search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழை"

    • மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று பகலில் வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு கனமழை பெய்ய ஆரம்பித்தது. மாநகரில் சந்திப்பு, மேலப்பாளையம், பாளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் பரவலாக மழை பெய்தது.

    பேட்டையில் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து சாலைகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை மண்டலத்துக்கு உட்பட்ட மாநகராட்சி 17-வது வார்டு பழைய பேட்டை சர்தார்புரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக சாலையே தெரியாத அளவிற்கு மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தேங்கிய மழைநீரில் நடந்து செல்லமுடியாமல் சிரமத்துடன் சென்றனர்.

    மாநகரில் இன்றும் காலை முதலே மாநகர பகுதி முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம் கீழ் பகுதியில் மழைநீர் தேங்கி கிடந்தது. மாநகரில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கும் பகுதிகளில் மழை காரணாக சாலைகள் சகதியாக காணப்பட்டது. பாளை வ.உ.சி. மைதானம், மகாராஜாநகர் சாலைகளிலும் குளம் போல் மழைநீர் தேங்கி கிடந்தது.

    ஆயுத பூஜை தொடர் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், காலையில் இருந்தே பெய்த மழையால் மாணவ-மாணவிகள் பெரிதும் அவதி அடைந்தனர். பணிக்கு செல்வோர் குடை பிடித்தபடி சென்றனர். அதிகபட்சமாக பாளையில் 11 மில்லிமீட்டரும், நெல்லையில் 4.4 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    மாவட்டத்தின் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை திசையன்விளை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் திடீர் கனமழை பெய்தது. அங்குள்ள சாலையோரம் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சாலையோர வியாபாரிகள் கடும் அவதி அடைந்தனர். இன்றும் காலையில் இருந்தே சாரல் அடித்தது. இதேபோல் களக்காடு, மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இன்று சாலையில் சாரல் மழை பெய்தது.

    சேரன்மகாதேவி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் நேற்று மாலையில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. இன்று அதிகாலையில் இருந்து விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்கு செல்பவர்கள் அவதி அடைந்தனர். மாவட்டத்தில் சேரன்மகாதேவியில் 10.6 மில்லிமீட்டரும், அம்பையில் 5.6 மில்லிமீட்டரும், களக்காடு மற்றும் நாங்குநேரியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

    அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அவ்வளவாக பெய்யவில்லை. என்றாலும் மணிமுத்தாறு அணை பகுதியில் மட்டும் 1.6 மில்லிமீட்டர் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காக்காச்சி, ஊத்து, நாலுமுக்கு, மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் இருந்து வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. இன்றும் காலையில் இருந்தே வெயில் அடிக்கவில்லை. இதனால் ரம்மியமான சூழ்நிலை நிலவியது. சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 44 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சிவகிரியில் லேசான சாரல் பெய்தது.

    ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது. கருப்பாநதி அணை நீர்பிடிப்பு பகுதிகளில் 10 மில்லிமீட்டரும், குண்டாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றாலத்தில் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. விடுமுறை முடிந்துவிட்டதால் அருவிக்கரைகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படவில்லை.

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் தொடங்கி இரவு வரையிலும் ஏராளமான இடங்களில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது. குறிப்பாக எட்டயபுரம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

    அதிகபட்சமாக எட்டையபுரத்தில் 15 மில்லிமீட்டர் மழை பெய்தது. கோவில்பட்டியில் 7 மில்லிமீட்டரும், சூரன்குடி, கழுகுமலையில் தலா 6 மில்லிமீட்டரும் மழை பதிவாகியது. சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் விட்டு விட்டு சாரல் அடித்தது. இன்றும் காலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    • இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்.
    • தமிழக அரசு முன்எச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுள்ளது.

    வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும்.

    இதன் காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறும் போது, "விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யலாம்."

    "சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (செவ்வாய்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்."

    "வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்."

    "நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்து இருப்பதை தொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிடுட்டுள்ளது.

    • லாரி உட்பட கனரக வாகனங்கள் 50-க்கும் மேற்பட்டவை குடி நீரில் சிக்கிக் கொண்டது.
    • வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டு வாகன ஒட்டிகள் தெரிவித்து வருகின்றனர்.

    மதுரை:

    தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து நான்கு நாட்களுக்கும் மேலாக மாலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. மதுரையில் நேற்று இரவு மட்டும் 16 செ.மீட்டர் மழை பெய்தது.

    மதுரை தமுக்கம் மைதானம், அண்ணா நகர், கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை பெய்த நிலையில், மதுரை மாநகரின் பிரதான பகுதியான மாட்டுத்தாவணியை ஒட்டியுள்ள டி.எம்.நகர் மற்றும் அதனை ஒட்டிய பல்வேறு பகுதிகளை கடந்து செல்லும் சாத்தையார் ஓடையில் கனமழையின் காரணமாக உடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து தற்போது நகருக்குள் குடியிருப்புகளை சுற்றி ஓடைநீர் புகுந்து வருகிறது. ஏற்கனவே சாத்தையார் ஓடையில் தடுப்புச் சுவர் அமைக்க பலமுறை அதிகாரிகளிடம் குடியிருப்பு வாசிகள் வலியுறுத்தியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அதிக அளவில் மழை நீருடன் ஓடை நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்துள்ளது.


    இதேபோல், மதுரை பழங்காநத்தம் பிரதான சாலையில் முல்லைப் பெரியாறு கூட்டு குடிநீர் திட்ட பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் மூலம் குடிநீர் தொட்டிக்கு செல்லக்கூடிய பைப்பு லைனில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாகி வருகிறது.

    மேலும் குடிநீர் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு பண்டக சாலை, கார் பார்க்கிங், கூட்டுறவு மருந்தகம் உள்ளிட்டவைகளில் லட்சக்கக்கணக்கான லிட்டர் குடி தண்ணீர் புகுந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இந்த வெள்ளத்தில் எம்.டி.சி. நிறுவனத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் வாகனம் மற்றும் பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட லாரி உட்பட கனரக வாகனங்கள் 50-க்கும் மேற்பட்டவை குடி நீரில் சிக்கிக் கொண்டது.

    இதனால் வாகனங்கள் பழுது ஏற்பட்டுள்ளதாக வாகன ஓட்டு வாகன ஒட்டிகள் தெரிவித்து வருகின்றனர். மேலும் தற்போது வரை பல லட்சம் லிட்டர் குடிதண்ணீர் வீணாகி எம்.டி.சி. பண்டக சாலைக்குள் புகுந்து வருகிறது.

    • பருவமழையை எதிர் கொள்வதற்காக மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் நாளை, நாளை மறுநாள் அதிகனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகைக்கு சென்றார்.

    அங்குள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின் மழைக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.

    மழை தீவிரம் அடையும் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்தார். அப்போது மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையாளர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மழைக்காக மாநகராட்சி செய்துள்ள முன்னேற்பாடுகளை உதயநிதி ஸ்டாலினுக்கு விளக்கி கூறினார்கள்.

    அப்போது உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பருவமழையை எதிர் கொள்வதற்காக மாநில அவசர கால செயல்பாட்டு மையம் மாநகராட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்தோம்.

    வானிலை எச்சரிக்கை அடிப்படையில், அமைத்து வருகின்ற சில நாட்களில் தமிழ்நாட்டில் அதி தீவிர கனமழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அதாவது 20 செ.மீட்டருக்கு மேல் மழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து அரசு எடுத்து வருகிறது.


    பொதுமக்களின் உயிரும் உடமைகளும் காக்கப்பட வேண்டும் என்பதுதான் அரசின் முதல் நோக்கமாகும். அதை மனதில் வைத்துக் கொண்டு அனைத்து பணிகளையும், மேற்கொண்டு வருகிறோம்.

    மழைக்காலத்தில் பொது மக்களுக்கு பிரத்யேக உதவி எண்ணாக 1913 என்ற நம்பர் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக கட்டுப்பாட்டு அறையில் மொத்தம் 150 பேர் 4 ஷிப்ட் முறையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    இவர்கள் பொது மக்களுக்கு தேவையான தகவல்களை உடனுக்குடன் தொலைபேசி மூலம் வழங்குகிறார்கள். அவசர உதவி தவிர மீடியா, வாட்ஸ்அப், நம்ம சென்னை தளம் ஆகியவற்றிலும் உடனுக்குடன் தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    அரசுடன் இணைந்து செயல்பட 13 ஆயிரம் தன்னார்வலர்களும் தயார் நிலையில் உள்ளனர். தண்ணீர் தேங்கினால் வெளியேற்றுவதற்காக 113 எண்ணிக்கையிலான 100 எச்.பி. பம்புகள் தாழ்வான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கக் கூடிய இடங்களில் 31 ரெயில்வே கல்வெட்டுகள் ஆழமாக சுத்தப்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னையில் உள்ள அனைத்து வார்டுகளிலும், நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த எம்.எல்.ஏ.க்கள் நிவாரண மையங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட விஷயங்களை அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி உறுதி செய்வார்கள்.

    இது மட்டுமின்றி அரசு சார்பாக தமிழ்நாடு அலெர்ட் என்ற புதிய செயலி உருவாக்கி உள்ளோம். அதனை டவுன்லோடு செய்து பொதுமக்கள் மழை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

    பல்வேறு வானிலை மாதிரிகளை பயன்படுத்தி வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளையும் கண்காணித்து வருகிறோம். தற்போது ஓரிரு இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு பெறாமல் இருந்தால், அவற்றை சுற்றி வேலி அமைக்கவும் உத்தரவிட்டு உள்ளோம்.

    பொதுமக்கள் பார்வைக்கு அப்படி ஏதாவது மூடாமல் இருக்கும் கழிவுநீர் பாதைகள் பற்றி தகவல் வந்தால் அதனை உடனே மாநகராட்சிக்கு சோஷியல் மீடியா, சமூக வலைதளம் மூலம் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.


    ரோட்டில் கிடக்கும் அனைத்து கேபிள்களையும் மூடுவதற்கு தேவையான அறிவுறுத்தல்களை மின்சார வாரியத்துக்கு தெரிவித்துள்ளோம். மற்ற மாவட்டங்களில் இருந்து கூடுதல் மின் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

    எனவே பொதுமக்கள் பாதிப்படையாத வண்ணம் அனைத்து நடவடிக்கைகளும் அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ வாட்டர் 356 பம்பிங் ஸ்டேஷனும் இயங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜெட்ராடிங், உள்ளிட்ட 673 எந்திரங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெடி விபத்தில் குடோனில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஒத்தபுலி கிராமத்தில் பழனியப்பா நகர் பகுதியில், சிவகாசி முனீஸ்நகரை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மகா கிராக்கர்ஸ் என்ற பெயரில் பட்டாசு கடை நடத்தி வருகிறார்.

    அதே பகுதியில் பட்டாசுகள் இருப்பு வைப்பதற்காக குடோன் ஒன்றும் வைத்துள்ளார். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு வகையிலான பட்டாசு ரகங்களை ராஜேந்திரன் தன்னுடைய குடோனில் இருப்பு வைத்திருந்தார்.

    இந்தநிலையில் நேற்று சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது திடீரென ஒத்தபுலி கிராமத்தில் உள்ள ராஜேந்திரனுக்கு சொந்தமான பட்டாசு குடோன் மீது இடி, மின்னல் தாக்கியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

    உடனடியாக அருகில் இருந்தவர்கள் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 2 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடும் மழையிலும் நனைந்தவாறு பல மணி நேரம் போராடி தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வெடி விபத்தில் குடோனில் வைத்திருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறியது.

    இருந்தபோதிலும், தொழிலாளர்கள் யாரும் அப்போது பணியில் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.
    • தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

    சென்னை:

    தென்மேற்கு பருவகாற்று தென் மாநிலங்களில் விலகும்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் உருவாகும். இதன் காரணமாக தமிழகத்தில் மழைப் பொழிவு அதிகமாக இருக்கும்.

    அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் இறுதி வரை இந்த பருவ காலம் நீடிக்கும். வடகிழக்கு பருவமழை எனப்படும் இந்த காலக்கட்டத்தில் நல்ல மழை பொழிவும் இருக்கும். மிக கனத்த மழை பெய்து பாதிப்புகளையும் உருவாக்கும்.

    தற்போது அரபிக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை புயல் சின்னமாக வலுவடைந்து வருகிறது. அதே நேரம் வங்கக் கடலில் அந்தமான் தீவுகளுக்கு தெற்கில் புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்பும் உள்ளது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 18-ந் தேதி வரை பரவலாக நல்ல மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கிறது.

    இன்று மாலை முதல் கடலோர மாவட்டங்களிலும், உள்மாவட்டங்களிலும் மழை பெய்ய தொடங்கும். நாளை (திங்கள்) டெல்டா மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் கனமழை முதல் மிககனமழை வரை பெய்யக் கூடும்.

    எனவே இந்த பகுதிகளுக்கு 'மஞ்சள் அலர்ட்' கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காலக் கட்டத்தில் 6 முதல் 11 செ.மீ. மழை வரை பெய்யக் கூடும் என்று கூறப்படுகிறது.

    வருகிற 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை கடலூர் தொடங்கி நெல்லூர் வரையிலான வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனத்த மழை பெய்யலாம். எனவே ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த காலத்தில் 200 மி.மீட்டர் வரை மழை பெய்யலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்று (ஞாயிறு) திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதிகளிலும் 11 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

    கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பேரிடர் மீட்பு மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. எங்கெங்கு மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது? எங்கெங்கு மின் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது என்பதை கண்காணிக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    சென்னையில் மட்டும் 10 ஆயிரம் தன்னார்வலர்களும், அரசுடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட தயாராக இருக்கிறார்கள். இதே போல் தமிழகம் முழுவதும் 65 ஆயிரம் தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

    • வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.
    • தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த ஒரு வாரமாக பரவலான மழை பெய்து வருகிறது.

    குன்னூர் நகர பகுதி மட்டுமல்லாமல் அருவங்காடு, வெலிங்டன், பாய்ஸ் கம்பெனி, எடப்பள்ளி, வண்டிச்சோலை, கரன்சி, காட்டேரி, பர்லியார், சேலாஸ், கொல கம்பை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் இருந்து இன்று காலை வரை மழை பெய்து வருகிறது.

    அவ்வப்போது இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்கிறது.

    இந்த மழைக்கு குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் மரப்பாலம் அருகே திடீர் மண் சரிவு ஏற்பட்டது. அத்துடன் சாலையில் மரங்களும் முறிந்து விழுந்தன.

    இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் குன்னூர் டி.எஸ்.பி. வீரபாண்டி, இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஜேசிபி எந்திர உதவியுடன் மண் மற்றும் மரங்களை அகற்றினர்.

    இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

    இதேபோல் இன்று காலை குன்னூர் அருகே உள்ள சிம்ஸ் பூங்கா, அடார் செல்லும் சாலையில் ராட்சத மரம் மின் கம்பி மீது விழுந்தது. உடனடியாக அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் இரண்டு மணிநேரம் போராடி மரத்தை அகற்றினர். இதேபோல் ஆங்காங்கே மழைக்கு மரங்களும், மண்சரிவும் ஏற்பட்டது. இது போன்ற நேரங்களில் மரங்களுக்கு அடியில் வாகனங்களை நிறுத்தக்கூடாது. மிதவேகத்தில் மலைப்பாதையில் வாகனங்களை இயக்க வேண்டும் என வருவாய்த்துறையினர், போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஊட்டியிலும் காலை முதல் மாலை வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தற்போது விடுமுறை என்பதால் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    நேற்று பிற்பகலில் சாரல் மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். தாவரவியல் பூங்காவுக்கு வந்த சுற்றுலா பயணிகள் கொட்டு மழையில் அங்குள்ள மலர்களை கண்டு ரசித்தனர். 

    • கடந்த 2 வார காலமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது.
    • நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 380 தண்ணீர் வரத்து இருந்தது.

    பொள்ளாச்சி:

    கோடை மழைக்கு பிறகு ஜூன் 2-வது வாரத்தில் இருந்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் ஆழியார் அணைக்கு வழக்கத்தை விட நீர்வரத்து அதிகமாக இருந்தது.

    பல நாட்கள் இரவு, பகலாக தொடர்ந்து பெய்த மழையால் ஜூலை மாதம் 2-வது வாரத்தில் 110 அடியை அணை எட்டியது.

    அதன்பிறகும் மழை தொடர்ந்ததால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்தது. 118 அடியை எட்டியதும் அணையின் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    கடந்த 2 வார காலமாக மழை சற்று குறைந்து வெயிலின் தாக்கம் இருந்தது. இருப்பினும் மலைமுகடுகள், நீரோடைகள் வழியாக அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்தது.

    இதனால் அணையின் மொத்த நீர் இருப்பு 75 நாட்களுக்கும் மேலாக அணையின் நீர்மட்டம் 115 அடிக்கு மேல் நிரம்பியவாறு கடல்போல் காட்சியளிக்கிறது.

    நேற்றைய நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 380 தண்ணீர் வரத்து இருந்தது.

    2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆழியார் அணையின் நீர்மட்டம் முழு அடியை எட்டி கடல்போல் ததும்புகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகிழக்கு பருவமழை வலுத்தால் அணைக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    மேலும் பாசனத்திற்கு போதுமான தண்ணீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆழியார் அணையில் இருந்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு உள்ளது. நடப்பாண்டில் பெய்த தென்மேற்கு பருவமழையால் ஜூலை மாதம் இறுதியில் முழு அடியை எட்டியது. தொடர்ந்து சில மாதமாக அவ்வப்போது மழை பெய்வதால், 120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் 2 மாதமாக 118 அடியாக இருந்தது.

    தற்போது 115 அடிக்கும் மேல் தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டில் இதே நாளில் அணையின் நீர்மட்டம் அதிகபட்சமாக 83 அடியாக இருந்தது. ஆனால் நடப்பாண்டில் 75 நாட்களுக்கு மேலாக 115 அடியையும் தாண்டி இருக்கிறது. வரும் நாட்களில் பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
    • திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது.

    தஞ்சையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காட்சியளித்து குளிர்ந்த காற்று வீசியது. இரவு 7 மணியளவில் இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்ததால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தஞ்சை சாந்தப்பிள்ளைகேட் ரெயில்வே கீழ்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    இதேப்போல் கும்பகோணம், ஒரத்தநாடு, வல்லம், பூதலூர், பாபநாசம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை கொட்டியது.

    இந்த மழை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சம்பா, தாளடி சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் தற்போது மாவட்டத்தில் குறுவை நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் நெல்லின் ஈரப்பதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் 22 சதவீதம் வரை ஈரப்பதம் தளர்வு அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதைப்போல் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான், நீடாமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் தாழ்வாக உள்ள பகுதிகளில் மழை நீர் தேங்கியது. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் மிகுந்த சிரமத்திற்கு இடையே தண்ணீரை கடந்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டது. மேலும் மழை நீர் வடிய அரசு வடிகால் வசதியினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேதாரண்யம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.
    • தற்போது ஒரு டன் உப்பு ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கடினல்வயல், கோடியக்காடு உள்ளிட்ட பகுதிகளில் 9000 ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெறுகிறது . தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து இங்கு தான் உப்பு உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது.

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் வரை உப்பு உற்பத்தி நடைபெறும். ஆண்டு ஒன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த ஆண்டு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி இலக்கை எட்டிய நிலையில் விற்பனை போக ஒரு லட்சம் டன் உப்பு உற்பத்தி இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வேதாரண்யம் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் உப்பள பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    மேலும் அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் நேரிடையாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இவர்கள் விவசாயம் உள்ளிட்ட பிற பணிகளுக்கு செல்கின்றனர்.

    இதையடுத்து உப்பத்தில் சேமித்து வைத்துள்ள உப்பை பனை ஓலைகள் மற்றும் தார்பாய்களைக் கொண்டு தொழிலாளர்கள் முழுமையாக மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர்.

    தற்போது ஒரு டன் உப்பு ரூ.1200 முதல் ரூ.1500 வரை விற்பனை ஆகிறது. மழைக்கால விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பிற்கு கூடுதல் விலை கிடைக்கும் எனவும் மீண்டும் மூன்றுமாத ஓய்விற்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உப்பு உற்பத்தி தொடங்கப்படும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். 

    • ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் முன்னிலையிலேயே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
    • நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் முடிவடைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் மழை காலங்களில் மிகப்பெரிய வெள்ள பாதிப்புகளை ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த முறை வெள்ளப்பெருக்கால் ஒரு உயிரிழப்பு கூட ஏற்பட்டு விடக்கூடாது, மழை பாதிப்புகளில் மக்கள் சிரமப்படக் கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    அவரது உத்தரவை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகளை கண்டறியவும், பொதுமக்களிடம் கள நிலவரத்தை நேரில் கேட்டு அறிந்து அதற்கான தீர்வுகளை மேற்கொள்ளவும் புதுவிதமான முயற்சிகளை மேற்கொண்டு களத்தில் இறங்கினார்.

    அதன்படி ஒவ்வொரு மண்டலத்திலும் மக்கள் முன்னிலையிலேயே ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நேற்று அடையாறு மண்டலத்தில் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், மின்சார வாரியம், சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட 20 அரசுத்துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    முக்கியமாக அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த ஆய்வுக்கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், அடையாறு மண்டலத்தில் உள்ள வேளச்சேரி பகுதியில் கடந்த ஆண்டு எங்கெல்லாம் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது, தற்போது அந்த பகுதிகளில் என்னென்ன சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உடனே பொதுமக்கள் எந்தெந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் உள்ளன, இந்த முறை எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் தேங்க வாய்ப்பு உள்ளது என்பதை சுட்டிக்காட்டினார்கள்.

    உடனே சம்பந்தப்பட்ட துறை அதிகாரியிடம், 'பொதுமக்கள் தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு இன்னும் 2 நாட்களில் சீரமைப்பு பணிகளை முடித்து கொடுக்க வேண்டும்' என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார்.

    சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த இந்த கூட்டத்தில் மழைநீர் பாதிப்பை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதுபற்றி அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

    சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை தடுக்க பொதுமக்கள், தன்னார்வலர்கள், பொது நலச்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம். இந்த மண்டலத்தில் கடந்த ஆண்டு பாதிப்பு ஏற்பட்ட பின் இங்கு என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்பது குறித்து விளக்கமாக தெரிவித்து உள்ளோம்.

    முக்கிய நீர் நிலைகள் இந்த மண்டலத்தில் உள்ளது. 98 சதவீதம் நீர் நிலைகளில் தூர் வாரும் பணிகள் முடிவடைந்து உள்ளது. பழுது ஏற்பட்டுள்ள சாலைகளை விரைவில் போட வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். பொதுமக்களும், குடியிருப்போர் நலச்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் தங்கள் பகுதியில் உள்ள பாதிப்புகளை தெரிவித்தனர். அதனை சரி செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து அதிகாரிகளும் இங்கு இருந்ததால் அவர்களும் 2 நாட்களில் நேரடியாக சென்று பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    மழைநீர் வடிகால் பணிகளை பொறுத்தவரை முடிவடையும் நிலையில் உள்ளது. பணிகளை முடிக்க துரிதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மழை நீரை சமாளிப்போம், வெல்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மதுரவாயல் பகுதியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு கூட்டம் நடத்துகிறார். வருகிற 16-ந்தேதி கோடம்பாக்கம் மண்டலத்திலும், 17-ந்தேதி பெருங்குடி மண்டலத்திலும், 18-ந்தேதி சோழிங்கநல்லூர் மண்டலத்திலும் ஆய்வுக்கூட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடத்துகிறார்.

    • சிவதாபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை கொட்டி வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. தொடர்ந்து ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததன் காரணமாக ஏரி நிரம்பி அருகில் உள்ள சிவதாபுரம் பகுதிக்கு தண்ணீர் சென்றது. இதனால் சாலைகளில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் சிவதாபுரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிவதாபுரம் வழியாக சித்தர்கோவில், இளம்பிள்ளை செல்லும் சாலையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வீடுகளில் புகுந்த தண்ணீரை அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    ×