஸ்லோகத்தின் பகுதியான "மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்பது வைரத்தால் பொறிக்கப்பட்டுள்ளது.

    தாயார்க்கு பூமிதேவி , பூமி நாச்சியார் என்று திருநாமம். பெருமாளுக்கு வலதுபுறம், கீழே மண்டியிட்டு வணங்கிக்கொண்டிருக்கும் திருக்கல்யாணக்கோலம். தனிச்சன்னிதி இல்லை. பெருமாளுக்கு இடதுபுறம் மார்க்கண்டேயர் மண்டியிட்டு வணங்கிக் கொண்டிருக்கிறார். இங்கு பெருமாள் மட்டும் தனியே புறப்பாடு ஆவது கிடையாது. எப்போதும் பிராட்டியுடன் சேர்ந்தே புறப்பாடு நடைபெறுகிறது.

    விமானம் மற்றும் சன்னதிகள்

    விஷ்ணு விமானம் சுத்தானந்த விமானம் எனப்படுகிறது. மூலவர் சன்னதி தவிர ஸ்ரீதேசிகன், ஸ்ரீஆழ்வார்கள் , ஸ்ரீராமர் , ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீஅனுமன், ஸ்ரீஎன்னப்பன், ஸ்ரீமணியப்பன், ஸ்ரீகருடன், ஸ்ரீகிருஷ்ணன் சன்னதிகள் அமைந்துள்ளன

    தீர்த்தம்

    இரவில் தீர்த்தங்களில் நீராடுவது பாவம். ஆனால், இந்த ஒரு திவ்ய தேசத்தில் மட்டும் புஷ்கரணியில் இரவு, பகலென்றில்லாமல் 24 மணி நேரமும் நீராடலாம் என்பதால்" "பகலிரா தீர்த்தம்" என்ற பொருளில் ''அஹோராத்ர புஷ்கரணி" எனவும் அஹோராத்ர தீர்த்தம் எனவும் கொண்டாடப்படுகிறது.

    கண்டு உகந்தவர்கள்

    ஒப்பிலாஅப்பன் மார்க்கண்டேயர், காவேரி, கருடன், தர்மதேவதைகளுக்கு காட்சி தந்தவர் என தொல் வரலாறு கூறுகிறது.

    மங்களாசாசனம்

    இத்தலத்தையும், பெருமானையும் பற்றி நம்மாழ்வார் 11 , திருமங்கையாழ்வார் 34, பொய்கை யாழ்வார் 1, பேயாழ்வார் 2 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளனர்

    நம்மாழ்வாருக்கு, மூலவர் விண்ணகரப்பனாகவும், உற்சவர் பொன்னப்பனாகவும், போகமூர்த்தி முத்தப்பனாகவும், தனிச் சன்னதிகளில் என்னப்பனாகவும் மணியப்பனாகவும் காட்சி அளித்திருக்கின்றார். மணியப்பனது இரு புறமும் சங்கும் சக்கரமும் அமைந்துள்ளன. முத்தப்பனுக்கு மட்டும் சந்நிதி இல்லை.

    இப்படி பெருமாளை ஐந்து வடிவங்களில் அர்ச்சாவதாரமாய்க் கண்டவர் நம்மாழ்வார்.

    காலத்தாலும் முந்திய கோவில்

    காலவெள்ளத்தில் பிற்கால அமைப்பைச் சார்ந்த கட்டிடக்கலை உடைய இக்கோவில் கோப்பரகேசரி ராஜேந்திர சோழனின் 1020-ம் ஆண்டில் உய்யக் கொண்டார் வளநாட்டு திரைமூர் நாட்டு திருநாகேஸ்வரமுடையார் திருவிண்ணகர் ஒப்பிலியப்பனுக்கு ஸ்ரீராஜேந்திர சோழனின் தளபதி சோழமூவேந்த வேளார் இளைய குஞ்சர மல்லன் அடிகள் தன் சொந்த நிதியில் இருந்து நவரத்தின கற்கள் பதித்த தங்க ஆபரணத்தை உத்தேசமாக கொடையாகக் கொடுத்ததாகக் திருநாகேஸ்வரசுவாமி கோவில் கல்வெட்டு குறிப்பிடப்படுகிறது.

    தலசிறப்புகள்

    திருப்பதி பெருமாளுக்கு, உப்பிலியப்பன் அண்ணன் என்று ஐதீகம். அதனால் , திருப்பதி போக முடியாதவர்கள், தங்கள் பிரார்த்தனைகளை இங்கே செலுத்துகிறார்கள்.

    நாளும் விழாக்களும்

    ஒவ்வொரு மாதமும் வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் மாத திருவோணம் முக்கிய நாட்கள் ஆகும். சித்திரை வருடப்பிறப்பு, ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி, வைகாசியில் வசந்த உற்சவம், ஆடியில் ஜேஷ்டாபிஷேகம் -ஆவணி மாதம் பவித்ர உற்சவம், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி , உறியடி, சறுக்குமரம், புரட்டாசி சனிக்கிழமை புரட்டாசி பிரம்மோற்சவம், தேசிகன் சாற்றுமுறை , ஐப்பசி திருக்கல்யாணம், தீபம், சொக்கப்பனை - திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திரம் அனுமத் ஜெயந்தி மார்கழியில் அத்யயன உற்சவம் ,வைகுண்ட ஏகாதசி ,தைமாதம் தெப்ப உற்சவம் பங்குனி பிரம்மோற்சவம்,ஸ்ரீராமநவமி உற்சவத்தில் புத்ரகாமேஷ்டியாகம் - ஆகியவை முக்கியமானவிழாநாட்களாகும்.

    பிரார்த்தனை வழிபாடுகள்

    சுதர்சன ஹோமம், சந்தானகிருஷ்ணன் மடியில் எழுந்தருளச்செய்தல், சொர்ணபுஷ்ப அர்ச்சனை, தங்ககவசம் சாற்றல், மூலவர், உற்சவர், ராமர், மணியப்பன், என்னப்பன், கருடன், அனுமன், கிருஷ்ணன் ஆகியோரின் பிரார்த்தனைத் திருமஞ்சனங்கள், திருக்கல்யாணம் , கருடசேவை, ஊஞ்சல் உற்சவம், தங்கரதம், கண்ணாடியறை சேவை, துலாபாரம், பரிவட்டம் சாற்றுதல் ஆகிய பிரார்த்தனை சேவைகள் நடைபெறுகின்றன.

    தனிச்சிறப்புக்கள்

    காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தரிசனத்திற்காக சன்னதிகள் திறந்திருக்கும் இக்கோவிலில் மதியத்தில் அன்னதானத்திட்டம் நடைமுறையில் உள்ளது.

    108 திவ்ய தேசங்களில் திருமால் இங்கு மட்டுந்தான் உப்பில்லா நிவேதனம் கண்டருளுகிறார்

    ஒவ்வொரு மாத சிரவண நட்சத்திரத்தன்று (திருவோண நட்சத்திரம்) சிரவண தீபம் எடுத்து அருள்வாக்கு அருளுவது இங்கு சிறப்பு ஆகும். திருப்பதி ஸ்ரீனிவாசன் போல் இவருக்கும் தனி சுப்ரபாதம் உள்ளது.

    சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் தொடரந்து இருக்கும் இக்கோவில் கால வெள்ளத்தில் பலமுறை திருப்பணிகள் நடந்து கடைசியாக திருப்பணி முடிந்து எதிர்வரும் ஜூன் 26-ல் பூர்வாங்கமாக யாக பூஜைகள் துவங்கி 26,27,28 ஆகிய நாட்களில் 6 கால பூஜை நடந்து ஜூன் 29ம் தேதி காலை 9 முதல் 10.30-க்குள் அனைத்து விமானங்கள் ராஜகோபுரம் சன்னதிகளுக்கு மகா சம்புரோக்ஷணம் எனும் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.

    சிறந்த வரலாறும் புராண அழுத்தமும் இருமொழிகளிலும் இலக்கியச்செழுமையும் உடைய இத்தலம் ஒரு சிறந்த மக்களின் குறை நீக்கும் கோவிந்தன் வாழும் பிரார்த்தனை தலமுமாகும் என்பது கூடுதல் சிறப்பாகும்.

    ×